இந்தியாவை மட்டுமல்லாது உலகையே உலுக்கிய மும்பை தீவிரவாதச் சம்பவம் நடந்து முடிந்து 3 நாட்கள் ஆகிவிட்டன. ஓரளவிற்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் துவங்கியுள்ளனர். மற்ற கட்சிகளிடம் மட்டுமல்லாமல் உள்கட்சியிலேயே பெருமளவிற்கு அதிருப்தியை சம்பாதித்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா - அந்த இடத்திற்கு ப.சிதம்பரம் நியமனம், மகாராஷ்டிர முதல்வர் - துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் ராஜினாமா என்று மாநில மத்திய அரசில் அமைச்சர்கள் மாற்றமும் நடந்தாகிவிட்டது. ஆனால் இந்த மாற்றங்களால் மட்டும் மக்களின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்த இந்நிகழ்வை மாற்றிவிட முடியாது.
இந்த அரசு பதவியேற்ற 41/2 ஆண்டுகளிலேயே நமது தேசத்தின் முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட 16 முறை பயங்கரவாத குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்று நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுச்சொத்தும் தனியார் சொத்தும் நாசமாகியுள்ளன. 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வாக்கில் ஆரம்பித்த இந்த பயங்கரவாதச் செயல்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறதே தவிர கட்டுக்குள் அடங்கினதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போதும் அரசை எதிர்கட்சிகள் குறை கூறுவதும் அதை மறுத்து ஆளும் கட்சி எதிர்கட்சியை வசைபாடுவதையும் தான் நாம் பார்கிறோமே தவிர பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த ஒருவரும் உண்மையாக முயலவில்லை என்பதே உண்மை. மக்களைக் காக்கவே அவதாரம் எடுத்ததாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸாகட்டும் பா.ஜனதாவாகட்டும் - ஒன்றுபட்டு ஏதாவது திட்டம் தீட்டி பயங்கரவாதத்தை ஒடுக்க ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்றால் பதில் இல்லை என்பதுதான்.
இன்னும் சில ஆண்டுகளில் வல்லரசாகிவிடுவோம் என்று மார்தட்டிக்கொண்டால் மட்டும் போதாது - பயங்கரவாதத்தை நாம் அடக்கும் வரை நம்மால் வல்லரசாக ஆகவே முடியாது.. நம்மைத் தாக்க வரும் தீவிரவாதிகளும் அதையே விரும்புகிறார்கள். இந்தியா ஒரு வலிமை மிகுந்த நாடாக மாறுவதில் பல நாடுகளுக்கும் உடன்பாடு இல்லை - முக்கியமாக சீனா மற்றும் பாக்கிஸ்தான். பாக்கிஸ்தானின் உதவியால்தான் பயங்கரவாதிகள் நம்மைத் தாக்குகிறார்கள் என்பது நன்றாகப் புரிந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாத நிலையில் உள்ள நமது அரசியல்வாதிகள் மதவாதம் என்ற தடுப்புச் சுவரை உடைத்தெறிந்துவிட்டு வீறு கொண்டு எழுந்தால் தான் நம் நாட்டை பாதுகாக்க முடியும்.
உள்துறை அமைச்சரை மாற்றுவதால் மட்டும் பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியாது - துணிச்சலான செயல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக எடுக்கும் முடிவுகளால் தான் அதை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மேலும் தொட்டதெற்கெல்லாம் மத்திய அரசை மட்டும் குறை கூறாமல் எதிர்கட்சிகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க முன்வரவேண்டும். இந்தியாவை விட பலமடங்கு பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாகிவரும் நாடு இஸ்ரேல் - ஆனால் அங்கு அவர்கள் தங்களுடைய கூட்டு நடவடிக்கைகளால் தீவிரவாதிகளை பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். அதைப் போன்ற ஒரு துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே நமது அரசால் மக்களைக் காப்பாற்ற முடியும். செய்வர்களா ?
|