ஜூன் 30 2005
தராசு
வ..வ..வம்பு
டெலிவுட்
முச்சந்தி
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
அறிவிப்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
ஹாலிவுட் படங்கள்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கவிதை
துணுக்கு
அடடே !!
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : சுனாமி : ஆட்சித் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு
- திருமலை ராஜன் [strajan123@yahoo.com]
| Printable version | URL |
"ஆட்சியாளர்களில் ஒர் வித்தியாசமான ஆளுமையாக திரு.ராதாகிருஷ்ணன் திகழ்கிறார் என்பதை அவரது பேச்சும் செயல்களும் உணர்த்தின."

நாகப்பட்டினம் சுனாமி நிவாரணத்தை நிர்வாகித்து வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பு:

சமீபத்தில் தமிழ்நாட்டையும் உலகையும் உலுக்கிய மிகப் பெரிய துயரங்கள், குழந்தைகளைக் கருக்கிய கும்பகோணம் தீ விபத்தும், சுனாமி பேரழிவும். இந்த இரு பேரிடர்களையும் சமாளித்து, மக்களுக்கு உதவும் ஒரு உன்னதப் பணி 37 வயதேயான ஒரே இளைஞரிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இரண்டு துயரச் சம்பவங்களையும் திறம்படக் கையாள வேண்டிய பொறுப்பு அன்றைய கும்பகோணம் கலெக்ட்டராகவும், சுனாமி நிகழ்ந்த பொழுது தஞ்சைக் கலெக்டராகவும் பொறுப்பாற்றிய திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் கடைமையாயிற்று. சுனாமி நடந்த ஒரு வாரத்திறுகுள் சுனாமியால் அதிகம் பாதிக்கப் பட்ட நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.ராதாகிருஷ்ணன் தமிழக அரசால் அமர்த்த பட்டார். இவர் இந்தப் பணிகளுக்கு முன்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் துணைக் கலெக்டராகவும், கலெக்டராகவும் பணியாற்றி பல சிக்கலான தருணங்களை திறமையாக நிர்வாகித்தவர். அவற்றுள் கண்டதேவி தேர் இழுப்புப் பிரச்சினைக்கு ஒரு சுமக தீர்வு காண்பதும் ஒன்று. தற்போதய நாகப்பட்டினம் கலெக்டரும், சுனாமி நிவாரணப் பணிகளை ஒருஙிகிணைத்து, மீண்டும் நாகப்பட்டினத்தை சகஜ வாழ்க்கைக் கொண்டு வரும் மிகப் பெரிய பொறுப்பும் உடைய ராதாகிருஷ்ணன், அமெரிக்க வெளியுறவு துறையின் அழைப்பின் பேரில் அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவின் பல பேரிடர் மீட்பு/நிவாரண மையங்களைப் பார்வையிடவும், பரஸ்பர அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மூன்று வாரச் சுற்றுப் பயணமாக அமெர்க்கா வந்திருந்தார். அவர் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நிலநடுக்க ப் பேரிடர் தடுப்பு மையத்துக்கு வருகை புரிந்த சமயம், கும்பகோணத் தீ விபத்து நடந்த சமயத்தில் நிதியுதவி வழங்கி அனுதாபம் தெரிவித்த வளைகுடாப் பகுதி தமிழ் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பியதால், வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சார்பாக, சான் ஓசே நூலக அரங்கில் வைத்து அவருக்கு ஒரு வரவேற்பு அளிக்கப் பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதாகிருஷ்ணன், சுனாமி நடந்த டிசம்பர் 26 முதல் இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளை ஒரு பவர் பாய்ண்ட் காட்சி மூலமாக பங்கு கொண்டோருடன் விளக்கினார். நிகழ்ச்சியின் பொழுதும், பிறகு அவருடன் பல மணி நேரங்கள் கலந்துரையாடிய  பொழுதும் அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் சிலவற்றை இங்கே அளித்துள்ளேன். சுனாமி பாதிப்புக்குப் பின் என்ன நடந்து வருகிறது என்பதை அறிய இந்த பதிவு உதவலாம்.

மணிரத்தினம் பார்த்தால் தன் அடுத்த படத்திற்கு கலெக்டர் ரோலில் அல்லது கதாநாயகனாக நடிக்க நிச்சயம் தள்ளிக் கொண்டு போய் விடும் அளவிற்கான ஸ்மார்ட்டான, உயர்ந்த, எளிமையாக பழகும் இனிய  இளைஞர். உலகின் ஒரு மிகப் பெரிய துயரப் பணியை நிர்வாகிப்பது இவ்வளவு இளமையான இந்த மனிதரா என்று கிளிண்ட்டன் ஆச்சரியப் பட்டதில் ஆச்சரியமேதுமில்லை. கால்நடை மருத்துவ்ம் படித்து விட்டு, மரபியல் பொறியியலில் மேற்படிப்பும் படித்து விட்டு, இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதி, அதில் நாட்டின் ஏழாவது இடத்தில் தேர்வாகியுள்ளார். கடந்த 14 வருடங்களாக மாவட்ட நிர்வாகங்களில் சிறப்பான பெயரெடுத்துள்ளார். சென்னை மாநாகராட்சியின் ஆணையர் எனப்படும் மிகக் கடினமான பதவியிலும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளார். கும்பகோணத்தில் தீ விபத்து நடந்த உடனேயே, நடவடிக்கைகள் பல எடுத்து பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உதவியதுடன், உயிர் பிழைத்த பல குழந்தைகளுக்கு உரிய சிகிச்சைகள் பலவும் பெற்றுத் தந்துள்ளார். ஐ நாவின் தூதுவராக் இந்தியா வந்து நாகப்பட்டினத்தில் சுனாமி நிவாரணப் பணிகளைப் பார்வையிட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்ட்டன், தான் பார்வையிட்ட் மையங்களிலேயே நிவாரணப் பணிகளில் முண்ணனியில் இருப்பது நாகப்பட்டினம்தான் என்றும் அதற்குக் காரணமான இளைஞரான ராதாகிருஷ்ணனும் அவரது குழுவினரையும் பெரிதும் பாராட்டுவதாகக் குறிப்ப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட ராதாகிருஷ்ணனை அமெரிக்க அரசே தனது விருந்தினராக அழைத்துக் கொளரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளிலும் மீட்புப் பணித் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை அழைத்த அமெரிக்க அரசு இந்தியாவிலிருந்து இந்த இளம் அதிகாரியின் பணியினால் ஈர்க்கப் பட்டு அழைத்துள்ளனர். இந்த பரிமாற்றத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் வாஷிங்டன் டி சி, சியாட்டி, மியாமி, ·பீனிக்ஸ், சான்பிரான்சிஸ்கோ, ஹோனலூலூ போன்ற பல நகரங்களில் உள்ள பேரிடர் மீட்பு, அவசர நிலைகளை எதிர் கொள்ளும் மையங்கள், தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் மையங்கள், போன்ற பல்வேறு அமெரிக்க அரசுத் துறைகளில் உள்ள நிபுணர்களின் அறிவையும் அனுபவங்களையும் அறிந்து கொண்டதோடு, அவர்களிடமும், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன். இவர் ஸ்ரீலங்கா அரசின் அழைப்பின் பேரில் தனது அனுபவத்தினை ஆலோசனையாக வழங்குவதற்காக இலங்கையின் சுனாமியால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளார். இந்தியா போன்று அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு (அங்கு கலெக்டரை ஏஜெண்ட் என்று வழங்குகிறார்களாம்) சுயமாகச் செயல் படக் கூடிய சுதந்திரம் இல்லாததால் எல்லாவற்றைக்கும் மைய அரசையே எதிர் நோக்க வேண்டிய கட்டாயங்கள் உள்ளதாகவும், தங்கள் பட்டறிவைக் கொண்டு செயல் பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுனாமி கரையைத் தாக்கிய தினம் தஞ்சாவூர் கலெக்டரான ராதாகிருஷ்ணன், பக்கத்தில் உள்ள நாகப் பட்டினம் மாவட்டத்திற்கு உதவி செய்வதற்காக தனது மாவட்டத்தில் இருந்த ஆம்புலன்ஸ்கள், மற்றும் மருத்துவர்களை அழைத்துக் கொண்டு உடனடியாக நாகப்பட்டினம் விரைந்துள்ளார். அங்கு அவர எதிர் நோக்கிய ஆயிரக் கணக்கான பீணங்கள் அரசு நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளன. பணிகளில் ஈடுபட வேண்டிய அரசு ஊழியர்கள் பலரும் தங்கள் உற்றார் உறவினரை இழந்து விக்கித்து நின்றுள்ளனர். மீடியாக்களின் கடும் கண்டனங்களுக்கு நிர்வாகம் உள்ளாகியுள்ளது. முதல் நாள் தான் எதிர்நோக்கிய காட்சிகளை ஏராளமான புகைப்படங்களின் உதவியுடன் விளக்கினார். சுனாமி பாதித்தப் பகுதிகளிலேயே நாகப்பட்டினம்தான் அதிக இழப்பைச் சந்தித்துள்ளது. அதிலும் சுனாமித் தாக்குதலின் கிரவுண்ட் சீரோ எனப்படுவது அக்கரைப் பேட்டை என்ற இடமாகும். அதை அணுக வேண்டிய பாலமும் இடிந்து போயுள்ள நிலமை. அதிலிருந்து எப்படி மீண்டோம் என்பதை பல புள்ளி விபரங்கள், புகைப்படங்கள், தகவல்கள் துணை கொண்டு விளக்கினார். சுனாமி 13 நாடுகளைத் தாக்கியுள்ளது. தமிழ் நாட்டில் 13 மாவட்டங்களில் உள்ள 13 நகரங்களையும், ஸ்ரீலங்காவில் 13 மாவட்டங்களையும் தாக்கியுள்ளது. (13 என்பது அமெரிக்கர்களுக்கு ஆகாத ஒரு எண் என்பது குறிப்பிடத்தக்கது. அடுக்கு மாடிகளில் 13 வது மாடி மட்டும் இருக்காது, 12க்குப் பிறகு 14தான் இருக்கும், ·பிரைடே தி 13த் என்று படமே வந்துள்ளது). நாகப்பட்டினத்தில் 52ம் ஆண்டிலிருந்து இது வரை புயல், மழை, வெள்ளம் போன்ற பல்வேறு துயர்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக சுனாமியினால் இறந்துள்ளனர். ஏறத்தாள 6065 பேர் இறந்துள்ளனர், 828 பேர்களைக் காணவில்லை, ஆயிரம் பேர்கள் வேளாங்கண்ணியில் மட்டுமே இறந்துள்ளனர். சுனாமி மிக உக்கிரமாகத் தாக்கியது நாகப்படினம் மாவட்டத்தையே. சுனாமியின் பாதிப்பில் 76% நாகப்படினத்தை மட்டுமே பாதித்துள்ளது. 2,2 கிலோமீட்டர் வரை கடல் நீரில் நிலப்பகுதிக்குள் ஊடுருவியிருக்கிறது. மாவட்டத்தின் அரசுத் தலைமை மருத்துவமனையே தண்ணீரில் மூழ்கிவிட்டிருக்கிறது.

முதல் இரண்டு நாட்கள் பிணத்தை அள்ளி பெரிய குழிகளில் தோண்டி புதைப்பதற்கு புல்டோசரை பயன்படுத்தியுள்ளனர். அது கடுமையான எதிர்ப்பையும் கண்டனங்களையும் சந்தித்துள்ளது. முதல் இரண்டு தினங்கள் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்ததும், ஒரு கட்டுப்பாட்டுக்குள் வர முடியாமல் தவித்ததையும் ஒத்துக் கொள்கிறார். உடனடியாக பிணங்களை அப்புறப்படுத்தி, மேலும் தொற்று நோய் பரவாமல் தடுக்க வேறு வழியில்லாமல் அதைச் செய்ய நேரிட்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். ஒரு வாரம் கழிந்த பின் , இவரை தஞ்சையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அவர் காண்பித்த பல்வேற்ய் புகைப் படங்களின் நிலமையின் உக்கிரம் தெளிவாகத் தெரிந்தது. 15-20 லட்சம் பெருமாணமுள்ள நூற்றுக் கணக்கான படகுகள், சிக்கிச் சின்னாபின்னமாகி, ஆங்காங்கே கிடந்தன. தெருவெங்கும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. பிணங்களை கையாள்வதும், தொற்று நோய் பரவாமல் தடுப்பதும், சுத்தமான குடிநீர் வழங்குவதும் தப்பித்தவர்களுக்கு உடனடி உணவு வழங்குவதுமே, முதல் வாரத்தின் தலையாயப் பணிகளாக இருந்துள்ளன. 8000 மக்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப் பட்டுள்ள இடங்களில் தலித் மக்கள் வெளியேற்றப் படுகின்றனர் என்ற வதந்தி வேறு வந்துள்ளது. உண்மையில் அந்தந்தப் பகுதி மக்கள் ஒவ்வொரு இடங்களில் தங்கியிருக்கும் பொழுது ஏற்கனவே நிரம்பி வழியும் இடங்களில் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களை உள்ளே விடாமல் செய்துள்ளனர், மற்றபடி யாரும் வெளியேற்றப் படவோ தவிர்க்கவோ படவில்லை என்றார். அரசின் எதிர்கொள்ளலிலும் ஆரம்ப கட்டங்களில் பல குறைபாடுகள் இருந்தது எனவும், ஆனால் விரைவிலேயே அரசு நிர்வாகம் முடுக்கி விடப்பட்டு நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது என்று குறிப்பிட்டார். சிக்கலான தருணங்களில் அரசாங்கம் தக்கதொரு பொதுமக்கள் தொடர்புத் துறையை அமைக்கத் தவறியதால் பல்வேறு வதந்திகளும், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் கண்டனங்களுக்கும் உள்ளானதாகவு, விரைவிலேயே அவை யாவும் சீர் செய்யப் பட்டதாகவும் கூறினார்.

பேரிழப்பின் மூன்றாவது நாளன்று ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட தலைமைக் கண்காணிப்பு மையம் சாந்த ஷீலா நாயர் அவர்கள் தலைமையில் அமைக்கப் பட்டிருக்கிறது. பத்து ஐ ஏ எஸ் அதிகாரிகளிடம் தலைக்கு 7 ஊர்கள் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ஆட்சியாளரிடத்தும் 5 லட்ச ரூபாய்கள் சாக்குப் பையில் அடைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு அதிகாரியிடமும் தன்னிறைவுள்ள ஒரு குழுவும் ஒதுக்கப் பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனது இடங்களில் உள்ள நிவாரணங்கள் அனைத்தையும் வேறு இடங்களுக்கு அலையத் தேவையில்லாமல் நிவர்த்தி செய்யப் பணிக்கப் பட்டுள்ளனர். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளுங்கள், மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை அளியுங்கள் என்பது தான் ஒரே ஒரு கட்டளையாக இடப்பட்டிருக்கிறது. ஒரு டிரான்ஸ்·பார்மர் நிறுவ வேண்டுமானால் சாதாரண தருணங்களில் ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்ளும் மின் துறை, ஐந்தே நாட்களில் நிறுவி சாதனை படைத்துள்ளது. போர்க்கால அடிப்படையில் பல்வேறு மீட்புப் பணிகள் நடந்தேறியுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 60 கிலோ அரிசியும், பலசரக்கும் மண்ணென்ணையும் உடனடியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளன. சேவை நிறுவனங்கள் கலெக்டர் மூலமாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. அதனால் ஒவ்வொரு சேவை நிறுவனத்தினரிடமும் ஒவ்வொரு உடனடி மீட்புப் பணிகள் ஒப்படைக்கப் பட்டுள்ளன. சுகாதாரம், குப்பை அகற்றுதல், மனநோய் ஆலோசனை, உணவு, மருத்துவம், என்று ஒவ்வொரு சேவை நிறுவனத்திடமிருந்தும் ஒவ்வொரு பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. பத்து குடும்பங்களுக்கு ஒரு கழிப்பறை கட்டப் பட்டுள்ளது.

உடனடி நிவாரணங்கள் வழங்கப் பட்டு மக்கள் ஒருவித சகஜ நிலமைக்குத் திரும்பியுள்ள நிலையில், பல்வேறு திட்டப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழக அரசு 150 கோடி வரை உடனடி மீட்புக்குச் செலவிட்டுள்ளது. பாலங்கள் வேகமாகப் போடப் பட்டு வருகின்றன. பத்தாயிரம் வீடுகள் கட்டுவதற்கான மனைகள் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப் பட்டு வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மீனவர்கள் தங்கள் தொழிலைத் தொடங்கத் தேவையான உபகரணங்களும், படகுகளும், நிதியுதவிகளும் தொடர்ந்து அளிக்கப் பட்டு வருகின்றன. 1200 அநாதைக் குழந்தைகள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்ரப்பட்டு, அவர்களுக்கு மிக வசதியான தங்கும் இடம், உணவு, உடை, தனிச் சிறப்புக் கல்வி, மனோதத்துவ சிகிச்சை போன்றவை வழங்கப் பட்டு வருகின்றன. அதில் 222 குழந்தைகள் தாய் தந்தை இருவரையும் இழந்தவர்கள்.
மாவட்ட ஆட்சித்துறை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களில் பலரும் தங்கள் நெருங்கிய உறவினர்களைப் பறி கொடுத்துள்ளனர். ஆயிரக்கணக்கான பிணங்களை அள்ளி எரிக்க நேர்ந்த பொழுது அரசு ஊழியர்களின் மன நிலை பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்பதால் அனைவருக்கும் உடனடியாக மன நல சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன. தான் ஒரு மருத்துவர் என்பதால் தான் உணர்வு ரீதியாக மன திடத்துடன் இருந்ததாகவும் ஆனால் பிற ஊழியர்கள் கடுமையான மன அதிர்வுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டார். சாப்பிடவே முடியாமல், டிபன் பாக்ஸ¤களைத் திறந்தவுடன் குப்பென்று பிண நாற்றம் அடித்திருக்கிற்து. அமெரிகாவின் செப் 11க்கு முதன் முதலில் உதவச் சென்ற பலரும் பின்னால் தற்கொலை செய்து கொண்ட நிலையைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு உரிய மனநலச் சிகிச்சையும் ஆலோசனையும் வழங்க ஏற்பாடு செய்ததாகக் குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தில் சுனாமியின் காரணமாகத் தடை பட்டு போய் விட்ட 25 திருமணங்களை தான் முன்னின்று நடத்தி வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

சுனாமியால் மனிதாபினாமம் வலுப்பெற்றது என்று குறிப்பிட்ட கலெக்டர், இரவு பகலாக, அயராது உழைத்த DYFI,RSS, MMK போன்ற தொண்டர்களின் தொண்டுள்ளத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். கும்பகோணத்தில் குழந்தைகளை இழந்த ஏழைப் பெற்றோர்கள் 1.5 லட்ச ரூபாய் திரட்டி தன்னிடம் அளித்த பொழுது தான் மிகவும் உணர்ச்சி வயப்பட்டதாக மனம் நெகிழ்ந்து கூறினார். இந்த சுனாமியின் மூலமாக இந்தியா மாபெரும் துயரினை எதிர் கொண்ட பொழுதும் சீக்கிரமே, மீட்டெழும் சக்தி படைக்கப் பெற்றிருக்கிறது என்பதை உணர்த்தியது என்பதை குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன் அதை நாட்டின் வலிமையாகக் குறிப்பிட்டார். சுனாமியின் காரணமாக ஒரு சில நன்மைகளும் விளைந்துள்ளன என்றும் அவை எதிர்காலத்தில் இது போன்ற பேரழிவுகளை எதிர் கொள்ள உதவும் எனக் குறிப்பிட்டார். அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு தேவையான தொழில் நுட்பங்களும், ஒருங்கிணைப்பு மேலாண்மைகளும் அதிகரிக்கப் பட வேண்டுமெனக் குறிப்பிட்டார். முக்கியமாக மக்கள் சட்டத்தை மதிக்காமல் இருக்கும் போக்கு பெருத்த இடையூறாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அமெரிக்காவில் அழிவுகளை எதிர் கொள்ளும் அறிவு சிறுவயதில் இருந்தே கற்பிக்கப் படுவதையும், கட்டிடங்கள் கட்டும் விதிகளில் சட்ட திட்டங்கள் கடுமையாக அனுசரிக்கப் படுவதையும் தான் அவதானித்ததாகவும் அதே கல்வியறிவு இந்திய மக்களிடமும் பரப்பப் பட வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டார். இந்தியா தான் எதிர் கொள்ளாத பல பேரழிவுகளை எதிர் கொள்ள வேண்டிய அத்தியாவசியத்தை இந்த சுனாமி உணர்த்தியுள்ளதாகவும் இது போன்ற எதிர்பாராத எரி நட்சத்திரம் தாக்குதல் போல பல அழிவுக்ள் இருப்பதாகவும், அவற்றையெல்லாம் எதிர் கொள்ள் வேண்டிய தயார் நிலைக்கு இந்தியா தன்னைத் தயார் செய்து கொள்ள வேணிய அவசியத்தினை குறிப்பிட்டார்.

ஆட்சியாளர்களில் ஒர் வித்தியாசமான ஆளுமையாக திரு.ராதாகிருஷ்ணன் திகழ்கிறார் என்பதை அவரது பேச்சும் செயல்களும் உணர்த்தின. தனது இமெயில் முகவரியையும், செல்பேசி எண்ணையும் பொதுவில் கொடுத்து, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். பொதுமக்களிடம் அதிகம் கலந்துறவாடி, அவர்களின் குறைகளை அந்த இடத்திலேயே முடிந்தவரை தீர்த்து வைப்பதைத் தன் கடமையாகக் கொண்டுள்ளார். இவர் தனது செல்பேசி எண்ணை பொதுவில் அளிக்க, ஒரு குடிமகன், இரவு 10.50க்கு அழைத்து 11 மணிக்கு மூட வேண்டிய சாராயக் கடை 1045க்கே மூடப் பட்டதாகவும் கலெக்டர் தலையிட்டு திறக்கச் சொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தக் கூத்தும் நடந்துள்ளது என்பதை சுவாரசியமாக விவரித்தார். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று மக்களுக்காக தன் கடமைகளை உணர்ந்து உழைக்கும் உண்மையான அதிகாரிகளைக் காண்பது அரிதாக இருக்கும் இக்காலத்தில் திரு.ராதாகிருஷ்ணன் போன்ற மக்கள் சேவகர்கள் நமது அரசு அமைப்பின் மீது ஒரு லேசான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவிற்குத் தேவை இது போன்ற நேர்மையான, மக்களுடன் கலந்து செயலாற்றும் அதிகாரிகள். அதை விட அவசியம், சட்டதினை மதித்து நடக்கும் மக்கள். இந்த இரு தேவைகளும் பூர்த்தியாகி விட்டால் அரசியல்வாதிகள் தாங்களாகவே திருந்த வாய்ப்புள்ளது. சுனாமி போன்ற பேரிடர்களைத் திறமையாக சமாளித்து ம்க்களுக்குப் பெரும் பணியாற்றிய திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களுக்கும் உரித்தாகுக.

உங்கள் கருத்து  
raj
7/4/2005 , 5:53:55 AM

 [Comment url]
மிக சரியாக சொன்னீர்கள் , நானும் நாகப்பட்டினத்தை சேர்ந்தவன் தான்.
   
Thanigaivel
7/5/2005 , 6:46:49 PM

 [Comment url]
திரு. ராதாகிருஷ்ணன் அவர்களை பற்றி படித்தேன், அவர் உண்மையில்
படித்(தேன்)
   
sethu
7/9/2005 , 10:56:44 AM

 [Comment url]
கலெக்டர் ராதாகிருஷ்ணனின் திறமைக்கு பாராட்டுக்கள். அவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தொடரட்டும் அரவது சேவை......
   
vishwa
7/13/2005 , 3:53:33 AM

 [Comment url]
கலெக்டர் ராதாகிருஷ்ணன் உண்மையில் முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பேரன் என்பது உண்மையா..?

விஷ்வா..
   
unmai
7/13/2005 , 1:31:45 PM

 [Comment url]
/** மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று மக்களுக்காக தன் கடமைகளை உணர்ந்து உழைக்கும் உண்மையான அதிகாரிகளைக் காண்பது அரிதாக இருக்கும் இக்காலத்தில் திரு.ராதாகிருஷ்ணன் போன்ற மக்கள் சேவகர்கள் நமது அரசு அமைப்பின் மீது ஒரு லேசான நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவிற்குத் தேவை இது போன்ற நேர்மையான, மக்களுடன் கலந்து செயலாற்றும் அதிகாரிகள். அதை விட அவசியம், சட்டதினை மதித்து நடக்கும் மக்கள். **/

திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் வாள்க வளமுடம். அவரைபோல் நாட்டுக்கு ஓருவர் அல்ல ஊருக்கு ஒருவர் தேவை.
   
raja
7/13/2005 , 6:10:14 PM

 [Comment url]
திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் துரிதமாகவும், திறமையாகவும் சுனாமி நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டது பாராட்டத்தக்கது. இவரைப் போன்ற சேவையாளர்களை வரவேற்றுக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தும் வளைகுடாப்பகுதி தமிழ்மன்றத்துக்கு எனது வாழ்த்துக்கள்.
   
Ganeshan
7/15/2005 , 2:01:03 AM

 [Comment url]
திரு ராதாகிருஷ்னன் அவர்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள். அவர் வர்ஙால இளைனர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்.
   
J. Rajni Ramki
11/11/2005 , 1:36:42 AM

 [Comment url]
I'd seen Mr. Radhakarishnan in Velankanni during Tsunami Relieft. But, i could meet him only on last month. Still, i couldn't believe that he is 30+. (I'm still in 20s. i'm only 29!). Kumbakonam Relief is really a milestone for Mr. Radhakarsinan. I pray God, there will not one more Uma shankar!
   
இப்னு பஷீர்
11/11/2005 , 4:30:19 AM

 [Comment url]

கலெக்டர் இராதாகிருஷ்ணன் எங்கள் மாவட்ட நிர்வாக தலைமை பொறுப்பில் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.
   
jaya
11/14/2005 , 12:54:56 AM

 [Comment url]
திரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன். அவர் இன்றைய இளைஞர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சிறந்த எடுத்துகாட்டு.
மற்றுமொறு இடர் துடைப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திகொண்டுவிட்டார். (திருவாரூர் மற்றும் நாகையில் வெள்ள நிவாரணப்பணி.
   
Raj
4/13/2006 , 1:26:46 PM

 [Comment url]
மிக அற்புதமான மனிதரை எங்களுக்கு அறிமுகம் செய்த திருமலை ராஜன் அவர்களுக்கு நன்றி.

திரு.இராதாகிருஷ்ணன் போன்றோரே உண்மையான பாரத ரத்னாக்கள்.
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |