|
சந்தன வீரப்பனுக்கு பொது மன்னிப்பு கொடுத்து அவனை உயிருடன் பிடித்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும் என்று நாம் பொதுவில் நினைத்திருப்போமோ அதை அப்படியே படமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ராமலிங்கம்.
காட்டிலிருக்கும் கொள்ளையனான ரஞ்சித் முன்னாள் முதல்வர் ரவிச்சந்திரனைக் கடத்தி பணம் பறிக்க திட்டமிடுகிறார். ஆனால் தற்போதைய முதல்வர் பிரமிட் நடராஜனோ ரவிச்சந்திரன் மீதான தனது பகையை மனதில் கொண்டு ரஞ்சித் கேட்கும் பணயத் தொகையைத் தர மறுக்கிறார். இதற்கிடையே தன்னை உயிரோடு அனுப்பினால் ரஞ்சித்திற்கு பொதுமன்னிப்பு வாங்கித் தருவதாக கூறும் ரவிச்சந்திரன் அதற்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். விளைவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகக் கூறி பிரமிட் நரடாஜன் ஆட்சி டிஸ்மிஸாகிறது. ரஞ்சித்திற்கு பொது மன்னிப்பும் கிடைக்கிறது.
எந்தக் கட்சியினருடனும் தேர்தல் சமயத்தில் கூட்டு வைக்க விரும்பாத ரஞ்சித் தனிக்கட்சி ஆரம்பிக்கிறார். மக்கள் மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கை உணர்ந்த ரவிச்சந்திரன் அவருடன் கூட்டணி அமைக்கிறார். இவர்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றாலும் ரஞ்சித் கட்சி சார்ந்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதால் ரஞ்சித் முதல்வராகிறார்.
முதல்வரான பிறகு அரசியல்வாதிகளின் ஊழலையும் அவர்கள் அடிக்கும் கொள்ளையையும் கண்டு மனம் புழுங்கும் ரஞ்சித் நேர்மையான ஒரு அதிகாரி மூலமாக ஊழல் செய்த அரசியல்வாதிகளின் பட்டியல் ஒன்றை தயார் செய்கிறார். அவர்களைத் தனக்கே உரித்தான பாணியில் தண்டிக்கிறார். அது என்ன தண்டனை? முதல்வராக இருந்தது கொண்டு ஒருவர் சட்டத்தை தன் கையில் எடுப்பது சரியா? இந்தக் கேள்விகளுக்கான விடை தான் படத்தின் முடிவு.
சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் நடந்த பல விஷயங்களை அம்பலமாக்கியிருக்கும் இயக்குனரின் துணிச்சலுக்கு ஒரு சபாஷ். தங்களுடைய சுயலாபத்திற்காக நொடிக்கு நொடி குணம் மாறும் அரசியல்வாதிகளின் நிலையை அற்புதமாக தோலுரித்து காட்டியிருக்கிறார்கள். வீரப்பன் விவகாரத்தில் அவனைக் கொல்லாமல் உயிருடன் மக்கள் மன்றத்தில் நிறுத்தியிருந்தால் இதைப் போல எத்தனை பூதங்கள் விளியில் கிளம்பியிருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. அந்த அளவிற்கு படம் முழுக்க அரசியல் நெடி பயங்கரமாக வீசும் வசனங்கள்..
காட்டில் இருக்கும் ஒரு சாதாரண கொள்ளைக்காரனாக - கிட்டத்தட்ட வீரப்பனாகவே மாறியிருக்கும் ரஞ்சித் தன்னுடைய அருமையான நடிப்பால் கவர்கிறார். அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்தையும் அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளையும் பார்த்து ரஞ்சித் மட்டுமல்லாமல் நாமும் அசந்துபோகிறோம். இவருக்கு ஜோடியாக வரும் அனாமிகாவைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.
கைதேர்ந்த அரசியல்வாதியாக ரவிச்சந்திரன் மற்றும் அவரது முன்னாள் சகாவாக மணிவண்ணன். அட்டகாசம் செய்திருக்கிறார் மணிவண்ணன். நொடிக்கு நொடி தற்போதைய அரசியல் சூழலை அப்படியே அம்பலமாக்கும் அவரது வசனங்கள்.. ஓஹோ!! போதத குறைக்கு பிரமிட் நடராஜனும் தன் பங்கிற்கு கலக்கியிருக்கிறார். டி.பி.கஜேந்திரன், ராஜ்கபூர் போன்றவர்களும் படத்தில் தலையைக் காட்டியுள்ளார்கள்.
அரசியல் தலைவர்களையும் அவர்கள் மணிக்கணக்கில் பேசும் வசனங்களையும் நம்பி ஏமாந்து போகும் முட்டாள் ஜனமாகிய நாம் இந்தப் படத்தைப் பார்த்தாவது திருந்தினால் அதுவே இப்படத்தின் வெற்றி எனலாம். அந்த வகையில் மகா துணிச்சலாக இந்தப்படத்தை இயக்கியிருக்கும் ராமலிங்கத்திற்கு நமது பாராட்டுகள்.
|