நாகூர் ரூமி
முன்னுரை
தலைவர்கள் கொல்லப்பட்ட நாட்கள், மதக்கலவரம் வெடித்த நாட்கள், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நாட்கள், நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்பட்ட நாட்கள் என கறுப்பு நாட்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்ற காலமாகிவிட்டது நமது தற்காலம். இந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக இடம் பிடித்திருப்பது ஒரு கொடூரமான செயல். கல்லால் அடித்து விலை மதிப்பற்ற மனித உயிர்களை வாங்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். அதைச் செய்வது தனி மனிதர்களோ, தீவிரவாதிகளோ, சமூக விரோத சக்திகளோ அல்ல. அரசாங்கங்கள்! ஆம், அதுவும் இஸ்லாம் எனும் அமைதி மார்க்கத்தின் பெயரால்!
கறுப்பு நாட்களின் வரிசையில் ஜூலை 11ம் இப்போது சேர்ந்து விட்டது. காரணம், கடந்த 2001ம் ஆண்டு, இதே தேதியில்தான் மர்யம் அய்யூபி என்ற ஈரானியப் பெண், கூடா உறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு, அதற்காக இஸ்லாமிய ஷரியத் சட்ட தண்டனை என்ற பெயரில் கற்களால் அடித்து கொல்லப்பட்டார். அந்த நாளைத்தான், கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிரான சர்வதேச எதிர்ப்பு நாளாக (International Day Against Stoning to Death) மனசாட்சி உள்ள மனிதர்கள் இன்று அனுஷ்டிக்கிறார்கள்.
ஒரு மனிதன் என்ற முறையிலும், ஒரு முஸ்லிம் என்ற முறையிலும், இந்த விஷயம் பற்றி என் கருத்த வெளிப்படையாக முன் வைப்பது எனது கடமை. அதற்கு முன் கல்லால் அடித்துக் கொல்வது என்றால் என்ன என்று கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது.
நீ போய் நேரில் பார்த்திருக்கிறாயா என்று கேட்டால், இல்லை என்பது மட்டுமல்ல, அந்த மாபாதகச் செயலைப் பார்க்கின்ற தைரியம் எனக்கில்லை என்பதையும் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டதை நாம் அறிவோம். இணையத்தளங்கள் மூலமாக எல்லா விஷயங்களைப் பற்றிய உண்மைகளும் அவற்றுக்கே உரிய காட்சிகள், ஒலிகள், வண்ணங்களுடன் நமது வீட்டுக்குள் வந்து விழுந்துவிடுகின்றன. அப்படித் தெரிந்துகொண்டதுதான்.
சில நாட்களுக்கு முன் திண்ணையில் நண்பர் ஆசாரகீனன் இந்த விஷயம் பற்றி ஒரு கட்டுரை எழுதி, கல்லால் அடித்துக் கொல்வதற்கான கண்டனத்தை நைஜீரிய ஈரான் அரசுகளின் அதிபர்களுக்குத் தெரிவிக்கும்படி ஒரு வேண்டுகோள் வைத்து, அதற்கான ஈ மெயில் முகவரிகளையும் கொடுத்திருந்தார். அதோடு, ஈரானில் நிறைவேற்றப்பட்ட ஒரு தண்டனையின் வீடியோப் பதிவு கிடைக்கும் சுட்டியையும் கொடுத்திருந்தார். அது இதுதான் : www.iran-e-azad.org/stoning/video.html
நான் கடின மனம் கொண்டவன் இல்லையென்றாலும் வேண்டுமென்றே பார்த்தேன். நல்லவேளையாக வீடியோ தெளிவாக இல்லை. ஒரு அனுமானத்தின் பேரிலேயே நடந்தது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. என்றாலும் என் இதயம் வேகமாகத் துடிப்பதிலிருந்தும் என் உடல் ஜில்லிடுவதிலிருந்தும் ரொம்ப நேரம் விடுபட முடியவில்லை.
அதை நான் பார்த்ததிலிருந்தும், அதைப்பற்றி படித்ததிலிருந்தும் புரிந்துகொண்டதை உங்கள் முன் வைக்கிறேன். இது ரொம்ப அவசியம் என்றும் நான் கருதுகிறேன்.
கல்லால் அடித்துக் கொல்லுதல் எப்படி நடக்கிறது?
தரையில் ஒரு ஆழமான குழி வெட்டப்படுகிறது. ஒரு 30 வயதுப் பெண் காலிலிருந்து தோள்வரை கட்டப்பட்டவளாக, இறந்தபின் உடலில் போர்த்தப்படும் தையலில்லாத வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டு அந்த குழிக்குள் உயிருடன் இறக்கப்படுகிறாள். அவளுடைய கழுத்தும் தலையும் மட்டும்தான் வெளியில் தெரிகின்றன.
குற்றப்பத்திரிக்கை நீதிபதி(!)யால் வாசிக்கப்படுகிறது. அரபி மொழியில். உத்தரவு கொடுக்கப்பட்டவுடன், அல்லாஹ¤ அக்பர் என்ற கோஷம் கூடி நிற்கும் ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து கிளம்புகிறது. கை முஷ்டி அளவுள்ள கல்லை நீட்டிக்கொண்டிருக்கும் அப்பெண்ணின் தலையை நோக்கி ஒருவன் வீசுகிறான். டக்கென அந்தக் கல் அவள் தலையில் அடிக்கிறது. வலி பொறுக்க முடியாமல் அவள் அலறுகிறாள். (ஈரானிய கல்லடித்துக் கொல்லும் சட்டத்தின் பிரிவு 104ன் படி, அடிக்கப் பயன்படுத்தப்படும் கற்கள் ரொம்ப பெரிதாக இருக்கக் கூடாது. ஓரிரு அடிகளில் மரணத்தை வரவழைத்துவிடக் கூடாது. ரொம்ப சின்னதாக கூழாங்கற்களைப் போலவும் இருக்கக் கூடாது! அதாவது, உயிர் போவது மட்டும் முக்கியமல்ல, வலியும் வேதனையும் சித்ரவதையும் முழுமையாக உணரப்பட வேண்டும், மெல்லச் சாகவேண்டும்!)
முகத்தின் கீழ்ப்பகுதிவரை ரத்தம் வழிந்தோடி வருகிறது. இன்னொருவன் ஒரு கல்லால் அவள் பொட்டைப் பதம் பார்க்கிறான். அங்கும் ரத்தம். மறுபடியும் அவளின் அலறல். எல்லாருக்கும் அது இலவச வாய்ப்பாகையால், ஒரு இளைஞன் ஒரு கல்லை எடுத்து அடிக்கிறான். ஆனால் அவன் குறி தப்பிவிடுகிறது. ஆனால் இன்னொருவனின் கல் தன் இலக்கை சரியாக அடைந்துவிடுகிறது. அவள் நெற்றி! கருணைக்காக அவள் கதறுகிறாள். இப்போது ரத்தம் நெற்றியிலிருந்து பொங்கி வருகின்றது. கண்கள், மூக்கு, கன்னம், வாய், தரை என.
நிமிஷங்கள் ஊர்ந்து ஒரு மணி நேரமாகிறது. இதற்கிடையில், குறி தவறுதல்கள், இலக்கை கற்கள் அடைவது, அலறல், ரத்தம் -- இந்த வரிசையில் தொடர்ந்து நடக்கிறது.
அவள் மூக்கை ஒரு கல் உடைக்கிறது. இப்போது மூக்கின் உள்ளிருந்தும் ரத்தம் ஓடிவருகிறது. ஆனால் இப்போது அவளுடைய அலறல்கள் முன்னைப்போல பெருங்குரல் கொண்டதாக இல்லை. கொஞ்சம் அடங்கிப் போயிருக்கிறது. அவளுடைய கண்ணீர் கொஞ்சம் ரத்தத்தை அவளுடைய முகத்திலிருந்து கழுவ உதவுகிறது. ரத்தம் ஆங்காங்கே கட்டிக் கட்டி, அவளுடைய பார்வை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. அடுத்த கல்லின் அடியில் கொஞ்சம் முகச்சதை பெயர்ந்து விழுகிறது. அது அவள் விழிக்கோளங்களா?! சரியாகத் தெரியவில்லை.
அவளுடைய முகம் முழுவதையும் ரத்தம் ஆக்கிரமித்துக்கொள்கிறது. இன்னும் அவளிடமிருந்து முனகல்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. கல்லால் அடித்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது அவள் முகமற்றவளாகிவிடுகிறாள். ஒரு மனித முகம் இருந்த இடத்தில் பார்க்கச் சகியாத ஒரு சதைக் கொத்து இருக்கிறது. தலைமுடியைப் போல ஆங்காங்கு முகச் சதைகளும் தலைச்சதையும் பிய்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. கல்லடிப்பு தொடர்கிறது.
கடைசியில் மரணம் அவளை வந்தடைகிறது. ஆனால் அதன் பிறகும் ஒரு சில மணி நேரங்கள் அவள் அங்கேயே விடப்படுகிறாள். கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டால் என்னாகும் என்பதைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்காக!
கடைசியில் அவளுடைய தந்தையோ, உறவினர்களோ அவளை குழியிலிருந்து விடுவித்து, உடம்பை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். (அவள் அடிபட்டுச் சாவதைப் பார்ப்பதற்காக அவர்கள் வற்புறுத்தி அழைத்துவரப்படுகின்றனர்)! தரையில் சிதறிக் கிடக்கும் அந்த மகளின் முகத்துண்டுகளை பொறுக்கிக் கொண்டு, அந்த உடம்பை எடுத்துக்கொண்டு அவர்கள் செல்கின்றனர்.
இந்தப் பெண் உங்களுடைய தாயாக, சகோதரியாக, தோழியாக இருக்கும் பட்சம் உங்களுக்கு எப்படியிருக்கும்?
ஏன் இந்த தண்டனை?
ஈரான், நைஜீரியா, ஆ·ப்கனிஸ்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா, சூடான் போன்ற நாடுகளில் பாலியல் குற்றங்களுக்காக, இஸ்லாமிய சட்டம் என்று சொல்லி கல்லால் அடித்துக் கொல்லும் இந்தக் கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது.
என்ன குற்றம்?
ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று adultery. இன்னொன்று fornication. 'அடல்ட்ரி' என்பது, ஒரு கல்யாணமான ஆண் அல்லது பெண், தன் மனைவி அல்லது கணவன் அல்லாத வேறொரு ஆளோடு உடலுறவு வைத்துக்கொள்வதைக் குறிக்கும். '·போர்னிகேஷன்' என்பது, கல்யாணமாகாத ஆண் பெண்ணுக்கிடையேயான உடலுறவைக் குறிக்கிறது. இதில் ஒருவர் மட்டும் கல்யாணமானவர், இன்னொருவர் ஆகாதவர் என்றால், அதில் 'அடல்ட்ரி'யும் '·போர்னிகேஷ'னும் சேர்ந்திருப்பதாக அர்த்தம்.
'அடல்ட்ரி', '·போர்னிகேஷன்' என்ற இரண்டிற்குமிடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஏனெனில், அதன் அடிப்படையில்தான் இத் தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன.
கூடாவொழுக்கம் இஸ்லாத்தின் பார்வையில் பெரும்பாவமாகக் கருதப்படுகிறது. உடலுறவிலும் ஒழுக்கத்தையே இஸ்லாம் போதிக்கிறது. ஒழுக்கக் குறைவுக்கான தண்டனையாகத்தான் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில் இந்த தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
என்ன ஆதாரம்?
இஸ்லாமிய சட்டம் என்று சொல்லும்போதே, அதற்கு இரண்டு மூலங்கள்தான். ஒன்று இறைவனால் அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன். இன்னொன்று, இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஸ¤ன்னத் எனும் வழிமுறை. இந்த வழிமுறை ஹதீதுகளின் மூலமாக அறியப்படுகிறது.
திருக்குர்ஆன் என்ன சொல்கிறது?
திருக்குர்ஆனில் இந்த விஷயம் பற்றி இறைவன் மிகத்தெளிவாகக் கூறுகிறான். உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ; அதற்கான உறுதியான நான்கு சாட்சிகள் வேண்டும் ; பொய்சாட்சி சொன்னவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களை விளக்கும் விதமாக(வும்) திருமறையின் 24வது அத்தியாயமான சூரா நூர் அமைந்துள்ளது. அதில் இரண்டாவது வசனம்
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ 'ஜினா' செய்வாரேயானால், அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது இறைவனின் கட்டளை. இறைவன் மீதும் அவனுடைய இறுதித்தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த விஷயத்தில் இரக்கம் காட்டக்கூடாது. நம்பிக்கையாளர்களில் ஒரு குழுவினர் இதற்கு சாட்சியாக இருக்கட்டும்
என்று கூறுகிறது (அர்த்தத்தை மட்டும் நான் எனது மொழியில் இங்கே கொடுத்துள்ளேன்).
'ஜினா' -- ஒரு விளக்கம்
வேண்டுமென்றேதான் நான் 'ஜினா' (zina) என்ற அரபிச் சொல்லை தமிழாக்கத்தில் பயன்படுத்தினேன். காரணம், மேற்கூறிய கல்லடிக் கொல்லரசுகளால் அந்த சொல்லுக்கு fornication என்று மட்டும் அர்த்தப்படுத்தப் படுகிறது. ஆனால் 'ஜினா' என்ற சொல் 'அடல்ட்ரி', '·போர்னிகேஷன்' இரண்டையுமே குறிப்பதாகவும், ஒழுக்கக்குறைவைப் பொறுத்தவரையில் அவர்கள் திருமணமானவர்களா, ஆகாதவர்களா என்று ஆண்டவனும் அரபி மொழியும் பார்க்கவில்லை என்பதாகவும்தான் பல பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கருதுகிறார்கள்.
உதாரணமாக, 'ஜினா' என்பது தங்களுக்குள் திருமணமாகாத இரண்டு பேருடைய உடலுறவைக் குறிக்கும் என்று யூசு·ப் அலி விளக்குகிறார். அதாவது, குறிப்பிட்ட ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்ட இருவரும் திருமணமாகாதவர்களாக இருக்கலாம். (அதாவது '·போர்னிகேஷன்' செய்தவர்களாக). அல்லது திருமணமானவர்கள் என்றால், அந்த ஆண் வேறொரு பெண்ணின் கணவனாகவும், அந்த பெண் வேறொருவரின் மனைவியாகவும் இருப்பார்கள். (அதாவது 'அடல்ட்ரி' செய்தவர்களாக).
எப்படியிருப்பினும், அவர்கள் 'தங்களுக்குள்' திருமணமாகாதவர்களே. இந்த இரண்டு விதமானவர்களுடைய புணர்ச்சியையும் 'ஜினா' என்ற சொல் குறிக்கிறது என்கிறார் யூசு·ப் அலி.
இந்தியாவின் தலை சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலானா அப்துல் மஜீத் தர்யாபாதி, தனது 'த·ப்ஸீருல் குர்ஆன்' என்ற விரிவுரையின் மூன்றாவது வால்யூமில், மேற்கண்ட இறைவசனத்துக்கு, "ஜனா என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில், அவர்கள் திருமணமானவர்களோ அல்லவோ, ஏற்படும் முறைசாராக் கலவியையே குறிக்கிறது" என்று, யூசு·ப் அலி கூறும் விளக்கத்தை ஒட்டிய, தனது விளக்கத்தை அளிக்கிறார்.
"ஜினா என்பது தங்களுக்குள் திருமண உறவு ஏற்பட்டிராத ஒரு ஆணுக்கும் பெண்ணும் இடையில் ஏற்படும் தன்னார்வ உடலுறவைக் குறிக்கிறது. இதில் அவர்களில் ஒருவர் அல்லது இரண்டு பேருமே மற்றவரைத் திருமணம் செய்துகொண்டவர்களாக இருந்தாலும் சரி, இல்லாமலிருந்தாலும் சரி. எனவே ஜினா என்ற சொல், மேற்கத்திய மொழிகளில் இருப்பதுபோல, அடல்ட்ரி என்றும் ·போர்னிகேஷன் என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை" என்று முஹம்மது அசது என்ற மொழிபெயர்ப்பாளர் கூறுவதும் கவனிக்கத்தக்கது.
உண்மை இப்படி இருக்கும்போது, கல்லடி, இறக்கும்வரை அடிப்பது போன்ற எதைப்பற்றியுமே இறைவன் தன் திருமறையில் ஒன்றுமே கூறியிருக்காத நிலையில், மேற்கண்ட 'குற்றம்' இழைத்தவர்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்ற சட்டம் எங்கிருந்து வருகிறது?
ஹதீஸிலிருந்து! ஆம். 'அடல்ட்ரி' செய்தவர்களை கல்லாலடித்துக் கொல்லும்படி நபிகள் நாயகம் சொன்னதாக நாலைந்து ஹதீதுகள் ஆதாரப்பூர்வமான ஹதீது தொகுப்பான புகாரியில் வருகின்றன!
ஆகவே, '·போர்னிகேஷன்' செய்தவர்களைத்தான் 'ஜினா' குறிக்கிறது என்றும், அவர்களுக்குத்தான் நூறு கசையடிகள் என்பதாகவும், 'அடல்ட்ரி' செய்தவர்களை நபிவழிப்படி கல்லாலடித்துக் கொல்லவேண்டும் என்றும் 'சட்ட வல்லுணர்கள்' கூறுகிறார்கள்! நபிகள் நாயகம் அப்படிச் செய்தார்களா?
புகாரி ஹதீதுகள்
1. ஒரு யூதரும் ஒரு யூதப்பெண்ணும் இந்தக் குற்றம் செய்ததற்காக நபிகள் நாயகம் முன்னிலயில் கொண்டுவரப்படுகின்றனர். அவர்களுடைய வேத நூலான மோஸஸின் 'தவ்ராத்'தில் (ட்டோரா) உள்ள யூத சட்டப்படி, கல்லால் அடித்துக் கொல்லப்படவேண்டும் என்று நாயகம் சொன்னதாகவும் அதன் படியே செய்யப்பட்டதாகவும் ஒரு ஹதீது. இதை அப்துல்லாஹ் இப்னு உமர் என்பவர் அறிவிக்கிறார் (ஹதீது எண் 4.829)
2. பனீ அஸ்லம் என்ற குலத்தைச் சேர்ந்த ஒரு திருமணமான ஆண், தான் இந்தக் குற்றம் செய்ததாகவும், அவருக்கு எதிராக அவரே நான்கு முறை சாட்சி சொன்னதால், அவரை கல்லாலடித்துக் கொல்லும்படியும் நபிகள் நாயகம் உத்தரவிட்டார்கள் என்று ஒரு ஹதீது. இதை அறிவிப்பவர் ஜபீர் இப்னு அப்துல்லாஹ் அல் அன்சாரி. (ஹதீது எண் 8.805)
3. "அல்லாஹ்வுடைய தூதர் ரஜம் (கல்லால் அடித்துக் கொல்லச் செய்யும் தண்டனை) நிறைவேற்றச் சொன்னார்களா?" என்று அஷ்-ஷைபானி என்பவர் அப்துல்லாஹ் இப்னு அபீ ஔ·பா என்பவரிடம் கேட்க, அதற்கு அவர், "ஆமாம்" என்று பதில் சொல்கிறார். " (இந்தக் குற்றத்துக்கான தண்டனை 100 கசையடிகள் என்று உத்தரவிடும்) சூரா நூர் அத்தியாயம் அருளப்பட்ட பிறகா அல்லது அதற்கு முன்பா?" என்று அவர் மறுபடியும் கேட்க, "எனக்குத் தெரியாது" என்று பதில் வருகிறது. இந்த ஹதீதை அஷ்-ஷைபானி அறிவிக்கிறார். (எண் 8.804). இதே ஹதீது மறுபடியும் சொல்லப்படுகிறது (எண் 8.824)
4. கல்லால் அடிப்பது பற்றி ஒரு இறைவசனம் அருளப்பட்டது என்றும், அது பின்னாளில் இழக்கப்பட்டது என்றும், இறைத்தூதர் கல்லால் அடிக்க உத்தரவிட்டுள்ளார் என்றும், அதைப் பின்பற்றி நாங்களும் அவ்வாறே செய்துள்ளோம் என்றும் இஸ்லாத்தின் இரண்டாம் கலீ·பா உமர் அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீது உள்ளது. (கஷ்·புல் கும்மாஹ், வால்யூம் 2, பக்கம் 111).
5. முதலில் திருக்குர்ஆனில் சொல்லியபடி ஒரு குற்றவாளிக்குக் கசையடி கொடுத்ததாகவும், பின்னர் இறுத்தித் தூதர் வழிப்படி அவருக்கு கல்லடி கொடுத்ததாவும் இஸ்லாத்தின் நான்காவது கலீ·பாவானா அலீ அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீது உள்ளது (புகாரி).
சில விளக்கங்கள்
திருக்குர்ஆனிலே இறைவன் விதிக்கும் தண்டனை நூறு கசையடிகள். ஆனால் ஹதீதுகள் மூலம் கிடைக்கும் தண்டனை சாகும்வரை கல்லடி. இஸ்லாமிய சட்ட வல்லுணர்கள், திருக்குர்ஆன் சொல்வது '·போர்னிகேஷ'னுக்கு என்றும், ஹதீது சொல்வது 'அடல்ட்ரி'க்கு என்றும் பங்கிட்டுக் கொண்டதுதான் பிரச்சனையின் ஆரம்பம். இறைவனையும் விட்டுவிட முடியாமல், நபிகள் நாயகத்தையும் பின்பற்றாமல் இருக்க முடியாது என்றோ என்னவோ இப்படி ஒரு விளக்க ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டது போலும்.
திருக்குர்ஆனில் உள்ள 'ஜினா' என்ற சொல் 'அடல்ட்ரி', '·போர்னிகேஷன்' இரண்டையுமே குறிக்குமானால், இந்த ஹதீதுகளை என்ன செய்வது?
இந்தப் பிரச்சனையில் சில அறிஞர்கள் வேறு ஒரு விளக்கத்தைக் கூறினார்கள். அது என்ன?
கூடா ஒழுக்கம் கொண்டவர்களுக்கு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை சூரா நூர் என்ற அத்தியாயத்தின் மூலம் நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்டது. அது மதீனாவில் அருளப்பட்ட சூரா. அதாவது, மக்காவிலிருந்து இறைத்தூதர் மதீனாவுக்குச் சென்ற ஆறாவது ஆண்டு, அல்லது ஆறு ஆண்டுகள் கழித்து என்று வரலாற்று வல்லுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இதை வைத்துப் பார்க்கும்போது, இஸ்லாமிய சட்டம் கசையடிதான் என்பது உறுதியாகிறது. அப்படியானால், கல்லடித் தண்டனைகள் இந்த சூரா அருளப்படுவதற்கு முன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன், வேறு தண்டனையே கிடையாதா? ஏன் கல்லால் அடிக்க வேண்டும்? ஏனெனில், இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அவ்வப்போது அருளப்படுவதற்கு முன்பு, நபிகள் நாயகம் அவர்கள், மோஸஸ் எனப்படும் மூஸா நபிக்கு அருளியிருந்த தவ்ராத் (ட்டோரா) என்ற வேதத்தில் சொல்லப்பட்ட சட்டதிட்டங்களின்படித்தான் நடந்து வந்தார்கள். அதில் காணப்படும் தண்டனைகளில் ஒன்றுதான் இந்த கல்லடித் தண்டனை. அதைத்தான் நபிகள் நாயகம் கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது, குறிப்பிட்ட குற்றத்துக்கு இஸ்லாமிய சட்டம் இல்லாத பட்சம், யூத சட்டத்தை நபிகள் நாயகம் பின்பற்றியிருக்கிறார்கள் என்பது சிலருடைய கருத்து. (மேற்கண்ட ஹதீதுகள் ஒன்றில், இந்த தண்டனை யூதர்களுக்கே நிறைவேற்றப்பட்டிருப்பதாக இருப்பதைக் கவனிக்கவும்).
ஆகவே, இந்த சூரா அருளப்பட்டுவிட்டதால், அதற்குப் பிறகு கல்லால் அடித்தல் என்பது இஸ்லாமிய சட்டமாகாது என்பது அவர்களுடைய வாதம்.
அதாவது, இன்றைக்கு ஈரான், நைஜீரியா, சூடான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் நிறைவேற்றப்படும் கல்லடித் தண்டனையை கண்டிக்கும் அதே சமயம், திருக்குர்ஆனையும் ஹதீதையும் விட்டுக் கொடுக்காத விளக்கங்களைத் தருகிறார்கள்.
என்னுடைய கருத்தில்
நான் ஒரு மார்க்க அறிஞன் இல்லையென்றாலும், இஸ்லாத்தையும், இஸ்லாமிய வரலாற்றையும், திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் அவர்களைப் பற்றியும் நான் மிகத் தெளிவாக என்னளவில் புரிந்து வைத்திருக்கிறேன். நான் சொல்ல வருவது இதுதான்.
இஸ்லாத்தின் எல்லைகளுக்குள் ஒரு பிரச்சனை எழுப்பப்படுமானால், முதலில் அதற்கு திருக்குர்ஆன் என்ன சொல்லுகிறது என்று பார்க்க வேண்டும்.
இரண்டாவதாக, திருக்குர்ஆனாகவே வாழ்ந்ததாக தன் மனைவி ஆயிஷா அவர்களால் புகழப்பட்ட நபிகள் நாயகம் இந்த குறிப்பிட்ட விஷயம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள், செய்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
திருக்குர்ஆனா ஹதீதா என்ற கேள்வி எழுமானால், முன்னதுதான். திருக்குர்ஆனில் உள்ள ஒன்றுக்கு முரணாக, மாற்றமாக ஹதீதில் இருக்கிறதென்றால், அதை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. அது ஆதாரப்பூர்வமான ஹதீது என்றாலும் சரியே. காரணம், நூற்றுக்கு நூறு மாற்றப்படாமல் இருக்கின்ற ஒரே வேதம் திருக்குர்ஆன்தான் என்பதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகம் கிடையாது. (கல்லடிக் கொல்லரசுகளும் ஒத்துக்கொள்ளும் கருத்து இது). ஆனால் இந்த அளவுகோல் எந்த ஹதீதுக்கும் கிடையாது.
லட்சக்கணக்கான ஹதீதுகளை, வாழ் நாள் பூரா செலவழித்து, சுண்டிசுண்டிப் பார்த்துத்தான் இமாம் புகாரி போன்றவர்கள் அவற்றிலிருந்து ஆதாரப்பூர்வமானவை என்று அவர்கள் கருதியவற்றை தொகுத்திருக்கிறார்கள் என்பதில் இருவேறு கருத்தில்லை. என்றாலும், அவர்களும் மனிதர்கள்தான். And to err is human. குழப்பவாதிகளால் சொருகப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கும் பல ஹதீதுகள் புகாரி போன்ற ஆதாரப்பூர்வமான தொகுப்பிலும் உண்டு.
ஒரு உதாரணம்
ஜாஹிலிய்யா என்று சொல்லப்பட்ட இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியாவின் அறியாமைக் காலத்தில், ஒரு குரங்குக் கூட்டத்தைத் தான் பார்த்ததாகவும், அதில் 'ஜினா' செய்த ஒரு குரங்கை மற்ற குரங்குகள் கல்லால் அடித்துக் கொன்றதாகவும், எனவே தானும் அவைகளோடு சேர்ந்து அந்தக் குரங்கை கல்லால் அடித்ததாகவும் அம்ரிப்னு மைமூன் என்பவர் சொல்வதாக புகாரியில் ஒரு ஹதீது உள்ளது (வால்யூம் 5, பிரிவு 58, எண் 188) !
இந்த ஹதீதை வாசிக்கின்ற அறிவுள்ள யாருக்கும் சில கேள்விகள் எழும். உதாரணமாக,
1. இஸ்லாத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்ததாக இந்த 'நிகழ்ச்சியை' வைத்துக் கொண்டாலும், சட்டம் என்பது மனிதர்களுக்கா, அல்லது மிருகங்களுக்குமா?!
2 இந்த ஹதீதைச் சொல்லும் மைமூன் என்பவருக்கு அந்த குறிப்பிட்ட குரங்கு 'ஜினா' செய்தது என்று எப்படித் தெரியும்? குரங்குகளுக்கு திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்ததா? இதையெல்லாம் மைமூன் எப்படி முடிவு செய்தார்? மற்ற குரங்குகளோடு பேசித் தெரிந்து கொண்டாரா?! ஒருவேளை பேசியிருப்பாரானால், இது ஹதீதுகளில் காணப்படும் மாந்திரீக யதார்த்தமாகத்தான் இருக்க வேண்டும்!
3. பாதிக்கப்படுவது எல்லாக் காலத்திலுமே பெண் என்பதால், இந்த ஹதீதில் குறிப்பிடப்படும் குரங்கும் பெண் குரங்காகத்தான் இருக்க வேண்டும்! 'அடல்ட்ரி' செய்த அந்த இன்னொரு (ஆண்) குரங்கு எங்கே? (இந்த ஹதீதின் அறிவிப்பாளருடைய 'மைமூன்' என்ற பெயர்கூட பாரசீக மொழியில் குரங்கைக் குறிப்பது என்ற உண்மைக்கும் இந்த கேள்விக்கும் தொடர்பில்லை).
அந்த பாவப்பட்டக் குரங்கை கல்லாலடித்துக் கொன்ற மற்ற குரங்குகளெல்லாம் நிச்சயமாக அறியாமைக் காலத்து ஷரீயத் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்கிறார் தென்னாப்பிரிக்காவின் இஸ்லாமிக் ரிசர்ச் ·பௌண்டேஷன் இண்டெர் நேஷனல் இன்க். என்பதன் உறுப்பினராகவும், அல்-பலாக் என்ற மாதமிரு முறை வரும் இதழின் ஆசிரியரும், எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான ஏ.எஸ்.கே. ஜும்மூல் அல்லது ஜமால் என்பவர்.
ஹதீதுகளுக்குள் இப்படிப்பட்ட குரங்குத்தனங்கள் ஊடுறுவி இருப்பதை அலசி ஆராய்கின்ற யாரும் புரிந்துகொள்ள முடியும்.
மேலே குறிப்பிடப்படப்பட்ட ஐந்து ஹதீதுகளில் முதல் மூன்றை இப்போது எடுத்துக்கொள்வோம். இந்த மூன்றிலும் நபிகள் நாயகம் அவர்கள் குற்றவாளிகளை கல்லால் அடித்து கொல்வதற்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது நபிகள் நாயகம் அவர்களின் ஆளுமைக்கே எதிரானது.
ஏனெனில் மனித குலமனைத்திற்கும் நபிகள் நாயகத்தை ஒரு அருட்கொடையாக, கருணையாக அனுப்பியிருப்பதாக இறைவன் கூறுகிறான். (அத்தியாயம் 21, சூரா அம்பியா, வசனம் 107).
தாயி·ப் என்ற ஊரிலே இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அவர்கள் சென்றபோது, அவர்களை சொல்லாலும் கல்லாலும் துரத்தித் துரத்தி அடித்தனர் அவ்வூர் மக்கள். கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை ரத்தம் கொட்டக் கொட்ட நபிகள் நாயகமவர்கள் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவர வேண்டியிருந்தது. அப்போதுகூட அந்த மக்களை அவர்கள் சபிக்கவில்லை. மாறாக, அவர்கள் திருந்தாவிட்டாலும், அவர்களுடைய சந்ததியினராவது நம்பிக்கை கொள்வார்கள் என்று அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.
தனக்கு விஷம் வைத்த யூதப் பெண்ணை மன்னித்தார்கள்.
வெற்றி வாகை சூடி மக்காவுக்குள் மறுபடி நுழைந்தபோது, தன்னை எதிர்த்த, கொல்ல முயற்சி செய்த குறைஷிகளுக்கு மன்னிப்பும் உயர் பதவிகளும் வழங்கினார்கள்.
தவறு செய்யும் ஒரு அடிமையை ஒரு நாளைக்கு எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டபோது, 70 முறை என்று பதில் சொன்னார்கள். அதாவது மன்னித்துக்கொண்டே இருங்கள் என்ற அர்த்தத்தில்.
எத்தனையோ முறை, போரில் பிடிக்கப்பட்ட கைதிகளை என்ன செய்யலாம் என்று கேட்கப்பட்ட போது, கொன்றுவிடலாம் என்று உமர் சொன்னார், ஆனால் மன்னித்து விடலாம் என்று முடிவெடுத்து அதன்படி செயல்பட உத்தரவிட்டார்கள்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் அவர்களின் மன்னிக்கின்ற குணச்சான்றுகளால் நிரம்பியிருக்கிறது.
நபிகள் நாயகம் இறுதித் தூதர் எனவும், அவர்களுக்கு முந்தையை தூதர்களிடத்தே இருந்த குறைகள் ஏதும் அவர்களிடத்தே இல்லை எனவும், மாறாக முந்தையை தூதர்களின் சிறப்புக் குணங்கள் யாவும் ஒருங்கே அவர்களிடம் அமைந்திருந்தது என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால், மேலே கூறப்பட்ட ஹதீதுகள் இந்த நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளன.
காரணம், அந்த ஹதீதுகளில் சொல்லப்படுவது போன்ற ஒரு நிகழ்ச்சி புனித பைபிளில் வருகிறது. உலகப் பிரசித்தி பெற்ற அந்த நிகழ்ச்சியில், விபச்சாரம் செய்ததாகக் கொண்டுவரப்படும் ஒரு பெண்ணை, இயேசு கிறிஸ்து அவர்கள், "உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர்கள் முதல் கல்லை எறியலாம்" (ஜான்-8) என்று சொல்லி காப்பாற்றிவிடுகிறார்கள். மனிதாபிமானமும் மனசாட்சியும் கொண்ட ஒரு மனிதரால்தான் அதைச் செய்ய முடியும். அதுவும் ஈஸா (இயேசு கிறிஸ்து) அவர்களைப் போன்ற அன்பே வடிவான இறைத்தூதர் வேறெப்படி இருந்திருக்க முடியும்?
இதில் விஷேஷம் என்னவெனில், அவர்களேகூட முதல் கல்லை எறிந்திருக்க முடியும்! ஏனெனில், பாவம் செய்யாத ஒரு புனித ஆத்மாவாகத்தான் அவர்கள் இருந்தார்கள். ஆனாலும், "போ, இனிமேல் பாவம் செய்யாதே" என்று சொல்லி அவளை அனுப்பிவிடுகின்றார்கள்.
ரஸ¥லுல்லாஹ்வுக்கு முந்திய ஒரு நபி, ஒரு பெண்ணின் மீது காட்டிய இரக்கமும் பரிவும் கருணையும், மனிதகுலத்துக்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதி நபியிடம் இல்லையென்று சொல்வது அவர்களது ஆளுமைக்கு எதிரானது அல்லவா?
எனவே இஸ்லாமிய சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன், யூத சட்டத்தைப் பின்பற்றி கல்லால் அடிக்கச் சொல்லியிருப்பார்கள் என்ற அனுமானத்துக்கு ஆதாரமில்லை. நான் இப்படிச் சொல்வதற்கு இன்னொரு காரணமுள்ளது.
திருக்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட வேதங்களான மோஸஸின் ட்டோரா, தாவூதின் சங்கீதங்கள், ஜீசஸின் காஸ்பெல் -- எல்லாமே மனிதர்களால் அசுத்தப்படுத்தப்பட்டவை என்பது முஸ்லிம் நம்பிக்கை. இதன் அடிப்படையில் பார்ப்போமானால் ஒரு உண்மை விளங்கும்.
இறைவன் ஒருவன்தான். மோஸஸ், ஜீசஸ், முஹம்மது எல்லாருடைய இறைவனும் ஒருவன்தான். மோஸஸ¤க்கு வேதம் அருளும்போது கண்டிப்பானவனாகவும் கொடுமையானவனாகவும் இருந்த அல்லாஹ், முஹம்மதின் காலத்தில் போனால் போகிறதென்று மிருதுவாகி கருணை வடிவாகிவிட்டான் என்று நினைப்பது அபத்தமாக இல்லையா?
இறைவன் ஒருவனென்றால், அவனுடைய குணாம்சங்களும் (attributes) எல்லாக் காலத்துக்கும் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? இறைவனுக்கு கோபமே இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் எனது கோபத்தைவிட கருணை மிகைத்துள்ளது என்று அவனே கூறுகிறான் (ஹதீது குதுஸி). திருக்குர்ஆனில் கருணை(mercy) என்ற விஷயத்தைப் பற்றி கிட்டத்தட்ட 172 இடங்களிலும், மன்னிப்பைப் பற்றி ஏறத்தாழ 150 இடங்களிலும் அல்லாஹ் பேசுகிறான். நான் நிச்சயமாக மன்னிப்போனாக இருக்கிறேன் என்று அடிக்கடி கூறுகிறான்.
இவ்வளவு ஏன்? ஒவ்வொரு காரியத்தையும் துவங்குவதற்கு முன் ஒரு முஸ்லிம், "பிஸ்மில்லாஹிர்ரஹ்மா நிர்ரஹீம்" என்று சொல்வது வழக்கம். இது திருக்குர்ஆனில் உள்ள 143 சூராக்களின் தொடக்கமாக உள்ளது. (ஒரே ஒரு அத்தியாயத்தில் மட்டும் அது துவக்கத்தில் வராமல் இடையில், உள்ளே வருகிறது). அதற்கு, "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு" என்றுதானே பொருள்?
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கின்ற அந்த ஓரிறைவன் ஒரு சமுதாயத்தினரை கல்லாலடித்துக் கொல்லச் சொல்லி, இன்னொரு சமுதாயத்தினருக்கு கசையடி போதும் என்று சலுகை கொடுக்கிறான் என்பது இறைத்தன்மைக்கு எதிரானது.
எனவே, மோஸஸின் தவ்ராத்திலும், இந்த சட்டம் இறைவனால் அருளப்பட்டதாக இருக்க முடியாது. அந்தக் கால குருமார்களான ரப்பிகளால் (Rabbis) சொருகப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
எனவே கல்லாலடித்துக் கொல்ல வேண்டும் என்பதே 'ரப்பி'களின் சட்டமே தவிர, 'ரப்'பின் சட்டமாக இருக்க முடியாது. ('ரப்' என்பது இறைவனின் இன்னொரு பெயர்).
அப்படியானால், அந்த மூன்று ஹதீதுகளையும், அதையொத்தவற்றையும் சொருகப்பட்டவை, பலவீனமானவை, spurious என்று ஒதுக்கிவிட வேண்டியதுதான். கல்லால் அடிக்கச் சொல்லும் காட்டுமிராண்டித்தனமான அந்த தண்டனை இஸ்லாத்தின் எதிரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்றும் அவற்றுக்கு 'இஸ்ரேலியாத்' என்று பெயர் என்றும் கூறப்படுகிறது.
நான் இப்படிச் சொல்வதற்கு திருக்குர்ஆனிலும் ஹதீதுகளிலும்கூட ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.
திருக்குர்ஆனின் ஆதாரங்கள்
பாலியல் குற்றச் சாட்டுக்கு ஆளானவர்களை கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்ற விஷயத்துக்கு திருக்குர்ஆனின் வசனங்களே எதிராக இருக்கின்றன.
1. கசையடி கொடுக்கச் சொல்லும் வசனத்தில்கூட, தப்பித்தவறி, உணர்ச்சி வேகத்தில் முதன்முறையாகத் தப்பு செய்பவர்களுக்கு அந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று திருமறை சொல்லவில்லை என்பது சில அறிஞர்களின் கருத்து. காரணம், அந்த வசனம், "ஜினா செய்த அந்த பெண்ணையும், ஜினா செய்த அந்த ஆணையும்" என்று தொடங்குகிறது. அதற்கு அரபியில், "அஜ்ஜானியத்து"(az-zaniyathu), "வஜ்-ஜானீ"(wa-z-zani) என்ற அரபிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
'அஜ்ஜானியத்து' என்பது பெண்பால். 'வஜ்-ஜானீ' என்பது ஆண்பால். That, the என்ற பொருள் தரும் 'அல்' என்ற definite article-தான் 'அஜ்', 'வஜ்' என்று இங்கே சப்தம் மாறிச் சேருகிறது. அரபி இலக்கண விதிகளின் படி, 'அல்' என்ற பதத்தின் சேர்க்கையினால், அது திரும்பத்திரும்ப தப்பைச் செய்கின்ற ஒரு persistant sexual offernder-ஐக் குறிப்பதாகும் என்று சில மொழி வல்லுணர்கள் குறிக்கின்றனர். அப்படிப் பார்த்தால், முதன் முறையாக அந்த தப்பைச் செய்பவர்களுக்கு கசையடிகூட கொடுக்க முடியாது.
2 அதற்கு அடுத்த வசனமே, (24 : 03) அப்படிப்பட்ட ஒழுக்கக் கேடான ஆண்களுக்கு ஒழுக்கக் கேடான பெண்களே மனைவிகளாகவும், அப்படிப்பட்ட பெண்களுக்கு ஒழுக்கம் கெட்ட ஆண்களே கணவர்களாகவும் வருவார்கள் என்று கூறுகிறது.
கல்லால் அடித்து அவர்களை ஒரேயடியாகக் காலி செய்யச் சொல்வதானால், அவர்களுடைய திருமணத்தைப் பற்றி இறைவன் ஏன் கூறவேண்டும்?
3. அதற்கு அடுத்த வசனம் (24 : 04), கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்பவர்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும் என்றும், பொய் சாட்சி கூறுபவர்களுக்கு 80 கசையடிகள் தரவேண்டும் என்று கூறுகிறது!
சாட்சி வைத்துக்கொண்டு அந்தக் காரியத்தைச் செய்கின்ற அளவுக்கு அதில் மூழ்கிப் போனவர்களாலேயே இது சாத்தியம். எனவே, இது பெண்களை காப்பாற்றும் விதமாகவே அமைந்திருப்பதைக் காணலாம். (மேலே 1-ல் 'அல்' என்ற definite article தரும் பிரத்தியேகப் பொருளை இங்கே பொருத்திப் பார்க்கலாம்).
4. அடுத்த வசனம் ( 24 : 05), திருந்தி மன்னிப்புக் கேட்கின்றவர்களை மன்னிக்க வேண்டும் என்றும், ஏனெனில் இறைவன் மன்னிப்பவனாகவும் கருணையாளனாகவும் இருக்கிறான் என்றும் கூறுகிறது!
ஏன், இந்த வசனத்தை யாரும் பின்பற்றுவதில்லை?
5. வசனம் 24 : 09ல், ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட பெண், தான் குற்றமற்றவள் என்றும், தன்மீது அபாண்டமாக பழி போடப்படுகிறது என்றும், இறைவன் மீது ஆணையிட்டு நான்கு முறை சொல்வாளாகில், அவளை மன்னித்துவிட வேண்டும் என்று இறைவன் கூறுகிறான்!
ஈரானிய, நைஜீரிய, பாகிஸ்தானிய, சவூதி அரேபிய நீதிமன்றங்களின் கண்ணில் இந்த வசனங்கள் படவில்லையா?
ஹதீதுகளைப் பற்றி இறைவன் என்ன சொல்கிறான்?
ஹதீத் அல்லது ஹதீஸ் என்பதற்கு 'பேச்சு' என்றொரு பொருள் உண்டு. இறைவனுடைய பாதையிலிருந்து மக்களை வழிகெடுக்கும் பொருட்டு, உண்மையான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல், 'அனாவசியமான பேச்சை' விலைகொடுத்து வாங்குபவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது என்று இறைவன் கூறுகிறான் (சூரா லுக்மான், 31 : 06). இந்த வசனத்தில், 'அனாவசியமான பேச்சு' என்பதற்கு 'லஹ்வல் ஹதீஸ்' என்ற சொல்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது!
இறைவனையும் அவனுடைய அடையாளங்களையும் மறுதலிப்பவர்கள், வேறு எந்த பேச்சைத்தான் நம்பப் போகிறார்கள்? (சூரா ஜாஸியா, 45 : 06). இங்கும் 'பேச்சு' என்பது 'ஹதீஸ்'தான்!
இறுதித் தூதருக்கு இறைவன் சொன்னது
நபியே! இவர்கள் எந்த விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ, அதனை நீர் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கி வைத்தோம். மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது (சூரா அந்நஹ்ல், 16 : 64).
வேறுபாடுகள் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம், திருக்குர்ஆனை வைத்து அதைத் தெளிவிக்கச் சொல்கிறான் இறைவன். அதில் இல்லாத ஒன்றை, ஹதீதை வைத்து முடிவு செய்யச் சொல்லவில்லை.
எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதை மட்டுமே நான் பின்பற்றுகிறேன் என்று சொல்லச் சொல்லி முஹம்மது நபிக்கு இறைவன் கட்டளை இடுகிறான் (சூரா அல் அன் ஆம் 06 : 50).
மக்களுடைய விருப்பத்துக்காக இறைவசனங்களை மாற்றிச் சொல்கின்ற வேலையைச் செய்ய முடியாது எனவும், அதற்குத் தனக்கு சக்தி இல்லை எனவும், இறைவனுக்கு மாறு செய்தால் மகத்தான வேதனைக்கு நிச்சயம் பயப்படுகிறேன் என்று நபியைச் சொல்லச் சொல்லி இறைவன் அறிவுறுத்துகிறான் (சூரா யூனூஸ் 10 : 15)
கட்டளையும், அதிகாரமும் தீர்ப்பும் தனக்கே உரியது என்றும் (சூரா யூசு·ப் 12 : 40), அதில் யாருக்கும் பங்கு இல்லை என்றும் (சூரா அல் கஹ்·ப், 18 : 26)
மனிதர்களுக்கு இந்தக் குர்ஆனில் உள்ள ஒவ்வொன்றையும் விவரித்திருக்கிறோம். ஆனாலும் மனிதன் அதிகமாக வீண் தர்க்கம் செய்பவனாகவே இருக்கிறான் (18 : 54) என்றும் தெளிவாகக் கூறுகிறான்.
பெருமானாரின் பொன்மொழிகள்
இது சம்பந்தமாக நபிகள் நாயகத்தின் சில பொன்மொழிகளும் இந்த விஷயத்தில் நமக்கு தெளிவைக் கொடுக்கின்றன.
1. என்னிடமிருந்து ஹதீதுகளை அறிவிப்பாளர்கள் வந்து உங்களிடம் கூறுவார்களானால், அந்த ஹதீதுகளை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், திருக்குர்ஆனின் ஒளியில் அவற்றை உரசிப் பாருங்கள். திருக்குர்ஆனோடு அது ஒத்துப்போனால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் அதை விட்டுவிடுங்கள்.
2. யாருக்கு திருக்குர்ஆன் போதுமானதாக இல்லையோ, அவர் நம்மைச் சேர்ந்தவரல்ல.
இது போதாதா சட்ட வல்லுணர்களுக்கு?
உமரும் அலீயும்
இப்போது ஹதீது நான்கும் ஐந்தும் நம் கவனத்திற்குரியன. நான்கில், கல்லால் அடித்துக் கொல்வது சம்பந்தமாக அருளப்பட்ட வசனம் இழக்கப்பட்டது என்று உமர் சொல்வதாகவும், அது பற்றி எதுவுமே பேசாதவராக அலீயின் கூற்றும் உள்ளது. அதாவது நேர்வழி காட்டப்பட்ட இரண்டு கலீ·பாக்கள் முரண்பாடாகப் பேசுவதாக வருகிறது. ஏனெனில், உமரின் காலத்தில் ஒரு வசனம் அருளப்பட்டிருந்தால், அது அலீக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை.
அதோடு, முதல் கலீ·பாவான அபூபக்கர் அவர்களின் காலத்தில்தான் திருக்குர்ஆன் முதன் முதலாகத் தொகுக்கப்பட்டது. திருக்குர்ஆனை ஒரு நூலாகத் தொகுக்கும் கருத்தை அபூபக்கரிடம் முதன் முதலாக முன்வைத்ததே உமர்தான். அப்படியிருக்கும்போது, அந்த 'இழக்கப்பட்ட' வசனத்தையும் ஏன் சேர்த்துத் தொகுக்கவில்லை?
மூன்றாவது கலீ·பாவான உஸ்மான் அவர்களுடைய காலத்தில் பரிபூரணப்படுத்தப்பட்ட திருக்குர்ஆன் தொகுப்பு வேலையின் போதும் அப்படியொரு வசனம் சேர்க்கப்படவில்லை. எந்த நபித்தோழரின் வசமும் அப்படியொரு வசனம் இருந்ததாக எங்குமே வரலாற்றுக் குறிப்பு கிடையாது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இறைவனே சொல்கின்ற ஒரு உண்மை, இந்த மாதிரியான 'ஹதீது'களெல்லாம் 'லஹ்வல் ஹதீஸ்'தான் என்று நிரூபிக்கிறது :
நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம். ஆகவே அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு நிச்சயமாக நாமே அதனை ரட்சித்துக் கொள்வோம் (சூரா அல் ஹிஜ்ர், 15 : 09)
இறைவனே என் வேதத்தைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்று சொன்ன பிறகு, அதில் ஒன்று விடுபட்டுப் போய்விட்டது என்று உமர் அவர்கள் சொன்னதாக ஹதீது உள்ளது என்று சொல்வது, எனக்குப் பின்னால் ஒரு நபி உண்டென்று சொன்னால், அதற்கு உமரே மிகவும் தகுதியானவர் என்று பெருமானாரால் புகழப்பட்ட உமரின் குணாம்சத்துக்கும் ஆளுமைக்கும் எதிரான சதித்திட்டம் அது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
கசையடி பற்றி
விருப்பத்தின் பேரில் இருவர் செய்யும் ஒரு பாலியல் சமாச்சாரத்துக்குத் தண்டனையாக நூறு கசையடிகள் தேவைதானா என்ற கேள்வியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இறைவனின் செய்தி என்பது மொழியை மீறியது என்பதாகத்தான் நான் புரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் மனிதர்களுக்கு வாழ் நெறியை வகுத்துக் கொடுப்பதற்காக இறைவன் மனிதனோடு பேச முடிவு செய்துவிட்ட பிறகு, ஒரு மனிதமொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. மொழி என்று வந்துவிட்டாலே, அர்த்தங்கள் சம்பந்தமான விவாதங்களும் வரத்தான் செய்யும்.
அப்போ என்னதான் செய்வது? நூறு கசையடிகள் கொடுக்கச் சொல்லும் இறைவனை கருணையாளன் என்று சொல்லமுடியுமா என்ற கேள்வி சில அதி மென்மையான உள்ளங்களில் எழத்தான் செய்கிறது.
திருக்குர்ஆன் முழுவதையுமே ஒரு குறியீட்டுத் தன்மை -- symbolic -- கொண்ட வேதமாகத்தான் நான் பார்க்கிறேன். பூடகமான வசனங்களையும் தெளிவான வசனங்களையும் நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இன்றளவும் புரியாத வசனங்கள் நிச்சயமாக நாளை புரியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறைவனின் கோபம் கொப்பளிக்கும் வசனங்களிலும் அவனுடைய கருணையைத்தான் நான் பார்க்கிறேன்.
எனவே கசையடியையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். என்ன வணங்குங்கள் என்றுதான் இறைவன் கூறுகிறான். எல்&டி சிமெண்ட் போட்டு கட்டப்பட்டு, மின்விசிறிகள் சுழல, மொசைக் தரை போடப்பட்ட பள்ளிவாசலில் என்னை வணங்குங்கள் என்றா சொன்னான்? இன்றைய வளர்ச்சிக்கும் வசதிக்கும் ஏற்ப, அதையெல்லாம் நாம் செய்துகொள்ளவில்லையா?
அந்தக் காலத்தில் போலீஸோ, சிறைச்சாலைகளோ, லத்திகளோ, துப்பாக்கிகளோ கிடையாது. அந்தக்கால கடுமையான தண்டனைக்கு வழி என்று அவர்கள் புரிந்துகொள்கின்ற மொழியும் வழியும் சாட்டையாக இருந்திருக்கலாம். இந்தக் காலத்திலும் சாட்டை எதற்கு?
ஈரான் ஈராக் யுத்தம் நடந்ததே, அதில் இரு நாடுகளும் அந்தக் காலத்தைப் போல, குதிரைகளையும் குத்தீட்டிகளையும் வைத்துக்கொண்டா சண்டை போட்டன? யுத்தத்தை நவீனப்படுத்துவது போல எல்லாவற்றையும் செய்வதுதான் அறிவுடைமை.
உடம்பைக் காயப்படுத்துவதால் மனித உள்ளம் மாறிவிடப்போவதில்லை என்பது இறைவனுக்குத் தெரியாதா என்ன?
கசையடி என்பதும் அதைப்போலத்தான். தண்டியுங்கள், அவமானமான, கேவலமான காரியத்தை அவர்கள் செய்துவிட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள் என்று இறைவன் சொல்வதாகத்தான் அதை நான் அர்த்தப் படுத்திக்கொள்கிறேன். ஆனால் எந்த விதமான தண்டனையும் கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு அல்ல.
என்னைப் பொறுத்தவரை கசையடி என்பதும் தண்டனைக்கான ஒரு குறியீடுதான்.
பெண்களுக்கு எதிரான சதி
இந்த கல்லாலடிப்பு தண்டனைகளில் பெரும்பாலானவற்றைப் பார்க்கும்போது அவை பெண்களுக்கு எதிரான ஒரு சதியாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு சில உதாரணங்கள் :
1. ஆ·ப்கனிஸ்தானில் நெருங்கிய குடும்ப உறுப்பினரைத் தவிர வேறு ஆண்களோடு ஒரு பெண் பார்க்கப்படுவாளானால், அது அவளுக்கு மரணதண்டனைக் குரிய குற்றமாகக் கருதப்பட்டது. 1996 மார்ச் 28ல் ஜமீலா என்ற பெண் அப்படித்தான் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள்.
2. நூர் பீபி என்ற 40 வயதுப் பெண்ணும் 38 வயது துர்லய் என்பவரும் இப்படிக் கொல்லப்பட்டது 1996 நவம்பரில். அவர்களைக் கொல்ல பனம்பழ அளவுள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டன! "இஸ்லாமிய சட்டம் அமுலாக்கப்படுவதைக் கண்டு நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்" என்று இந்த கொலைபற்றிச்சொன்னார் வலீ என்ற அதிகாரி!
3. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டு வேலை பார்த்த கர்தினி என்ற இந்தோனேஷியப் பெண்ணை ஒரு இந்தியன் கர்ப்பவதியாக்கிவிட்டு நாட்டைவிட்டு ஓடிவிட்டான். குற்றம் சாட்டப்பட்ட அவளுக்கு ஒரு வழக்கறிஞரோ, மொழிபெயர்ப்பாளரோ இன்றி அவள் வழக்கு அவளுக்கு புரியாத மொழியில் நடத்தப்பட்டது. இறையருளால், ஓராண்டு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டாள்.
4. 2001 அக்டோபர். ச·பியா ஹ¤ஸைனி என்ற நைஜீரியப் பெண், கற்பழிக்கப்பட்டு கர்ப்பமானதற்காக, கல்லாலடித்துச் சாகவேண்டும் என்று நைஜீரிய இஸ்லாமிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இறையருளால், கடைசியில் அவள் தப்பித்தாள். அவள் நீதிமன்றத்தில் அமர்ந்து தன் குழந்தைக்கு பால்கொடுத்துக்கொண்டே சொன்ன வார்த்தைகள் யாருடைய மனசாட்சியையும் உலுக்குபவை :
"நான் மட்டும்தான் தண்டிக்கப்படுவேன். ஏனென்றால், சட்டத்தின் அநீதி என்னவெனில், பெண்களை கர்ப்பிணிகளாக்குவதற்காக ஆண்களை சட்டம் தண்டிப்பதில்லை. என் குற்றம் அடல்ட்ரி அல்ல. என் குற்றம் கர்ப்பமானதுதான். ஏனெனில், பெண்கள் மட்டும்தானே கர்ப்பவதியாக முடியும்? எனவே, என் உண்மையான குற்றம் நான் பெண்ணாக இருப்பதுதான். ஆண் எப்போதுமே கர்ப்பமாக்கிவிட்டுத் தப்பித்துவிடுவான். துரோகியின் விந்தைச் சுமப்பதுதான் நாங்கள் செய்த பாவம்"
5. 2001 டிசம்பர். சூடான். தன் 18 வயது கர்ப்பிணி மனைவி அகோக் ஒழுக்கம் கெட்டவள் என்று அவள் கணவன் சொன்னான். தான் கற்பழிக்கப்பட்டதாக அவள் சொன்னாள். அவள்தான் விசாரிக்கப்பட்டான். அவளைக் கற்பழித்தவன் விசாரிக்கப்படவில்லை. (நிறைய வழக்குகள் இந்த மாதிரி ஒருதலைப் பட்சமாகவே இருக்கின்றன). அவளுக்கு 75 கசையடிகள் கொடுக்கப்பட்டன.
6.
2003 செப்டம்பர் 25. கடைசியாக தப்பித்தவள் நைஜீரியாவைச் சேர்ந்த ஆமினா லவால் குராமி என்ற பெண்தான் (நிழல்படம்). விவாகரத்து செய்யப்பட்ட இவள் கருவுற்றிருந்தாள் என்று நைஜீரிய ஷரியத் நீதி மன்றத்தினால் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டாள். ஆனால் குழந்தை பிறந்து பால் குடிப்பருவம் மறக்கடிக்கப்படும் வர அவகாசம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஈ மெயில்கள் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டது. நைஜீரிய அரசின்மீதான சர்வதேச அழுத்தம் அதிகமாகிக்கொண்டே போனது.
நைஜீரிய அரசு, இனிமேல் கல்லாலடித்துக் கொல்லும் தண்டனையை வலியுறுத்தமாட்டோம் என்று வெளிப்படையான பொது அறிவிப்பு ஒன்றை அக்டோபர் 29, 2002 அன்று வெளியிட்டது.
முடிவுரை
எனக்குத் தெரிந்த இஸ்லாம் அன்பு மயமானது. வன்முறைக்கு எதிரானது. எனக்குத் தெரிந்த முஹம்மது நபி (ஸல்) அன்பு மயமானவர். மன்னிக்கும் குணம் கொண்டவர். எனக்குத் தெரிந்த அல்லாஹ் கருணையாளன்.
ஆனால் சில நாடுகளில் உள்ள சில தீவிரவாத அமைப்புகளும், சில இஸ்லாமிய அரசுகளும் செய்யும் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் இஸ்லாத்துக்கும் முஹம்மது நபி அவர்களுக்கும் இல்லாத நிறத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. அப்படிப்பட்ட விஷயங்களை பெரிதுபடுத்தி பிரபலப்படுத்த உலக மீடியாக்களும் சளைப்பதில்லை.
எந்தப் பெயரில் கொடுமை நிகழ்த்தப்பட்டாலும் அதை கண்டிக்க வேண்டியது மனசாட்சி உள்ள மனிதர்களின் கடமை. நம்மால் செய்ய முடிவது இப்படி எழுதி ஆறுதல் தேடிக்கொள்வதுதான். என் மன அதிர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவே இதை உங்கள் முன் வைத்தேன்.
தற்காலத்தில் ஆங்காங்கு முளைவிட்டிருக்கின்ற இந்த கற்காலத்திலிருந்து விடுபட்டு, எல்லா நாடுகளும் மனித நேயத்தை நோக்கி முன்னேற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
தகவல் கொடுத்த இணையத்தளங்கள் :
01. : http://www.irfi.org/
02. : http://www.muttaqun.com/
03. : http://www.boloji.com/
04. : http://www.amnesty.org.uk/
05. : http://www.metonai.org/
06. : http://www.oprah.com/
07. : http://www.bharatvani.org/
08. : http://www.bpnews.net/
09. : http://www.foxnews.com/
10. : http://www.pbs.org/
11. : http://www.guardian.co.uk/
12. : http://www.islamreview.com/
13. : http://www.ccadp.org/
14. : http://www.mertonai.org/amina/
15. : http://www.religioustolerance.org/
16. : http://www.hindunet.org/
17. : http://www.answering-islam.org.uk/
18. : http://www.milligazette.com/
19. : http://www.faithfreedom.org/
20. : http://www.understanding-islam.com/
21. : http://www.iran-e-azad.org/
22. : http://www.vibrani.com/
23. : http://www.mostmerciful.com/
24. : http://www.englishforums.com/
25. : http://www.iran-press-service.com/