|
மாற்று கட்சியினரும் தமிழக மக்களும் - ஏன் உடன் பிறப்புகளே வியக்கும் அளவிற்கு நடந்து முடிந்த தேர்தலில் எப்படியோ ஜெயிச்சாச்சு. மிரட்டல் எடுபடாததால் கெஞ்சி கூத்தாடி வாரிசுகளுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மந்திரி பதவி வாங்கியாச்சு. ஒருவழியாக குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் சமாதானப்படுத்தியாச்சு. தேர்தலில் கட்சிக்கு பக்கபலமாக இருந்த அரசு ஊழியர்களுக்கும் ஆறாவது சம்பள கமிஷன் சொன்னதைப் போல எல்லா சலுகைகளையும் குடுத்தாச்சு. மகனுக்கு துணை முதல்வர் பட்டம் கட்டி இனி எனக்கு அடுத்து இவர் தான் எல்லாம்னு சொல்லாம சொல்லியாச்சு. தேர்தல்ல ஜெயிச்சுட்டோம் ஜெயிச்சுட்டோம்னு சொல்லி சொல்லியே இங்க இருக்கற மத்த கட்சி ஆட்களை வெறுப்பேத்தியாச்சு.
இப்படி தான் செய்து முடித்துவிட்ட பல பணிகளைப் பற்றி முதல்வர் பட்டியல் போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் - அவரது ஆட்சியின் ஆரம்ப காலத்தில் உயர்ந்த விலைவாசி இன்னமும் இறங்கவில்லை. பாசனத்திற்கு சரியான அளவிற்கு தண்ணீர் இன்னமும் கிடைப்பதில்லை. மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்று யாருக்குமே தெரியவில்லை. இதில் எங்கே தொழில் செய்வது என்று மக்கள் நொந்து கொள்ளும் அவலம் மாறவில்லை. இதெல்லாம் தமிழக மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு சில உதாரணங்கள் தான் - பட்டியல் போட ஆரம்பித்தால் முடிக்கவே முடியாது.
நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க எப்படி வெற்றி பெற்றது என்பது அக்கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். பணத்தை தேர்தல் நேரத்தில் வாரி இறைப்பதால் மட்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளமுடியாது. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்ற 12 இடங்கள் இதை முதல்வருக்கு நன்றாக புரியவைத்திருக்கும். இலவசங்களை மட்டும் வழங்காமல் உண்மையாகவே மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளிலிருந்து அவர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்க முதல்வர் - துணைமுதல்வர் முன்வரவேண்டும். அப்போதுதான் 2011 தைரியமாக கரன்சிகளின் துணையில்லாமல் மக்களை சந்திக்கும் துணிவு ஆளும் கட்சிக்கு வரும்.
எம்.ஜி.ஆர் அளவிற்கு முதல்வரை எதிர்த்து சாதுர்யமாக செயல்பட மாற்று கட்சியினருக்கு இன்னமும் தெரியவில்லை - அந்த சூட்சுமத்தை அவர்கள் பிடித்துவிட்டால் ஆளும் கட்சி அவ்வளவுதான். தற்போதே காங்கிரஸ் தயவில் தான் தங்கள் ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது முதல்வருக்கும் தெரியும் - கூட்டணி தலைவர்களுக்கும் தெரியும். பணநாயகம் - அடாவடி இவை எப்போதாவது வெற்றிபெறும் - எப்போதும் அல்ல. சாகும் வரை கிட்டத்தட்ட நிரந்தர முதல்வராக ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் மக்களை தனது அன்பினால் கட்டினாரே தவிர பணத்தால் அல்ல - அந்த அன்புதான் இன்றும் அவரது கட்சியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை தீர்க்கும் வழியைப் பாருங்கள். அதுதான் நிரந்தர வெற்றியைத் தேடித்தரும். உணர வேண்டியவர்கள் உணர்வார்களா ?
|