நேசமுடன்
 மடல் இதழ்
Home Page
Home Page
இது சமரசங்களின் காலம்!
தொலைநோக்கு விகடன்
உறுபசி
எழுத்தும், எழுத்தைச் சார்ந்தும்...
பதிப்புத் தொழிலுக்கு என்று தனியிதழ்
பிரிவுகள்
அறை: வெளி
கடைசீப் பெட்டி
கவனிக்க மறுக்கும் அரசியல்
ரூபங்கள்
இதயவீணை தூங்கும்போது
கரிசல்
காய்
நிறங்கள்
என்னதான் பின்?

Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தொடர்புகொள்ள
வெங்கடேஷ்
  நாள் : 2/2/2006 1:39:03 AM, -வெங்கடேஷ்
  தொலைநோக்கு விகடன்

Balasubramaniam and Srinivasanசென்ற வாரம் ஒரு நாள் சென்னையில் இருந்தபோது, விகடன் எடிட்டோரியல் அலுவலகம் போகவேண்டியிருந்தது. விகடன் ஜேஎம்டி   சீனிவாசன் மற்றும் அங்குள்ள எடிட்டோரியல் நண்பர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். உண்மையில் மகிழ்ச்சியான சந்திப்பு. நண்பர் வேல்ஸ் இன்னும் புது எடிட்டோரியல் நண்பர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

விகடன் எடிட்டோரியலில் உள்ள பெரும்பாலானவர்கள் (இல்லை அனைவருமேவா?) விகடன் மாணவ நிருபர் திட்டத்தில் இருந்து வந்தவர்கள். விகடனில் மாணவ பத்திரிகையாளர் திட்டம் ஏற்படுத்தப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு ஆனந்த விகடனின் ஆசிரியராக இருக்கும் அசோகன் அதன் ஆரம்பகால மாணவர்களில் ஒருவர். அதே போல் ஒவ்வொரு விகடன் இதழ் பொறுப்பாசிரியர்களும் அத்திட்டத்தினால் உருவானவர்கள்.

கண் எதிரேயே ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாகத் தோன்றியது. பொதுவாக, ஹை புரொபைல் ஆசிரியர்களை வெளியில் இருந்து கொண்டு வந்து வைத்து பத்திரிகையை நடத்துவதைவிட, அதே பட்டறையில் போட்டு பட்டைத் தீட்டி, உருவேற்றி, தயார் செய்து, பின்னர் பொறுப்புக்களைக் கொடுப்பது என்பது உண்மையில் மிகப்பெரிய வேலை. சொல்லப்போனால், தொலைநோக்கு இல்லையென்றால் இத்தகைய ஓர் அற்புதம் நடந்திருக்கவே வாய்ப்பில்லை.

இருபதாண்டுகள், இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, நாம் இப்படியெல்லாம் வளருவோம், நமக்கு இப்படியான பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அன்று தேவைப்படுவார்கள் என்று எண்பதுகளின் தொடக்கத்திலேயே யோசித்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியத்தைத்தான் நாம் மெச்ச வேண்டும். அந்தத் தொலைநோக்கு இன்றைக்கு எப்படியெல்லாம் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது பாருங்கள்.

இன்னொன்றையும் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு மாதமும் விகடன் ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் தமிழகம் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டுமாம். மக்களோடு மக்களாக இணைந்து, அவர்கள் விரும்புவது விரும்பாதது, பொதுவாக பேசிக்கொள்வது என்று அத்தனை விவரங்களையும் திரட்டிக்கொள்ள வேண்டும். அதிலிருந்து பெறப்படும் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு விகடன் இதழ்களின் மேட்டர்கள் மாற்றியமைக்கப்படுகின்றன, புதுப் பகுதிகள் உருவாக்கப்படுகின்றன, மெருகேற்றப்படுகின்றன. ஒரு புரொபஷ்னல் மார்க்கெட்டிங் கம்பெனி பண்ணவேண்டிய வேலை இது. ஆனால், எடிட்டோரியலே இதை முன்நின்று செய்கிறது. பலன், நேரடி அனுபவம், நேரடி படிப்பினைகள், நேரடி மாற்றங்கள்.

Leveraging the Brand என்று ஒன்றைச் சொல்வார்கள். எனக்குத் தெரிந்து விகடன் மாதிரி வேறு யாரும் அதைச் செய்யவில்லை. விகடன் இன்று தன்னை வளர்த்துக்கொண்டு போகும் விதம் முழுவதும் அதன் பிராண்ட் மேல் உள்ள நம்பிக்கையினால்தான். சுட்டி விகடன், அவள் விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன் என்று ஒவ்வொரு செக்மெண்ட்டையும் விகடன் நிரப்பிக்கொண்டே வருகிறது. ஆட்டோமொபைல் இன்டஸ்டிரியை மையமாக வைத்து இப்போது முனனோட்டம் ஓடிக்கொண்டிருக்கும் மோட்டார் விகடன் அடுத்த தனிப் பத்திரிகையாகிவிடும். அத்தோடு ஏற்கனவே வெளியான இளமை விகடன் ஒன்று இருக்கிறது. இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் ·பார்மா விகடன், ஐடி விகடன், டெலிகாம் விகடன், பிராண்ட் விகடன், விவசாய விகடன், டிராவல் விகடன் என்று வரிசையாக விகடன் குட்டிகள் போடாமல் விடாது.

ஆழ உழுவதைப் போலவே அகல உழுவதையும் விகடன் செய்கிறது. ஏற்கனவே விகடன் டெலிவிஸ்டாஸ் என்று டெலிவிஷன் பக்கம் வந்து, வெற்றிகரமான சீரியல்களை வழங்கிவிட்டார்கள். விகடன் பிரசுரம் தொடங்கி, அதையும் வெற்றிகரமாக்கிவிட்டார்கள் ( சமீபத்திய சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போனவர்களுக்குத் தெரியும். மக்கள் வரிசையில் நின்று புத்தங்கள் வாங்கினார்கள்). விகடன் போஸ்ட் என்று ஒரு முறை மாலைப் பத்திரிகை நடத்திக் கையைச் சுட்டுக்கொண்டார்கள். இன்று வளரும் வேகத்தில் அது வேறு விதமாக மறுஅவதாரம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எதிர்காலத்தில் தனித் தொலைக்காட்சி தொடங்கலாம். எப்எம் ரேடியோ தொடங்கலாம். சினிமா எடுக்கலாம். இன்னும் மீடியா சார்ந்து மிச்சமிருக்கும் ஈபப்ளிஷிங், ஈபேப்பர், ஏஷியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் மாதிரி ஒரு இதழியல் கல்லூரி போன்றவைகளைத் தொடங்கலாம். புத்ததகக் கடைகளைத் தமிழகமெங்கும் உருவாக்கலாம். வளர்ச்சிக்கு எல்லையே கிடையாது. இதை நினைக்கும்போதெல்லாம் தொலைநோக்கு உள்ள இருவர்தான் ஞாபகம் வருகிறார்கள். அப்பாவும் பிள்ளையும்.

அப்பா பாலசுப்பிரமணியம். பத்தாண்டுகளுக்கு முன்பு விகடனில் கதைகள் கொடுக்க அவர்கள் அண்ணா சாலை அலுவலகம் போவேன். ஒரு நாள் நண்பர் ரமேஷ் வைத்யாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சட்டென எழுந்து நின்றுகொண்டார். "எடிட்டர் வரார்" என்றார். எதிரே காரிலிருந்து தளரதளர வேட்டி கட்டிக்கொண்டு சிவந்த உதடுகளோடு ஒருவர் இறங்கினார். கையில் வெற்றிலை செல்லம் மாதிரி ஒரு பெட்டி. மெல்ல நடந்து படியேறிப் போனார். அவரை அதுவரை புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என்று நினைத்த நபர்களில் ஒருவர். இதுவரை சந்தித்ததில்லை.

பிள்ளை சீனிவாசன். தொண்ணூறுகளின் இறுதியில் அண்ணாசாலையில் இருந்த (இப்போதும் இருக்கும்) புக் பாய்ண்ட் புத்தகக் கடைக்கு, பெர்முடாஸ் போட்டுக்கொண்டு, மனைவியோடும் ஒரு குழந்தையோடும் புத்தகக் கடைக்கு வருவார் சீனிவாசன். நேரே குழந்தைகள் செக்ஷனுக்குப் போய் ரொம்பநேரம் குழந்தைகள் புத்தகங்களாகப் பார்த்துக்கொண்டிருப்பார். அந்த ஆராய்ச்சியும் ஈடுபாடும்தான் சுட்டி விகடனுக்கு அடிப்படை என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த வரும் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் அவரே பிள்ளையார் சுழி போடுகிறார் என்று நினைக்கிறேன். அன்று பேச வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். பத்தாண்டு கால ஓட்டத்தில் நானும் அவரோடு தொடர்ந்து பேசும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

கண்ணெதிரேயே ஒரு மீடியா சாம்ராஜ்யம் உருவாகிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் விகடன் மேலும் வளர்ச்சி பெற, பங்குச் சந்தைப் பக்கம் ஐபிஓ-உடன் வந்தார்களானால், நான் கண்ணை மூடிக்கொண்டு பங்குகளை வாங்கிப் போட்டுவிடுவேன். தொலைநோக்கை வெற்றிபெறச் செய்தவர்கள் அவர்கள். மேலும் தொலைநோக்கோடே இருப்பவர்களும் கூட.


  |Refer to friend|மதிப்பு : 3.6 |மதிப்பீடு :  | Print this article |
 
 
மறுமொழி(கள்)
டோண்டு
2/2/2006 , 3:36:34 AM
வருக வெங்கடேஷ் அவர்களே. மட்டுறுத்தலை செயல்படுத்தாவிட்டால் அவ்வாறு செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

"இதை நினைக்கும்போதெல்லாம் தொலைநோக்கு உள்ள இருவர்தான் ஞாபகம் வருகிறார்கள். அப்பாவும் பிள்ளையும்."
ஆனால் எனக்கு தாத்தா வாசனும் நினைவுக்கு வருகிறார்.

அறுபது, எழுபதுகளில் விகடனில் சற்றே தொய்விருந்தது. 1978ஆம் வருட முதல் இதழுடன் விகடன் மீண்டும் பொலிவு பெற்று எழுந்தது. மணியன், தாமரை மணாளன், லட்சுமி சுப்பிரமணியம் ஆகியோர் விலகி "இதயம் பேசுகிறது" பத்திரிகையும் அப்போதுதான் ஆரம்பித்தது. விகடனைப் பீடித்த கிரகணம் விலகியது என நான் அப்போதே நினைத்தேன். அந்த முதல் இதழில் பல வருடங்கள் கழித்து அட்டைப்பட ஜோக் வேறு வந்திருந்தது. அப்போதெல்லாம் சினிமா விமரிசனங்களைப் புது மாதிரி விகடன் குழுவினர் எழுதி வந்தனர்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய இந்தத் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
   
balaji
2/2/2006 , 10:30:08 AM
என்னோட ஃபேவரிட் - சினிமாப் பக்கமும் வருவார்களா ;-)
   
KVR
2/3/2006 , 1:54:16 PM
//என்னோட ஃபேவரிட் - சினிமாப் பக்கமும் வருவார்களா ;-)//

என்ன பாபா இப்படி கேக்குறிங்க, அவங்க தாத்தா வாசன் தமிழ் சினிமாவையே கலக்கிவர் தானே!!!
   
மாயவரத்தான்
2/8/2006 , 12:19:01 PM
//விகடன் எடிட்டோரியலில் உள்ள பெரும்பாலானவர்கள் (இல்லை அனைவருமேவா?)//
இப்போதுள்ள எடிட்டோரியலில் உள்ள 99 சதவிகிதம் பேர்
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)

Copyright © 2005 வெங்கடேஷ்
Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.