|
இந்து - முஸ்லீம்கள் பிரச்சினையில் இரண்டு தரப்பினராலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது காந்திஜியின் பேச்சுக்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். காந்திஜியின் சமாதான வார்த்தைகள் இன்னொரு பூதத்தையும் குழியிலிருந்து வெளியே விட்டது. ஆரிய சமாஜம் பற்றிய அவரது கருத்துக்களை அக்குவேறு ஆணிவேறாக கழட்டி விமர்சித்து வெளுத்து கட்டினார்கள். ஆரிய சமாஜத்தின் பைபிளான சத்தியார்த்த பிரகாசம் பற்றி காந்திஜி பூனா சிறையிலிருந்தபோது படித்திருந்தார். ஆனால், அதில் சொல்லியிருக்கும் விஷயங்களில் காந்திஜிக்கு நிறைய உடன்பாடுகள் கிடையாது. சமூக ஒற்றுமை பற்றி பேசும்போது காந்திஜிக்கு ஆரிய சமாஜத்தின் கொள்கைகளும் ஞாபகத்துக்கு வந்து அதைப்பற்றியும் சில வார்த்தைகள் பேசியிருந்தார். காந்திஜியின் பேச்சை பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டதை விட ஆரிய சமாஜத்தால் நாடு முழுவதும் விநியோகிப்பட்ட துண்டுப் பிரசுரங்களை படித்து தெரிந்து கொண்டவர்கள்தான் அதிகம்.
காந்திஜியின் பேச்சு, ஆரிய சமாஜிகளுக்கு மற்ற மதங்களை பற்றிய பரந்த எண்ணம் எதுவும் கிடையாது என்கிற ஒரு விஷயத்தைத்தான் தொட்டுக் காட்டியது.
'ஆரிய சமாஜிகள் ஒன்று மற்ற மதத்தினருடன் சண்டை போடுவார்கள். இல்லாவிட்டால் தங்களுக்குள்ளாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்' (29.5.192 யங் இந்தியா)
என்ன நம்மூர் காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்ட்காரர்கள் ஞாபகத்துக்கு வருதா ? ஆனாலும், காந்திஜியின் கோபம் செல்லக் கோபம்தான். தான் உரிமையுடன் ஆரிய சமாஜிகளை கடிந்து கொள்வதாகவும் இதனால் அவர்களுக்கு கோபம் வரலாம் என்பதையும் பேச்சுவாக்கில் சொல்லியிருந்தார். காந்திஜி எதிர்பார்த்தபடியே நாட¦ங்கும் ஆரிய சமாஜ தொண்டர்கள், சுத்தி இயக்கம் (மற்ற மதத்தவர்களை இந்து மதத்திற்கு இழுக்கும் இயக்குமென்று சுருக்கமாக சொல்லலாம்!) சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அது காந்திஜியை பத்திரிக்கையில் விளக்கம் எழுதவும் வைத்தது.
'...ஆரிய சமாஜிகள் எல்லோரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்துவிட்டார்கள். அவர்களின் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன். நான் அவர்களின் விரோதியல்ல, நண்பனே என உரிமை பாராட்டுகிறேன். எந்த மதத்துடனும் வேறு எவருடனும் ஆரிய சமாஜிகள் சண்டையிட விரும்பவில்லை என்று தங்களின் கண்டனத்தில் தெரிவித்துவிட்டார்கள். வரவேற்க வேண்டியது நடந்திருக்கிறது. ஆரிய சமாஜம், இந்த மதத்தை பாழ்படுத்தி வந்த பல மூடநம்பிக்கைகளை அகற்றியுள்ளதை எல்லோரும் பாராட்டியே ஆகவேண்டும்'
'...ஆரிய சமாஜம், இந்து மதத்தின் ஒரு பகுதியென என்னைப்போல ஆரிய சமாஜிகளும் நம்பினால் இந்துக்களை, இந்து தருமங்களை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். சகிப்புதன்மை என்பதை கருத்துக்கள் ஒன்றுபடுவது என்று தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் சமாஜிகள். சகிப்புத்தன்மைக்கு அதெல்லாம் தேவையில்லை. ஆரிய சமாஜம், தனது சமூக சீர்திருத்த நடவடிகைக்கைகளை துரிதப்படுத்தி தேசிய, மத இயக்கங்களுக்கு உதவ வேண்டும் என்பதால் தான் குறை கூறினேன். ஆரிய சமாஜிகளின் நோக்கத்தை குறுகியதாக வைத்துக்கொள்ளாமல் விசாலாமாக்குவர்களேயானால் ஆரிய சமாஜத்திற்கு எதிர்காலம் மகத்தானதாக இருக்கும். விசாலமடைய வழியில்லை என்று சமாஜிகள் நினைத்தால் நான் அவர்களுக்காக வருந்துவேன்' (யங் இந்தியா 12.6.1924) காந்திஜியின் விளக்கங்களையெல்லாம் ஆரிய சமாஜிகள் பொருட்படுத்தவேயில்லை. திரும்பவும் வேதாளத்தை முருங்ககை மரத்திலிருந்து இறக்கி வைத்தார்கள். இந்து மதத்தை இழிவு படுத்தி இஸ்லாம் பக்கம் சாய்ந்து விட்டார் காந்திஜி என்று சமாஜிகளால் எடுத்துவிடப்பட்ட விஷயம் எடுபட ஆரம்பித்தது.
|