|
அமெரிக்க மாணவி காவியாவிற்கு உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை "திருநிறைசெல்வச்சிட்டு" விருது
விஸ்கான்சின் டிச.27 :
குறளில் தன் ஆழ்ந்த ஈடுபாட்டை குறையின்றி நிருபித்த அமெரிக்க தமிழ் மாணவிக்கு அமெரிக்க தமிழ்பள்ளிகள் நடத்திய பாராட்டுவிழாவில் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை தலைவர் இராம் மோகன் "திருநிறைசெல்வச்சிட்டு" என்ற விருது வழங்கிக் கவுரவித்தார். இது குறித்த விபரமாவது:
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் ஒன்பது தமிழ்ப்பள்ளிகளும் ஒன்றிணைந்த ஆண்டு விழாவினை இல்லினாய்சு (Illinois), அடிசன் (Addison) நகரில் "டிரிசுகோல் கத்தோலிகர் உயர்நிலைப் பள்ளியின்” (Driscoll Catholic High School) அரங்க வளாகத்தில் கொண்டாடியது. விழாவிற்கு முதல் நாள் சனிக்கிழமை கடுமையான (ஆறு முதல் பத்து அங்குலம்) பனித்துகள்கள் விழுந்த போதிலும் பெரும் அளவில் பள்ளி மாணக்கர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் விழாவில் பங்கு பெற்றனர். டெக்சாசு (Texas) மாநிலத்தின் ஆச்டின் (Austin) (சிகாகோவிலிருந்து 1100 மைல் தொலைவில் உள்ளது) நகர் வாழும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி செல்வி. காவியா சிறப்பு நிகழ்ச்சிக்கென அழைக்கப்பட்டிருந்தார். செல்வி. காவியா தனது பத்தாம் வயதிலேயே 1330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்து, நினைவு தவறாது கூறக்கூடிய பெயர் பெற்றவர். அரங்கத்தின் முன் 19 நூற்றாண்டு தோன்றிய அரும்பெரும் தமிழறிஞர்கள் நிழற்படங்கள் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சியகமாகவைக்கப்பட்டிருந்தது. ஆண்டு விழா குறிப்பிட்ட நேரத்தில் சரியாக 2:00 மணிக்கு தமிழ்ப்பள்ளி மாணாக்கர்களின் "தமிழ்த்தாய் வாழ்த்து"டன் துவங்கியது. டேரியன் தமிழ்ப்பள்ளி மாணவர் அலெக்சின் "ஏமாறாதே! ஏமாறாதே!!" (பூனைகளும், குரங்கும்) ஓரங்க நாடகத்துடன் ஆரம்பித்து, மாணவிகள் அனிதா, அத்தியாவின் முயலும், ஆமையும் நாடகம், மாணக்கர்கள் வருண், அரிணியின் பூனைக்குட்டி பாடல் என சுவைகூட்டி அமைந்தது. அடுத்து வந்த டெசு பிளெய்ன்சு மாணவியின் கன்றுக்குட்டி பாடல் அனைவரையும் ஈர்த்தது.
இன்டியானா மாணாக்கர்களின் குழுப்பாடல் "தமிழ் கற்போம் வாரீர்" அதனையும் மிஞ்சுவதாக இருந்தது. அதைத் தொடர்ந்து வந்த மில்வாக்கி பள்ளி மாணாக்கர்கள் ஒளவைப்பாட்டியின் ஆத்திச்சூடியைச் சுவைபட நடித்து விளக்கியது அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து வந்த "தென்னாலி ராமன்" நாடகம் அவையை அதிர வைத்தது. எம்மாலும் இதைப்போல் சுவையோடு செய்ய இயலும் என்பதாக நேப்பர்வில் மாணாக்கர்கள் "கலாட்டக் குடும்பம்", "குட்டிப் போடும் பாத்திரங்கள்" நாடகங்களால் கூடி இருந்தவர்களை சிரிப்பலையில் அசத்தி விட்டனர். தொடர்ந்த "ஒளிப்படைத்த கண்ணினாய்" பாடல் அரங்கத்தின் ஒளியையே கூட்டியது எனலாம். தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பில் பெரிய பள்ளியான சாம்பர்க் தமிழ்ப்பள்ளி 35 மாணாக்கர்களைக் கொண்டு அரங்கத்தில் பன்சுவை நிகழ்வென பாடல்கள், நாடகங்கள், தமிழ் உரைகள் பல நடத்திச் சிறப்பு செய்தது. பள்ளி மாணாக்கர்களின் தமிழார்வமும், மொழிச்சரளமும், கற்பித்த ஆசிரியர் திறனும் அமெரிக்க மண்ணில் ஆச்சர்யம் என்றே இருந்தது.
விழாவின் முத்தாய்ப்பாக சிகாகோ சாம்பர்க் பள்ளி மாணாக்கர்களின் "முரண்பாடு" நிகழ்வு அமைந்து விட்டது. கொடுக்கப்பட்ட 12 தலைப்புகளிலிருந்து ஒரு தலைப்பை 5 மாணாக்கர்கள் ஒவ்வொருவரும் குலுக்கலில் எடுத்து, ஒரு நிமிடம் தலைப்பை ஆதரித்தும், மறு வட்டத்தில் அதே தலைப்பை எதிர்த்து முரண்பட்டு விவாதித்தது மாணக்கர்களின் தமிழிலில் விவாதிக்கும் திறமையையும். இந்த மண்ணில் தமிழ் நிலைக்கவும், இளைய தலைமுறை தமிழ் காத்து நிற்கவும் பாடு படும் ஆசிரியர்கள் உழைப்பின் மேன்மையையும் வெளிபடுத்துவதாக இருந்தது. இந்த மாணாக்கர்களுக்கு அரசியல்வாதிகளாக வரக்கூடிய தகுதியையும் முன்கூட்டியே தெரிவிப்பதாக இருந்தது.
விழாவின் முத்தாய்ப்பாக செல்வி. காவியாவின் சிறப்பு நிகழ்ச்சி அமைந்துவிட்டது. தான் நினைவில் பதித்த திருக்குறளை பாடலாகப் பாடி தன் நிகழ்ச்சியை ஆரம்பித்து, தனக்கு பிடித்த குறள்களைக் கூறி, பின்னர் அதிகாரங்கள் சில கூறி தன் திறமையால் கூடி இருந்தவர்களைக் கவர்ந்தார். அவர் திறமையை முற்றிலுமாக அறிய சோதனையில் ஈடுபட்ட மாணக்கர்கள் கேட்ட குறள் எண்களுக்கும், ஆசிரியர்கள் கேட்ட குறள் அதிகாரங்கள் எண்களுக்கும், பெற்றோர்கள் கேட்ட உதடு ஒட்டாத குறளையும், வானத்தையும், மலையையும், கடலையும் விட பெரியவை யென குறளில் அமைந்துள்ள பண்புப் பெருமைகளையும் சற்றும் தயக்கமின்றி சொல்லி குறளில் தன் ஆழ்ந்த ஈடுபாட்டை குறையின்றி நிருபித்து விட்டார். குறையின்றி செய்த இச்சிறுமிக்கு நிறைவான "திருநிறைசெல்வச்சிட்டு" என்ற பட்டமளித்து அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் பெருமை அடைந்தது. உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குநர் இராம்மோகன் திருக்கரங்களால் தந்து அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் பெருமை அடைந்தது. செல்வி. காவியா இந்த நிறைவைக் குறைவின்றி பெற மூலகாரணமாய் நிற்கும் அவர்தம் அன்னை "திருவாட்டி. தேன்மொழி" அவர்களையும் பாராட்டி அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் தன் நன்றிக் கடனையும் நிறைவேற்றியது. செல்வி. காவியாவின் திறனை இங்கு தமிழ் கற்கும் ஒவ்வொரு மாணாக்கரும் அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன், அடுத்த ஆண்டு விழாவில் அதிக திருக்குறள்களை கற்று, நினைவில் பதிக்கும் மூன்று மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு குறளுக்கும் ஒரு டாலர் (dollar) அளிக்கப்படும் என்ற செயற்திட்டத்தை கூடியிருந்தோர் கரவொலி எழுப்ப அமெரிக்கத் தமிழ்பள்ளி நிறுவனம் அறிவித்தது. அடுத்து, நாள் தவறாது தமிழ்ப்பள்ளி வந்த மாணாக்கர்கள் 25 பேருக்கும் பாராட்டிதழ்கள் வழங்குதலுடன் விழா இனிது முடிந்தது.
|