|
தேடல்கள் புதிதல்ல..
வாழ்க்கையே நமக்கு வரிசையாய் தேடல்கள்தானே?
இரையைத்தேடியும் இறையைத் தேடியும் இலக்கைத் தேடியும் இலக்கங்களைத் தேடியும் கலைந்து போகும் காலங்கள்
பிறந்த பொழுதிலிருந்து தேடத் தொடங்குகிறோம்
தவிக்கின்ற பசிக்கு தாயின் மார்புக்குள் முகம் புதைத்து மாய்ந்து மாய்ந்து சேயொன்று வாய் குவித்து எதையோ தேடும் .. ..
தேடல் நாடகம் அங்குதான் தொடக்கம்
மரணப் படுக்கையிலே மல்லாந்து படுத்திருக்கும் தகப்பனின் விழிகள் ..
சாகும் தருவாயில் தேகம் உயிர்ப் பிரிய கண்கள் வெளிர கைகள் தளர ஓடிக் களைத்திட்ட உடற் சூடு தணிய நாடி நரம்புகள் ஆடி ஒடுங்கிட மூச்சுக் காற்று முனகலுடன் பிரியமானவர்களை கண்டு பிரியாவிடை கூறுதற்கு கண்கள் அலைபாயும் .. ..
அது - ஒரு மனிதனின் இறுதித் தேடல்
தேடலுக்கு எல்லை உண்டா? என்றால் இல்லை .. தேடலுக்கு வானமே எல்லை
தேடலுக்கு வயது உண்டா? என்றால் இல்லை தேடலுக்கு மரணமே எல்லை
வீடு போ.. போ.. என விடை பகர காடு வா.. வா .. என் கரம் கொடுக்க மண்ணறைக்குள் மறையும் வரை தொடரும் தேடல்
திருவிழா நெரிசலில் திசைமாறிய சிறுவர்களை வலைபோட்டு தேடும் ஒலிபெருக்கி அறிவிப்பு மட்டுமா தேடல்?
திக்குத் தெரியாத காட்டில் -உன்னை தேடித் தேடி அலைந்தேனே என்று கண்ணபிரானைத் தேடி கவிதையிலே பொருள் வடித்த கவிராஜன் பாரதியின் தேடலும் ஒரு தேடல்
பூஜ்ஜியத்திலிருந்துக் கொண்டு ராஜ்ஜியத்தை ஆள்பவனை
இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கேயோ அலைகின்றாய் ஞானத் தங்கமே என்று
பரம்பொருளின் தேடலை பாட்டாக வடித்தானே ஒரு ஞானக் கிறுக்கன் அவன் தேடலும் ஒரு தேடல்
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் என
பாறைக்குள் ஒளிந்திருக்கும் தேரைக்கும் பக்குவமாய் இரையை பகிர்ந்தளித்தானே அந்த முக்காலமும்அறிந்த முழுமுதற் அரசன்
அவனைத் தேடுதல் அது ஆன்மீகத் தேடல்
முகவரிகள் தொலைந்தனவோ முகிலினங்கள் அலைகிறதோ முகவரிகள் தொலைந்ததினால் அது மழையோ? - இது ஒரு தீந்தமிழ்க் கவிஞனின் தேடல் கற்பனையின் ஊடகப் படிமம்
தேடலும் ஒரு சுகம்
காதலாகட்டும் கைகளின் சில்மிஷமாகட்டும் கவிதையில் மறைந்திருக்கும் கருத்தாழம் ஆகட்டும்
தேடலும் ஒரு சுகம்
ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும் தேடாத சுகங்கள் ஆயிரம் உண்டு
எல்லா தேடலும் சுகமா? என்றால் இல்லை ...
சில தேடல்கள் சில்லென்று ரத்தத்தை உறைய வைக்கும் ... உள்ளத்தை உருக வைக்கும் நெஞ்சை பிழிய வைக்கும்.. இதயத்தை நெகிழ வைக்கும்
புல்புல்கள் இசைக்கும் காஷ்மீர மண்ணில்
மனதைக் கல்லாக்கி மடிந்த உடல்களை இடிந்த இடிபாடுகளiல் ஒடிந்த கை கால்களோடு விடிய விடிய ஒவ்வொன்றாய் உருவி எடுத்தோமே - அது
உலகத்தை அழ வைத்த தேடல்
இறுதிப் பயணமென அறியாமல் இரயில் பயணம் செய்தவரை
ஆந்திர மண்ணில் ஆற்றில் தத்தளித்த அகோர பிணங்களை அலசித் தேடினோமே - அது
அனைவரையும் அதிர வைத்த தேடல்
டிசம்பர் 26
கிளiஞ்சல்களைத் தேடிய கடற்கரை மணலில் கிழிந்துப் போன மனித உடல்களைத் தேடினோமே
அது அகிலத்தையே அலற வைத்த தேடல்
ஒரு சிலம்பின் தேடலில் பிறந்ததுதான் சிலப்பதிகாரம்
ஒரு சீதையின் தேடலில் பிறந்ததுதான் இராமாயணம்
ஒரு கணையாழியின் தேடலில் காப்பியமானதுதான் சாகுந்தலம்
லைலாவைத் தேடிய மஜ்னுவின் தேடல் காதல் சாம்ராஜ்ஜியத்தின் - ஒரு காப்பியத் தேடல்
ஞானத்தின் தேடலில்தான் ஒரு சித்தார்த்தன் புத்தனானான்
கலிங்கத்துப் போரில் குருதி படிந்த மண்ணில் தேடிய தேடலில் சாம்ராட் அசோகன் புத்த துறவியானான்
வார்த்தைகளின் தேடல் கவிதை வர்ணங்களின் தேடல் வானவில் வாலிபத்தின் தேடல் காதல் வயிற்றுப்பசியின் தேடலே வாழ்க்கையின் ஓட்டம்
யமுனை நதி தீரத்தில் ஒரு சலவைக்கல் சங்கீதம்
அது மும்தாஜின் நினைவால் எழுந்த ஒரு முகலாய அரசனின் தேடல்
காதல் தோல்வியென்றும் கடன் தோல்வியென்றும் காரணங்கள் காட்டி
மரணத்தின் தேடலில் மடிந்த கோழைகள்தான் எத்தனை எத்தனை?
ஜீவியும், விஜியும், சில்க்கும் ஷோபாவும், மோனலும்
தவறான தேடலின் சரியான உதாரணங்கள்
எல்லோரும் எங்கேயோ எதையோ ஒன்றை எப்போதும் தேடுகிறோம்
இழப்பினாலும் தேடல் வரும் தேவையினாலும் தேடல் வரும்
வாழ்க்கையே தேடல் தேடலே வாழ்க்கை
மண்ணைத் தேடியதில் கண்டது வைரம்
கடலைத் தேடியதில் கிடைத்தது முத்து
விடியல்களைத்தேடும் முதிர்க் கன்னிகள்
முதியோர் இல்லத்தில் முடங்கிக் கொண்டு முழுமையான பாசத்தை தேடும் முதுமையுற்ற பெற்றோர்கள்
புன்னகையை தனக்குள் தேடும் பொட்டிழந்த இளம் விதவைகள்
ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஒவ்வொருத்தனின் தேடல்தானே
அரசியல்வாதிகளiடம் ஓழுக்கத்தை தேடுகிறோம் அகப்படவில்லை
தேர்தலில் நியாயத்தை தேடுகிறோம் தென் படவில்லை
மனிதனிடம் மனித நேயத்தை தேடுகிறோம் மருந்தளவும் கிடைக்கவில்லை
|