|
அமெரிக்காவின் சிகாகோ நகர் பள்ளிகளை 1950களில் எப்படி இருந்தன என்று இணையதளத்தில் படித்தேன். கற்பனை செய்து பார்க்கவே ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தன. சிகாகோ நகரில் பல கத்தோலிக்க பள்ளிகள் ஆட்டு மந்தை போல வகுப்புகளில் மாணவர்களைச் சேர்த்து வந்தன. அப்போது சிகாகோ நகரம் மெதுவாக வளர்ச்சி கண்டு கொண்டிருந்த நேரம். புது மேயராக 1955ல் பதவியேற்ற ரிச்சர்டு ஜே. டாலே சிகாகோவின் நகரமைப்புத் திட்டம் வெற்றி காண பல முயற்சிகளை செய்துக் கொண்டிருந்தார். பிராங்க் சினாட்ரா தன் பாடலில் சொல்வது போல சிகாகோ நகரம் "Toddling Town" என அழைக்கப்பட்டு வந்தது. அங்கும் அமெரிக்காவின் பிற மாநிலங்களைப் போல கத்தோலிக்க அமைப்பின் கீழ் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இப்பள்ளிகளில் சன்னல்கள் உயரத்தில் காணப்படும். தலையை நிமிர்த்தி அண்ணாந்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் 50 பிள்ளைகள் கூட சேர்க்கப்படுவர். சில சமயங்களில் இப்பள்ளிகள் நிலவறைகளில்(basement) வகுப்புகளை நடத்தி வந்தன. சில பள்ளிகளில் படிக்கட்டுகளில் ஒரே ஒரு வரிசையாக மட்டுமே படிக்கட்டுகளில் செல்ல முடியும். அந்த அளவு குறுகளான படிகள். தள்ளினால் விழுந்துவிடும் போன்ற கதவுகள். இப்படி அமெரிக்காவில் பள்ளிகள் இருந்தன என்பதைச் சிலர் நினைவுபடுத்தி எழுதியிருக்கின்றனர். படிக்கும்போது நம்புவது சற்று கடினமாக இருக்கிறது.
ஆனால் சிகாகோவின் லேடி ஆ·ப் ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவர்கள் குறிப்பு நெஞ்சைத் தொடுவதாக இருக்கிறது. அப்பள்ளியைப் பற்றி கிட்டத்தட்ட 180 பேர் தம் ஞாபகங்களை எழுதியுள்ளனர். அங்கு படித்த ரோஸ்மேரி என்பவர் சொல்லும் விவரங்கள் படிக்க சுவாரஸ்யமாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் இருந்தது. ரோஸ்மேரி என்னும் அந்த மாணவி வெள்ளையில் பிங் நிற பூக்கள் போட்ட ஸ்கார்பை கையில் ஆட்டிக் கொண்டு துள்ளிக் குதிக்கும் மானைப் போல மகிழ்ச்சியுடன் அன்று பள்ளிக்கு வந்திருந்தார். அவர் படிக்கும் லேடி ஆ·ப் ஏஞ்சல்ஸ் பள்ளி கத்தோலிக்க மாதாகோயிலின் உள்ளே இருந்தது. அவள் அந்த பழைய சர்ச் கட்டிடத்தில் உள்ள வகுப்பறையில் அந்த சமயம் படித்து வந்தார். பக்கத்தில் புதிதாக மற்றொரு கட்டிடத்தில் மேல் வகுப்புக் கல்விக்கான வகுப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன. கத்தோலிக்க மாதாக்கோயிலும் புதிதாக பக்கத்து தெருவில் அமைக்கப்பட்டிருந்தது. பின்பக்கத்தில் இரண்டு பள்ளிக் கட்டிடங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அன்று டிசம்பர் மாதம் முதல் தேதி. 1958 ஆம் ஆண்டு. ரோஸ்மேரியும் அவளின் தம்பி லாரியும் ஜாலியாக நடந்து கொண்டே பள்ளி வந்து சேர்ந்தனர். தேங்ஸ்கிவிங் நாள் முடிந்து விரைவில் கிறிஸ்துமஸ் விடுமுறை வரப்போகிறது என பிள்ளைகளுக்கு ஒரே குஷி.
அன்று கடைசி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் தம் பைகளை பேக் பண்ணிக் கொண்டு வரிசையில் சென்று தம் கோட்டுகளை அணிந்து கொண்டு வீட்டிற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர். ரோஸ்மேரி பழைய சர்ச் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்த வகுப்பறையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் தம்பி லாரியின் வகுப்பறையோ பக்கத்தில் புதுக் கட்டிடத்தில் இருந்தது. ரோஸ்மேரி தன் இடத்தை விட்டு எழுந்து கொண்டிருக்கும்போது தீ விபத்தைக் குறிக்கும் எச்சரிக்கை மணி அடித்தது. சாதாரணமாக அதுபோல மணி அடித்தால் மாணவர்கள் எப்படி தீயை அணைப்பார்கள் என்பதை ஒன்று கூடி செய்து காட்ட வேண்டும். ரோஸ்மேரியும் மற்ற மாணவர்களும் தம் இடத்திலிருந்து வகுப்பறையின் முன்னே உள்ள கதவுப் பக்கம் ஓடி கீழே தெருவிற்கு படி வழியே விரைந்து சென்றனர். தெருவில் நின்று திரும்பிப் பார்த்தனர். அப்போதுதான் தெரிந்தது பழைய சர்ச் பள்ளிக் கட்டிடத்தின் முதல் மாடி உண்மையிலேயே தீப்பற்றி எறிகிறது என்பது. புகைப்படலமாய் இருந்தது பள்ளிக்கட்டிடம். தீயணைப்புப் படையினர் தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். பள்ளி மாணவர்கள் பயத்தில் அலறும் சத்தம் கேட்டது.
ஆசிரியைகள் சிலர் ரோஸ்மேரியையும் மற்ற மாணவர்களையும் சாலையைக் கடக்கச் செய்து பக்கத்துத் தெருவில் இருந்த புதிய மாதாகோயிலுக்கு அழைத்துப் போனார்கள். இரும்புக் கேட்டைத் திறந்து தீயணைப்புப் படையினர் புதிய பள்ளிக் கட்டிடத்தில் தீயை அணைக்க முடியவில்லை. எனவே ஏணி வழியாக பிள்ளைகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். எப்படியோ ரோஸ்மேரியின் தம்பியான லாரி அந்த விபத்தில் தப்பி விட்டான். ஒரு வாரத்திற்கு பள்ளி மூடப்பட்டது. பின் ஈராண்டுக்குப் பின் புதுப்பள்ளிக்கூடம் கட்டப்பட்டதாக அவர் எழுதியுள்ளார்.
ஒரு மாணவன் வேண்டுமென்றே தீ வைத்ததால் விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. 92 மாணவர்களும் மூன்று கன்னிஸ்திரிகளும் மாண்டதாக வெளிவந்த செய்தி பரபரப்பையூட்டியது. அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அனுதாபச் செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. இன்றும் இச்செய்தியை நாம் www. olafire.com என்னும் இணைய முகவரியில் படிக்கலாம். இதுபற்றி கும்பகோணம் கலெக்டர் திரு ராதாகிருஷ்ணன் எங்கள் கும்பகோணம் நண்பர்கள் யாஹ¥ குழுமத்திற்கு செய்தி கொடுத்துள்ளார். அண்மையில் குடந்தையில் உள்ள லார்டு கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தீவிபத்தின்போது நிதியுதவிகள் விரைந்து வந்து சேர்ந்துள்ளன. ஆனால் மனோதத்துவரீதியாகவும் நடப்பு வாழ்க்கையிலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் பற்றி அக்கறைக் காட்ட வேண்டும் என்கிறார் திரு ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவைத் தேட இத்தீவிபத்து நல்ல சந்தர்ப்பத்தைக் கொடுத்தது.
1958ல் சிகாகோ பள்ளியின் தீவிபத்தைக் கண்ட ரோஸ்மேரி தன் உணர்வுகளை இப்போது 46 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் மாதம் "Ole fire" தளத்தில் எழுதியுள்ளார். இன்றும் தான் குழுப்பாடல்கள் பாடும்போது "Let the fire fall" என்னும் பாடலைப் பாடுவதாக இவர் குறிப்பிடுகிறார். இன்றும் அந்த அலறலும் கருமையான புகையின் சூழலும் தன்னை சிலசமயம் துன்பத்தில் ஆழ்த்துவதாக அவர் கூறுகிறார். பிறக்குழந்தைகளுக்குத் தானே விபத்து நேர்ந்தது. அதனால் இந்த மனத்துன்பம் காலப்போக்கில் மனதை விட்டு அகன்று விடும் என்று சிலர் சொன்னதை இவர் மறுக்கிறார். இப்போதும் சன்னலருகே வெளியே வரத்துடித்துக் கொண்டு அலறிய குழந்தைகளின் உருவங்கள் மனதை புரட்டி எடுக்கிறது என்கிறார் இவர். தனக்குத் திருமணம் ஆகியும் குழந்தைகள் பிறந்தும் இன்னும் மறக்க முடியவில்லை என்கிறார் ரோஸ்மேரி. இத்தகைய உணர்வுகளை ஒன்று திரட்டி Ole fire சம்பவத்தை டேவிட் கோவனும் ஜான் க்யூன்ஸ்டரும் இணைந்து " To sleep with the Angels; The story of a fire" என்னும் புத்தகமாக எழுதியுள்ளனர். இப்புத்தகத்தின் உள்ளடக்கமே படிப்பவர்களை உருகச் செய்யும்.
எங்கள் குடந்தை பள்ளி தீவிபத்தில் இறந்த மாணவர்களுக்கு இதேபோல நான் அஞ்சலி செலுத்த விரும்பினேன். அதுதான் கீழே நான் எழுதியுள்ள கவிதை வரிகள்.
கும்பகோணத்தில் ஒரு பொம்மை
பொம்மை ஒன்று அந்த வீட்டின் ஓரமாய் கிடந்தது அவன் கை தட்டினால் கண் சிமிட்டும் 'ஐ லவ் யூ ' சொல்லும். அவன் வீடு திரும்பி வரும்வரை நாள் முழுதும் காத்திருக்கும்.
பள்ளிக்கூடம் முடிந்தும் இன்று அவனைக் காணவில்லை திடீரென்று வீட்டில் சலசலப்பு ஓயாத அழுகுரல் கேட்டது. பொம்மை கண் மூடியபடியே இருந்தது அவன் வராத கவலையுடன்.
வாரங்களும் நான்கைத் தொட்டன வீட்டில் மீண்டும் கலகலப்பு புதுப்புது பொம்மைகள் துணிமணிகள் அங்கு அவனைப் பற்றிய தீ வறுமையின் மேலும் பரவியிருந்தது. இன்னும் காத்திருந்தது அவனின் அறியாத பொம்மை. இப்போது அது நுடமானது வீதியில் வீசியெறியப்பட்டது கண்களின் உள்ளே அவன் கனத்து நிற்க இதயத்தில் இருந்து கண்ணீர் வடிக்கிறது பொம்மை மட்டும்.
|