பறவையின் தடங்கள் -- நாகூர் ரூமி
தமிழோவியம் - தமிழ்ப்பதிவு
http://www.tamiloviam.com
 
  நாள் : 10/27/2004 3:19:28 PM, நாகூர் ரூமி
 
 
  வெள்ளிக்கிழமை

“பாகவீ, எந்திரி, எந்திரிடா கண்ணூ...'ஹொத்துவா' நாள்லெ தூங்கிகிட்டே இரிக்காதே. எட்டு வய்சுப் புள்ளெ இப்புடித் தூங்கலாமா?” ம்மா மூன்றாவது முறையாக சொல்லிவிட்டுப் போய்விட்டது. முத்தமிழ், முக்கனி மாதிரி ம்மாவின் பொறுமையின் அளவுகோலும் மூன்றுதான். மூன்றாவது முறை சொல்லப்படும் எதுவும் கடைசி எச்சரிக்கையாகும். அதற்குமேல் வாய்ப்பேச்சே கிடையாது. சில வினாடிகளில் பளாரென்று குளிர்ந்த நீர் முகத்தில் அறையும். அதற்கப்புறம் விரும்பினாலும் தூங்கமுடியாது. குளிர்ந்த நீரை முகத்தில் அடித்தால் தூக்கம் கலைந்துவிடும் என்று ம்மாவுக்கு யார் சொல்லிக்கொடுத்தது? ம்மாவும் என்னைப்போல தனது ம்மாவிடம் ‘ஹொத்துவா’ நாளில் தூங்கிக்கொண்டிருந்ததற்காக குளிர்ச்சியான நீரின் கருணையற்ற அறையை வாங்கியிருக்குமா? ரத்தத்தின் ரத்தமான என்னிடமே பழி தீர்த்துக்கொள்கிறதா?
 
ம்ஹ¤ம். அப்படியிருக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு தலையணையை தலையின் கீழே குறுக்காக வைத்து, அதில் வலது பக்கமாக திருப்பிய முகத்தைப் புதைத்துக் கொண்டு, கவட்டியில் ஒரு தலையணையை வைத்துக்கொண்டு தூங்கும் சுகமே அலாதி. ம்மா அப்படி தூங்கி ஒரு நாள்கூட நான் பார்த்ததில்லை. ம்மா எப்போதும் வலது பக்கமாக ஒருக்கலித்துத்தான் படுக்கும். ரசூலுல்லாஹ் அப்படித்தான் படுப்பார்களாம். ஹதீஸில் இருக்கிறது என்று ம்மாதான் சொன்னது.

புத்தர் படுத்திருப்பதுபோல சிலைகளைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம்கூட எனக்கு ம்மாவின் ஞாபகம்தான் வரும். புத்தரும் ம்மாவைப்போல ஒருக்கலித்துத்தான் படுத்திருந்தார். விஷ்ணுகூட ஆதிசேஷன்மீது இப்படித்தான் படுத்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்தபோது கூடவே ஒரு கேள்வியும் முளைத்தது. குப்புறப்படுத்துக்கொண்டே ஞானம் பெற்றவர்கள் ஒருவர்கூட கிடையாதா? எனக்குத் தெரிந்து யாரைப்பற்றியும் வரலாற்றில் அப்படி ஒரு குறிப்பு இல்லை. நான் ஒருவன்தான் விடாது முயன்று கொண்டிருந்தேன். ஆனால் ஞானம் பெறக்கூடிய சமயத்தில் யாராவது எழுப்பி கெடுத்துவிடுகிறார்கள். மனிதர்கள் ரொம்பத்தான் பொறாமை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

ம்மாவின் கடைசி எச்சரிக்கைக்கும் குளிர்ந்த நீரின் தூக்கக்கலைப்புக்கும் மத்தியில் உள்ள சில வினாடிகளில் தூங்கிக்கொள்வதிலும் ஒரு தனி சுகம் இருந்தது. மனிதர்கள் தூங்குவதையே விரும்புகிறார்கள். நானும் மனிதன்தானே? ஆனால் இந்த 'ஹொத்துவா' நாட்களில் மட்டும் இந்த ம்மாக்கள்கூட நம் எதிரிகளாகிவிடுகிறார்கள்.

தூங்கியதற்காக குளிர்ந்த நீர் ஒரு தண்டனை என்றால் விழித்தவுடன் சுடுதண்ணீரில் இன்னொரு தண்டனை காத்திருக்கும். என்னைக் குளிப்பாட்ட ம்மா எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள் ஒவ்வொன்றும் என் எதிரிகள்தான். முதலில் சுடுதண்ணீர். பின் சோப்பும் சீயக்காய்த்தூளும். நான் கதறக் கதற கொஞ்சம்கூட இரக்கமின்றி என் தலையில் அவை தேய்க்கப்பட்டு, நான் ஒவ்வொரு முறையும் பயப்படுவதுபோலவே அவை என் கண்ணில் இறங்கி, கண்சிவந்து, குளித்து முடித்த பிறகும் ரொம்ப நேரம் பயங்கரமாக எரிந்துகொண்டிருக்கும். அந்த எரிச்சல் போகும்வரை ம்மாவைப் பார்க்கவே வெறுப்பாக இருக்கும்.
 
எல்லாம் இந்த ‘ஹொத்துவா’வால் வந்தது. மற்ற நாட்களில் இந்த தடபுடல் எதுவும் கிடையாது. ஸ்கூலும் வெள்ளிக்கிழமை என்பதால் சீக்கிரமே விட்டுவிடுவார்கள். ஸ்கூலிலிருந்து வந்தவுடன் மறுபடி ம்மா என் முகம், கை காலெல்லாம் ஏதேதோ வாயால் தனக்குள் ஓதியபடியே கழுவி விடும். அது எனக்கு ‘ஒதுவு’ செய்து விட்டதென்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்.
 
கழுவித்துடைத்து ‘வாழப்பழம்’ வைத்து கைலி உடுத்திவிடும். என்பதுக்கு என்பது சங்குமார்க் கைலி தொடையில் படும்போது பட்டுமாதிரி இருக்கும். கைலி, நேருஜிப்பா, தலையில் தொப்பியுடன் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால் தொப்பியை சரிபார்த்து, தலையில் அழுத்திக் கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். கொஞ்ச நேரம் போனவுடன் தலையில் தொப்பி முடியும் ஓரங்களில் அரிக்கும். தொப்பியைக் கழற்றி சொரிந்து கொள்ள தலையில் கைவைக்கும்போதுதான் கண்ணைக் கொளுத்திய சாணி நிறத்து சீயக்காய்த் தூளின் மகிமை புரியும். வெல்வெட்டைவிட வழுவழுவென முடி வழுக்கும். தலையில் விரல்கள் சறுக்கி விளையாடும்.

சாதாரண தலையில் இந்த சறுக்கு விளையாட்டெல்லாம் விளையாட முடியாது. சீப்பால் தலைவாருவதே ஒரு பெரிய வேதனையாக இருக்கும். விடாக்கண்டன் கொடாக் கண்டன் மாதிரி என் வணங்காமுடி காந்தாராவாகவும், அதை சீப்பில் சிறைப்பிடித்து சிக்கெடுக்க முயலும் ம்மாவின் வலது கை என்.டி. ராமாராவாகவும் மாறியிருக்கும். யுத்தத்தில் எப்போதும் ம்மாதான் ஜெயிக்கும். என்றாலும் அந்த வலியும் வேதனையும் தர்காவுக்கு வரும் மொட்டைத் தலையர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்னை ஏக்கப் பெருமூச்சு விடவைக்கும்.
 
ஆனால் சீயக்காய்ப் போட்ட தலைமுடிகள் ஒன்றோடொன்று சிக்கிக்கொள்ளாமல் அன்று பகல் ஆக்கப்போகும் பாசுமதி அரிசி பிரியாணி மாதிரி தனித்தனியாக விலகி நிற்கும். அதில் மறுபடியும் தொப்பியை வைத்து அழுத்த மனசே வராது.

ஆனால் இந்த அற்ப சுகங்களைவிட வெள்ளிக்கிழமை தரும் கஷ்டங்கள்தான் அதிகம். அதிலும் ‘ஜும்ஆ’வுக்கு பெரிய 'ஹொத்துவா' பள்ளி அல்லது சின்ன 'ஹொத்துவா' பள்ளிக்குப் போவது எனக்கு அறவே பிடிக்காது. ம்மாவுக்குத் தெரியாமல் பள்ளிவாசலுகுப் போவது மாதிரி யானைக்கொட்டகை சந்தில் போய் நின்றுவிடுவேன். யாராவது யானைக்கு பூவன் வாழைப்பழம் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நீண்ட கறுப்பு தும்பிக்கையால் அதை யானை பிடுங்கிக்கொள்ளும். பாவம் ரொம்ப பசிபோல. அதன் தும்பிக்கையின் முனையின் உட்புறம் வெளுப்பாக அல்லது செக்கச்செவேல் என்று ஏதோ நோய் பிடித்த மாதிரி இருக்கும். இந்த யானையோடு சேர்ந்து ஒரு நாள் ஜும்ஆ தொழுதால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வேன். ரொம்ப அற்புதமாக இருக்கும். யானை எப்படி தொழும் என்று கற்பனை செய்வதே ரொம்ப வேடிக்கையாக இருந்தது. ஆனால் இதெல்லாம் ம்மாவுக்குத் தெரியாது. ம்மாக்களை ஏமாற்றுவது சுலபம். அதற்காகவே அவர்கள் பிறந்திருப்பவர்கள்.

ஆனால் யானைக்கொட்டகை பக்கமும் வாப்பாவின் 'ஆத்ம' நண்பர்கள் யாராவது ஒரு ஷைத்தான் வந்துவிடும். "என்னாங்கனி, கானாமூனா, ஹொத்துவாக்குப் போவாமெ, யானெயெ நின்டு வேடிக்கையா பாக்குறியும்?" என்று கேள்வி கேட்கும். தொப்பி போட்டு தாடிவைத்த ஷைத்தான். காட்டிக் கொடுக்கும் ஷைத்தான். 'சாடிஸ்ட்' ஷைத்தான். எனக்கு வரும் கோபத்தில் அந்த யானை சாப்பிடும் உருண்டை சோற்றுக் கட்டிக்குப் பதிலாக அவன் தலையைக் கொடுத்தால் என்ன என்று யோசிப்பேன். நினைப்பதையெல்லாமா அல்லாஹ் நிறைவேற்றிவிடுகிறான்?
 
ஆனால் அந்தக் கேள்விக்கு மேல் அங்கே நிற்கமுடியாது. ஷைத்தான் வாப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிடும். அடுத்து ஷைத்தான் சிந்திப்பதற்குள் விர்ரென்று நானுவான் குருவி மாதிரி பறந்து தொழுகையில் கலந்துகொள்ள தர்காவுக்குப் போய்விடுவேன்.
 
ஆனால் எந்த ஷைத்தானும் என்னைப் பார்க்காத நேரங்களில் எல்லாம் அந்த அதிசயம் நடந்தது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மட்டும். நான் யானையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது மார்க்கட்டுக்குள் புகுந்து, கூறுபோடும் மீன்களைக் கவ்வக் காத்திருக்கும் பூனையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி, பெரிய 'ஹொத்துவா' பள்ளியில் இருந்து 'பானா' சாபுவின் குரல் வரும்.  "அல்லாஹ¤ அக்பர் அல்லாஹ¤ அக்பர்".

அடடா, அல்லாஹ் சில தொண்டைகளுக்குத்தான் எவ்வளவு அழகான இனிமையான குரலைக் கொடுத்துவிடுகிறான்! (தொழுகைக்கான அழைப்பான) பாங்கின் சப்தம் என்னை காந்தம் மாதிரி இழுக்கும். 'பானா'சாபு 'பாங்கு' சொன்னாலும் சரி, 'பைத்' ஓதினாலும் சரி, அல்லது எது ஓதினாலும் சரி, அது எப்போதுமே என்னை வசியப் படுத்தியது. வாவா என்று அழைத்தது. என்னை அறியாமல் என் கால்கள் அந்த குரல்வரும் திசையை நோக்கி நடக்கும். பொதுவாக அது பள்ளியாகத்தான் இருக்கும். இந்த அதிசயம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடந்தது.
 
ஆனால் 'பானா'சாபு ஓதி அல்லது பாங்கு சொல்லி முடித்தவுடன் தொழுகை துவங்கிவிடாது. பாங்கு சொல்லிவிட்டு அவர்கள் முதல் வரிசையில் போய் அமர்ந்துவிடுவார்கள். வேறு யாரோ தலையில் 'பேட்டா' கட்டிய ஒருவர் பவுன் கலரில் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பைப் பிடித்துக்கொண்டு 'மைக்'கில் ஏதேதோ சொல்ல ஆரம்பிப்பார். அது பெரும்பாலும் அரபியில் இருக்கும். சில நாட்களில் வேறு யாரோ வந்து தமிழில் பேசுவார்கள். அதுதான் 'ஹொத்துவா' என்றும் சொன்னார்கள். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கும்.
 
அன்றைக்கு ஒரு நாள் 'ஹொத்துவா'வில் ரசூலுல்லாஹ்வை எப்படி எதிரிகள் ரத்தம் வரும் அளவுக்கு கல்லால் அடித்து துன்புறுத்தினார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார் 'பேட்டா' தலைக்காரர். சொல்லும்போது ஒரு கண்ணுக்கு அழுதேவிட்டார். அவர் அழுததைப் பார்க்க ரொம்ப சிரிப்பாக வந்தது. ஆனால் சொற்பொழிவு அரபிக்கு மாறும்போது அழுகை நின்றுவிடும். ஏன்? அரபி மொழியில் துயரங்கள் இல்லையா? ஒருவேளை அவருக்கும் என்னைப்போல அரபி ஓதமட்டும்தான் தெரியும் போல. எனக்கு ரசூலுல்லாஹ்வை நினைத்து பாவமாக இருந்தது.
 
ஆனால் என் பக்கத்தில் இருந்த யாருமே அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருவர் கண்ணை மூடிக்கொண்டே தாடியைக் கோதிக்கொண்டிருந்தார். சில பேர் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார்கள். ச்சே, மனிதர்கள் எவ்வளவு அசிங்கமானவர்கள் என்று கக்கூஸிலும் கொட்டாவியிலும்தான் தெரிகிறது. அதனால்தான் கொட்டாவி வந்தால், 'அவூதுபில்லாஹி மினஷ்ஷைதானிர் ரஜீம்' என்று சொல்லி பீச்சங்கையால் வாயைப் பொத்தவேண்டும் என்று ம்மா சொன்னதா என்றும் தெரியவில்லை. பல பேர் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஹொத்துவாவின் முடிவில் "அல்லாஹ¤ம்ம அஜ்ரினா மினன்னார்" என்று மூன்று முறை சொல்வார்கள். அப்பாடா என்றிருக்கும். அது சொல்லும்போது அலாரம் அலறிய மாதிரி தூங்கிக்கொண்டிருக்கும் எல்லோரும் முழித்துக்கொள்வார்கள். உடனே எழுந்துவிடுவார்கள். தொழுகை ஆரம்பித்துவிடும்.

இந்த 'அல்லாஹ¤ம்ம அஜ்ரினா மினன்னார்' எப்படி எல்லா¨ரையும் எழுப்பிவிடுகிறது என்பது எனக்குப் புரியவே இல்லை. நான்கூட ம்மாவிடம் இதைச் சொல்லி, "இனிமே என்னை எழுப்புவதற்கு நீ ஜில் தண்ணியை முகத்தில் அடிக்காதே. அல்லாஹ¤ம்ம அஜ்ரினா மினன்னார் அப்புடீன்னு மூனு தடவெ சொல்லு, நா எந்திரிச்சுடுவேன்" என்று சொன்னபோது ம்மா விழுந்து விழுந்து சிரித்தது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

தொழுகையில் குனிந்து அனைவரும் தங்கள் நெற்றிகளை தரையில் வைத்துக் கொஞ்ச நேரம் இருப்பார்கள். எனக்கு அப்போது என்ன செய்வது என்று தெரியாது. தலை தூக்கிப் பார்ப்பேன். என்னைப்போன்ற வாண்டுகளும் தலை தூக்கிப்பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் ஒருவருக்கொருவர் புன்னகையை சகோதர பாசத்தோடு பரிமாறிக்கொள்வோம். அப்படி நாங்கள் செய்ததற்காக யாரும் எங்களைத் திட்டவோ அடிக்கவோ முடியாது. அவர்கள் தலையை உயர்த்துவதற்குள் மறுபடியும் நாங்கள் குனிந்து அவர்களைப் போலவே எங்கள் நெற்றிகளைத் தரையில் வைத்துக்கொள்வோம். எல்லோரையும் ஏமாற்றி விட்டோம் என்று ரொம்ப பெருமையாக இருக்கும். தொழுகை முடிந்து ஒரு புரட்சி வீரனாக நான் வெளியில் வருவேன்.
 
வேறுசில ஜும்ஆக்களில் வேண்டுமென்றே பள்ளமும் குழியும் உள்ள தரையாகப் பார்த்து உட்கார்ந்து கொள்வேன். எல்லோருடைய நெற்றிகளும் தரையில் இருக்கும்போது நான் என் பாக்கெட்டிலிருந்து கண்ணாடி ரவைகளை எடுப்பேன். அதில் மிகப்பெரியதை எடுத்து கண்ணருகில் வைத்து கலிலியோ மாதிரி அதன் வழியாக ஒரு 'லுக்' விடுவேன். பின் அதை வலது கைப்பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலால் பிடித்து இடதுகை நடுவிரலில் வைத்து எதிரில் இருக்கும் பள்ளத்தை நோக்கி வேகமாக உருட்டிவிடுவேன். பல முயற்சிகளுக்குப் பிறகுதான் வெற்றி கிடைக்கும். ஆனால் அது டர் என்று உருண்டு ஓடும் சப்தம் நேர்மையாகத் தொழுபவர்களின் தியானத்தைக் கலைத்து எரிச்சல் படுத்தும்.
 
தொழுகை முடிந்து சலாம் கொடுக்கும்போது என்னை சுட்டு எரித்துவிடுவது மாதிரி சிலர் பார்ப்பார்கள். அவர்களுடைய கண்களில் இறைக்கோபம் தெரியும். அவர்கள் எழுந்துவிட்டால் நான் எழ முடியாது. அவர்களுடைய சாபத்தால் கல்லாகிப்போய்விடுகின்ற அபாயத்திலிருந்து தப்பிக்க நான் உடனே எழுந்து இடத்தைக் காலி பண்ணிவிடுவேன். எங்களைப் போல அவர்களால் சுதந்திரமாக இருக்க முடியாது. தொழுகையின் எல்லா கட்டங்களும் முடிந்து அவர்கள் வருவதற்குள் நான் பெரிய எஜமான் வாசலுக்கு வந்து பூவாங்கிக்கொண்டிருப்பேன்.
 
ஒரு நாள் தொழுதுவிட்டு வெளியில் வந்தபோது சலீம் நின்று உருளைக்கிழங்கு காண்டா(பொரியல்) வாங்கித் தின்றுகொண்டிருந்தான். "டேய் ஹொத்துவாத் தொலுவெ ஒனக்குப் புடிக்கிதா" என்று கேட்டேன்.

"ம்ஹ¤ம். தொலுவலேண்டா வாப்பா வெளுத்துடுவஹா" என்றான். என்னப் போலவே அவனும் இருந்தது எனக்கு வியப்பும் சந்தோஷமும் அளித்தது.

ஆனால் இந்த ஜும்ஆ விளையாட்டு எனக்கு நாளடைவில் 'போர்' அடித்துப்போனது. எப்படி வாரந்தவறாமல் வருஷக்கணக்கில் அலுக்காமல் சலிக்காமல் அல்லது சலித்துக்கொண்டே எல்லோரும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை பகல்களில் ம்மா ஆக்கும் மட்டன் பிரியாணி மட்டும் எனக்கு சலித்ததேயில்லை. 

"என்ன பாகவி சாஹிப், ஜும்ஆவுக்கு நேரமாச்சு. உங்க சொற்பொழிவுக்காக கூட்டம் காத்திருக்கும். போலாமா?"

என் நினைவுப் பட்டத்தை பூமிக்கு இழுத்த குரல் வந்த திசையில் நிமிர்ந்து பார்த்தேன். பெரிய பள்ளியில் பாங்கு சொல்லும் ஹனீ·பா நின்றுகொண்டிருந்தார். தொழுவதும், முன்னின்று தொழவைப்பதும் வாழ்வாகிப்போன என்னோடு இருபதாண்டுகளாக கூட இருப்பவர். கேஸட்டைப் போட்ட மாதிரி, ஒவ்வொரு நாளும் அதே ஏற்ற இறக்கத்தோடு அவரால் எப்படித்தான் பாங்கு சொல்ல முடிகிறதோ!

என் அடர்ந்த தாடியை அனிச்சையாக கோதிக்கொண்டே எழுந்த எனக்கு மறுபடி 'பானா' சாபுவின் ஞாபகம் வந்தது. அவர் குரல் மட்டுமல்ல. செயலும் ரொம்ப அழகானது. படுத்த படுக்கையாய் பாயில் கிடந்தபோதுகூட அவர் தொழுது நான் பார்த்திருக்கிறேன்.

"சாபு, ஏன் இப்புடி கஸ்டப்பட்டு தொலுவுறிங்க? நரஹத்துப் போயிடுவோம்னு பயப்புடுறீங்களா சாபு?" என்று கேட்டேன்.

நான் அப்படிச் சொன்னபோது பக்கத்தில் இருந்தவர்கள், "ஓய், அப்டியெல்லாம் பேசக்கூடாது" என்று என்னை அடக்கினார்கள். ஆனால் சாபு சொன்னார், "அவனெ ஒன்னும் சொல்லாதீங்க. நல்ல அறிவான புள்ளெ. அல்லாஹ் அவனுக்கு நீடிச்ச 'ஹயாத்'தெ போட்டு வைக்கணும். இங்கெ வா" என்று என்னை அழைத்தார். அவர் முகத்தில் கோபமில்லை. ஒரு புன்னகை மட்டுமே இருந்தது.

"அல்லாஹ்வோட பேசியிருக்கியா?"

"ம்ஹ¤ம். பேச முடியுமா?" என்றேன்.

"ம், பேசலாம். அதுதான் தொலுவெ. நா பாயில படுத்துக் கெடந்தாலும் அல்லாஹ்வோட பேசிக்கிட்டே இருக்கணும்னு ஆசப்படுறேன். அதுனாலெதான் தொலுவுறேன். நீயும் பேசிப்பாரு" என்றார்.

குப்புறப் போடப்பட்ட காஷ்மீர் கம்பளத்தை நிமிர்த்தி நேராகப் போட்டமாதிரி என்னையும் என் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது, அவர் அப்போது சொன்ன பதில். இறைவனோடு பேசுகின்ற வாய்ப்பையல்லவா ஒவ்வொரு ஜும்ஆவிலும் கெடுத்து வந்திருக்கிறேன்! சொர்க்கத்தின் திறவுகோலை கையில் வைத்துக்கொண்டு நரகத்தின் கதவுகளை திறக்க முயற்சி செய்து பார்த்திருக்கிறேன்! என் கண்ணைத் திறந்துவிட்டு சாபு கண்ணை மூடிவிட்டார். அன்றிலிருந்து பள்ளிவாசலில் அமர்ந்து விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் பல ஆயிரம் நன்மைகளை வழங்குகின்ற கருணையாளனோடு பேச நானும் ஆசைப்பட்டேன். அதன்பின் என் வாழ்வே அவனுடனான பேச்சாகிப் போனது.  

சின்ன வயதில் இறைவனோடு ஜும்ஆ விளையாட்டு விளையாட முடிந்தது. இப்போது? விளையாட்டு வினையாகிப் போனது என்பார்களே, அது இதுதானோ?
 
அருஞ்சொற்பொருள்

ஹொத்துவா -- 'குத்பா' என்ற சொல்லின் பேச்சு வழக்கு மரூஉ. பிரசங்கம் என்று பொருள்.
ஒதுவு -- 'வளூ' என்ற சொல்லின் பேச்சு வழக்கு மரூஉ. தொழுகைக்கு முன் முறைப்படி உடலைச் சுத்தம் செய்தல்.
பாங்கு -- தொழுகைக்கான அழைப்பு.
பைத் -- புகழ்ப்பா.
பேட்டா -- தலைப்பாகை
ஹயாத்து -- ஆயுள்
ரஸ¥லுல்லாஹ் -- முஹம்மது நபி (ஸல்)
ஹதீஸ் -- நபிமொழி

நன்றி தீபாவளி மலர் ஆனந்த விகடன் 2004