|
பிரச்சனைக்கு வன்முறை தீர்வாகாது என்ற காந்திய வார்த்தைகள் ஒரு ரவுடியை எப்படி திருத்துகிறது என்பதே ஆயுதம் செய்வோம் படத்தின் ஒரு வரிக்கதை. அடிதடி என்றால் அல்வா சாப்பிடுவதைப் போல நினைக்கும் ஒரு மெக்கானிக் சுந்தர்.சி இவருக்கு ஒத்து போக்குவரத்து காவலரான விவேக். இருவரும் சேர்ந்து டிராபிக்கை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை ஆதாரத்துடன் கோர்ட்டில் சமர்பிக்கிறார் வக்கில் விஜயகுமார். ஜெயிலிற்கு போவதை ஒரு வாடிக்கையாக கொண்ட சுந்தர்.சி க்கு ஒரு வித்தியாசமான தண்டனை தர எண்ணி ஜட்ஜ் ஞானபிரகாசம் சுந்தர்.சி மற்றும் விவேக் இருவருக்கும் டிராபிக்கிற்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக 15 நாட்கள் மதுரை காந்தியகத்தில் இருக்கவேண்டுமென தண்டனை விதிக்க - இருவரும் மதுரைக்கு வந்து சேர்கிறார்கள். வந்த இடத்தில் காந்தி மியூசிய நிர்வாகியான தியாகி நாசருடன் பல விதங்களில் சுந்தர்.சி க்கு மனஸ்தாபம் ஏற்பட்டாலும் 15 ஆம் நாள் முடிவில் ஓரளவிற்கு காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார்.
தண்டனை முடிந்து சென்னை திரும்பும் சுந்தர்.சி மீண்டும் தனது ரவுடி வேலைகளில் இறங்குகிறார். ஊழலின் உருவமாகத் திகழும் முன்னாள் அமைச்சர் மணிவண்ணனுக்கு எதிராக செயல்படும் நேர்மையான வக்கீல் விஜயகுமாரிடமிருந்து முக்கியமான ஆதாரம் ஒன்றை கொண்டுவருமாறு சுந்தர்.சி யை மணிவண்ணன் ஆட்கள் ஏவ - அப்போது நடக்கும் கைகலப்பில் கம்பி குத்தி இறந்து போகிறார் விஜயகுமார். சாகும்போது விஜயகுமார் "வாழ்க வளமுடன்.." என்று சொல்லிக்கொண்டே இறக்க - அப்போது முழுமையாகத் திருந்துகிறார் சுந்தர்.சி. காந்திய அ¢ம்சை வழியில் போராடி விஜயகுமாரின் லட்சியத்தை நிறைவேற்றி மணிவண்ணனுக்கு எப்படி தண்டனை வாங்கித் தருகிறார் என்பதே மீதிக்கதை.
தமிழ்சினிமாவின் மினிமம் கேரண்டி ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார் சுந்தர்சி. தனது முந்தையப் படங்களை போலவே இந்த படத்திலும் ஆடவோ, நடிக்கவோ அலட்டிக் கொள்ளவே இல்லை சுந்தர். தனக்கு என்ன வருமோ - தன்னால் என்ன முடியுமோ அதை மட்டும் அழகாக செய்ய முற்பட்டிருக்கிறார். ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.. ஆனாலும் தலைநகரம் படத்திலிருந்து ஒரே மாதிரியான பாவங்களை மட்டுமே சுந்தர்.சி செய்து வருகிறார் - இதைத் தவிர்த்து நடிப்பில் கொஞ்சம் புதிய முயற்சிகள் செய்ய முற்பட்டால் நன்றாக இருக்கும்..
நாயகி அஞ்சலி பொம்மை போல வந்து போவதோடு சரி - நடிக்க பெரிதாக ஒரு வாய்ப்பையும் அவருக்கு கொடுக்கவில்லை இயக்குனர். விவேக்கின் காமெடி படத்திற்கு பலம். சில இடங்களில் கடித்தாலும் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். அஸிஸ்டெண்ட் கமிஷனராக வரும் நெப்போலியன் கம்பீரமாக வந்தாலும் காமெடி போலீஸ் ரேஞ்சிற்கு வில்லன்களை கண்டுபிடிக்கும் காட்சிகளில் கோட்டை விடுகிறார்.
நேர்மையான வக்கிலாக வரும் விஜயகுமாரும் தியாகியாக வரும் நாசரும் அருமையான நடிப்பால் கவர்கிறார்கள். கலெக்டராக வரும் சுகன்யா கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் அழுத்தமாக பதிகிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம். லகே ரஹோ முன்னாபாயின் சாயல் இந்தப்படத்தின் பல இடங்களில் தெரிந்தாலும் அரைத்த மாவையே அரைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக படம் எடுக்க முயன்றதற்காகவே இயக்குனர் உதயனை பாராட்டலாம்.
|