இந்த மாத காலச்சுவடு இதழில் (பிப்ரவரி 2005) சுந்தர ராமசாமி பிள்ளை கெடுத்தாள் விளை என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதைப் படித்த பிறகு எனக்கு சில கேள்விகள் எழுந்தன. இலக்கியத்தை இலக்கியமாக மட்டும்தான் பார்க்க வேண்டுமா? படைப்புக்கும் படைப்பாளிக்கும் உள்ள உறவுகள் முக்கியமில்லையா? ஒரு படைப்பு அநாகரீகமான உள் நோக்கம் கொண்டதாக இருந்தால் அதை எங்கே வைப்பது? ஒரு படைப்பின் இலக்கியத் தரம் அதன் உள்ளார்ந்த ஒழுக்கத்தைவிட முக்கியமானதா? இப்படி எத்தனையோ கேள்விகள்.
தங்கக்கண் என்று ஒருத்தன். அவன் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. ஊர் பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறான். 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்ற ஊரைப்பற்றி நிறைய தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறான். ஊர்ப்பெரியவர்களிடம் தான் சேகரித்து வைத்திருக்கும் அந்த ஊரைப்பற்றிய சுவாரஸ்யமான கதையைச் சொல்லிக் காட்டுகிறான்.
அதன்படி, இந்த கதையில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண் -- அதாவது தலித் பெண் -- படிப்பறிவு பெறுகிறாள். ஊருக்கு வந்த ஒரு ஜெர்மன் பாதிரியார் அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க முன்வருகிறார். முதலில் எதிர்ப்பு தெரிவிக்கும் அவள் சமுதாயம் பின்னர் ஒத்துக்கொள்கிறது.
ஆனால் அவள் பெரியவளானதும் படிப்பு கொஞ்ச காலம் தடைப்படுகிறது. ஆனால் பாதிரியாரே அவள் இருக்கும் இடத்துக்கு வந்து சொல்லித்தர ஒப்புக்கொள்கிறார். அனுமதி கொடுக்கப்பட்டு தாயம்மா என்ற அந்தப் பெண் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை பத்து ஆண்டுகள் அவரிடம் கற்றுத் தேர்கிறாள்.
அவளது படிப்பு காரணமாக அவளுக்கு திருமணம் ஆவது தடைப்படுகிறது. முதிர் கன்னியான அவள் அந்த ஊர் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியையாகவும் ஆக்கப்படுகிறாள். அப்படியே போகிறது காலம்.
ஆனால் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்திருந்த மணிகண்டன் என்ற "அவசரமாக சம்பாதித்துக் கொண்டிருந்த" அரசியல் வாதியின் மகனை பாலியல் பலாத்காரத்துக்கு அவள் உட்படுத்தியதாக அவன் புகார் கொடுக்கிறான். ஊர்ப்பெரியவர்கள், நிர்வாகம் எல்லாம் சேர்ந்து அவளை கம்பால் வாயிலும் மார்பிலும் அடித்துத் துன்புறுத்த, அவள் ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள்.
எண்பது வயது கிழவியாக 53 ஆண்டுகள் கழித்துத் திரும்பி வருகிறாள் தாயம்மா. அப்போதுகூட உயிரோடு இருக்கும் சிலர் அவளை வார்த்தைகளாலும், சில கட்டுப்பாடுகளாலும் துன்புறுத்துகின்றனர். கடைசியில் அவள் இறந்துபோகிறாள்.
இந்த விஷயத்தை ரொம்ப வருத்தமுடன் தங்கக்கண் ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லிக் காட்டுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சின்னப் பையனை அவள் கெடுத்ததால் அந்த ஊருக்கே 'களியக் காவிளை' என்பதுபோல 'பிள்ளை கெடுத்தாள் விளை' என்று பெயர் வருகிறது!
கதை சொல்லிச் செல்லும் விதம் ரொம்ப இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. சுந்தர ராமசாமி தன் திறமைகளையெல்லாம் காட்டியிருக்கிறார் என்று சொல்வதைவிட அவருடை எழுத்து அனுபவத்தில் நுட்பமான நகைச்சுவை, வட்டார வழக்கு மொழி எல்லாம் இயல்பாக ஆற்றோட்டம்போல வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு உதாரணம். தங்கக்கண் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியல்லவா? அந்த போராட்டத்தில் பல தழும்புகளையும் பெற்றவன் அவன். அவை எப்படி இருந்தன? "முதுகில் பூரான்போல் அற்புதமான தழும்புகள் இன்றும் இருக்கின்றன" என்கிறார் சு.ரா. அந்த 'அற்புதமான' என்ற சொல்லில் அவருடைய முத்திரை இருக்கிறது. ஒரு தழும்பு, ஒரு அவமானம், பட்ட அடி எப்படி அற்புதமாக இருக்க முடியும்?!
ஒட்டு மொத்த கதையையும் வைத்துப் பார்க்கும்போது, லேசான புன்னகையை ஏற்படுத்தும் இந்த வர்ணனையை இந்த கதையின் போக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு குரூர கற்பனையாகவே பார்க்கலாம். தாயம்மாவை ஊர்ப்'பெரியவர்கள்' அடித்துத் துன்புறுத்தும்போது பேசும் வார்த்தைகளிலும் இந்த கற்பனை இருப்பதைப் பார்க்கலாம் :
"ரவிக்கை அவுக்குறதுக்கா ஸ்கூலுக்கு வர்ற தேவுடியா?"
மார்பில் ஒரு அடி.
"இப்பம் நான் உறிஞ்சட்டுமா உனக்கு?"
கல்வியறிவு பெற்ற ஒரு தலித் பெண் ஒரு உயர் ஜாதிக்காரச் சிறுவனை -- வசதியாக அச்சிறுவன் எந்த ஜாதியென்று சொல்லப்படவில்லை -- பாலியல் பலாத்காரம் செய்வதாக சொல்வதுதான் கதையின் மையம். அப்படி தாயம்மா நடந்து கொண்டதற்கு, பாலுமகேந்திராவின் திரைப்படங்களில் வருவதுபோல, அவள் திருமணமாகாத முதிர்கன்னி என்று ஒரு கதா நியாயமும் தரப்பட்டுள்ளது.
எந்த ஜாதிப் பெண்ணாக இருந்தாலும் பாலுணர்வு இயற்கையானதே. அதுவும் ஒரு முதிர்கன்னி அப்படி நடந்துகொண்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த இலக்கிய நியாயத்தை வைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஏன் இன்றுவரை, தலித்துகள்மீது இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை, வன்முறையை எல்லாம் தலைகீழாக காட்டியிருப்பதுதான் கதையின் பிரச்சனை அல்லது உள் நோக்கம்.
ஏன், ஒரு தலித் பெண் இப்படி நடந்துகொண்டிருக்க வாய்ப்பே இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. காரணம், உணர்ச்சி வேகத்தில் யாரும் அப்படி நடந்து கொள்ள முடியும்தான்.
ஆனாலும் இந்திய வரலாற்றின் ஒரு முக்கியமான, மறைக்கப்படாத, அதி வெளிச்சமான, அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒரு பகுதிக்கு இழைக்கப்பட்ட ஒரு துரோகமாக இந்த கதை வந்துள்ளது. கடந்தகால வரலாறும் நிகழ்கால நடப்புகளும் கதைக்கு எதிராகத்தான் சாட்சி பகர்கின்றன.
இது வெறும் சுவாரஸ்யாமாக எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரு கற்றுக்குட்டி இதை எழுதியிருந்தால் அப்படி ஒதுக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியத்தில் பழம்தின்று கொட்டை போட்ட, சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளரிடமிருந்து இது வந்துள்ளது என்பது மிக முக்கியமானது. யாருக்கும் சொரிந்து கொடுக்க வேண்டிய அவசியம் சு.ரா.வுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். பின் ஏன் இப்படி ஒரு கதை?
ஒரு உயர்ஜாதி இலக்கியக் குசும்பாகவே இந்த கதை எனக்குப் படுகிறது. இப்படிச் சொல்வதற்காக நான் வருத்தப்படுகிறேன். சுந்தர ராமசாமியிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவே இல்லை.