|
காலை நான்கு மணிக்கே குளித்து தயாராகிவிட்டிருந்தான்.
போகும்போது போட்டுக்கொள்ள ஒரு ட்ரெஸ்ஸும் தேர்தல் நாளன்று போட்டுக்கொள்ள என்று ஒரு செட்டும் எடுத்து வைத்தாள் தர்மபத்தினி. அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவள் ஏதேதோ கற்பனையில் செய்கிறாள். செய்யட்டும் என்று விட்டுவிட்டான்.
ஒரு டார்ச், புது செல்கள் இரண்டு, இரண்டு போர்வைகள். தரையில் போட ஒன்று, போர்த்திக்கொள்ள ஒன்று. ஒரு சின்ன டவல். ஒரு கண்ணாடி. ப்ரில் கிரீம். உறுதியான பற்களுக்கு விக்கோ வஜ்ரதந்தி டூத் பேஸ்ட். ஜோர்டான் வெள்ளை ப்ரஷ். ஃபாரின் லக்ஸ் சோப்பு. ஒரு சின்ன தலையணை. டார்டாய்ஸ் சுருள் ஒன்று. ஒரு பூட்டு. எல்லாவற்றையும் ஒரே 'பேக்'கில் அழகாக அடுக்கி வைத்தாள். அழகாக அடுக்குவதில் அவள் மன்னி.
அவனுக்கு சிரிப்பாகக்கூட வந்தது. அப்போதுதான் குடும்ப டாக்டர் மதி வந்தது. அதனிடம் சொன்னபோது, தேர்தலுக்கு மறுநாள் பேப்பரில், "மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட பேராசிரியர் என்று செய்தி வருமா?" என்று கேட்டது குஷியாக சிரித்துகொண்டே. அப்படித்தான் நடக்கப்போவதாக ஷாஹுலுக்குத் தோன்றியது. அவனால் சிரிக்க முடியவில்லை.
மறக்காமல் 'ரிலை' பண்ண முடியாத ரிலையன்ஸ் செல்ஃபோனையும், வண்ணத்துப் பூச்சியைக் கொன்றவர்கள் என்ற பாரதிபாலனின் சிறுகதைத் தொகுதியையும் எடுத்துகொண்டான். தானும் ஒரு வண்ணத்துப் பூச்சிதானோ?
0 0 0
பஸ்ஸில் நின்றுகொண்டுதான் போக முடிந்தது. சாலை ரொம்ப அற்புதமாக இருந்தது. அவ்வப்போது ஒரு சில அடிகளுக்கு சீரான சாலையும் வந்தது. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் விஷயத்தில் இந்தியச் சாலைகளையும் அப்படிப்பட்ட சாலைகளில் பஸ் ஓட்டும் ஓட்டுனர்களின் திறமையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சத்தமாக கேஸட்டை வேறு போட்டிருந்தார்கள். குரல்வளையில் யாரோ கைவைத்து கொலைசெய்ய முயல்வதை அலட்சியம் செய்துவிட்டு எஸ்.பி.பி.யும் பி.சுசீலாவும், 'அங்கே வருவது யாரோ, அது வசந்தத்தின் தேரோ' என்று பாடிக்கொண்டிருந்தார்கள்.
வழி நெடுக வயல்களும் மரங்களுமாய் இருந்தன. கறுப்பு நிறத்தில் சில வெள்ளாடுகள் நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்தன. ஆங்காங்கு சில மாடுகளும். அவைகளை ஓட்டிக்கொண்டு சில பெண்கள் வந்த வண்ணமிருந்தனர். குளித்துவிட்டு விரிந்த கூந்தலுடன் சில கிராமத்து அழகிகள் சென்றுகொண்டிருந்தனர். கிராமத்தின் அழகே தனிதான்.
வழியில் ஒரு மிகப்பெரிய தேவாலயமும், அதைவிட பெரிய பள்ளிக்கூடமும் வந்தது. தமிழ் நாட்டிலேயே அவ்வளவு பெரிய பள்ளியை அவன் பார்த்ததில்லை. அவ்வளவு சின்ன ஊரில் அவ்வளவு பெரிய கல்விச்சாலையா? பிதா சுதன் பரிசுத்த ஆவிக்கே புகழனைத்தும் போய்ச்சேரட்டும்.
ஜோதிகாபுரம் போய்ச்சேர்ந்தபோது காலை பத்து. அந்த சின்ன ஊரில் அல்லது கிராமத்தில் ஒரு மிகப்பெரிய கோயில் இருந்தது. அதை உள்ளே சென்று பார்க்க முடியவில்லையே என்று வருத்தமாகக்கூட இருந்தது. திருவானைக்காவல் கோயிலை நினைவு படுத்தியது அது.
பஸ்டாண்டில் இறங்கிபிறகு ஒரு நோட்டம் விட்டான். ஒரு சின்ன தெரு. அதுதான் பஸ்டாண்டும். ஒருவரிடம் போய், "சின்னதுரைக்கு பஸ் வருமா?" என்று கேட்டான்.
"சின்னதொரையா பெரியதொரையா?" என்றார் அந்தப் பெரியவர்.
"சின்னதொரெ" என்றான்.
"அங்கன போய் நில்லு. ஆனா அடிக்கடி வராது" என்று முக்கியமான உபதகவலையும் சேர்த்துச் சொன்னார் அவர்.
பதினோரு மணிக்குள் போய்விடுவதுதான் நல்லது என்று ஏற்கனவே அவன் மூளையில் பதிவாகி இருந்தது. அவன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எதிரில் இரண்டு மூன்று ஆட்டோ க்கள் நின்றுகொண்டிருந்தன. போய்க்கேட்டான்.
"போலாம் சார், நாப்பது ரூவா ஆகும்"
"நா வெளியூரு, ஏமாத்தாம சரியாச் சொல்லுங்க" ரொம்ப திறமையாகப் பேசுவதாக நினைத்துகொண்டு சொன்னான்.
"சார், வெளியூரா இருந்தாலும் உள்ளூரா இருந்தாலும் ஒரே ரேட்டுதான் சார்" என்று கட் அன் 'ரேட்'டாகச் சொன்னான் ஆட்டோ க்காரன்.
"சரி வாங்க. அங்கே சின்னதுரையிலெ பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியிலெ கொண்டுபோய் விட்டுடனும்"
"சரி சார் உக்காருங்க"
உட்கார்ந்தான். ஆட்டோ கிளம்பி ஒரு கடையில் நின்றது.
"ஒரு அரெ லிட்டர் பெட்ரோல் போடுண்ணெ" என்றான் ட்ரைவர்.
இந்த கடைதான் பெட்ரோல் பங்க்கா? வினோதமாக இருந்தது. கடைக்காரர் ஒரு மரப்பெட்டியைத் திறந்தார். அதிலிருந்து ஒரு கேனை எடுத்தார். அதிலிருந்து புனலை வைத்து ஆட்டோ வுக்கு பெட்ரோலை மாற்றினார். ஆட்டோ கிளம்பியது.
மேடு பள்ளங்களையெல்லாம் பார்க்காமல் ஆட்டோ வை மிக வேகமாக ஓட்டினான். உடலின் உள் உறுப்புகள் யாவும் அதிர்ந்தன.
"ஏன் இப்டி வேகமா ஓட்டுறிங்க? கொஞ்சம் மெதுவாவே போலாமே?"
"இல்லெ சார், மெதுவா போனா பெட்ரோல் சாப்ட்டுடும் சார். அதான்"
ஒரு இடத்தில் ஆட்டோ நின்றது. இறங்கிப்போன ட்ரைவரை கொஞ்ச நேரம் காணவில்லை. இறங்கிப் பார்த்தான் ஷாஹுல். ட்ரைவர் எதிர்ப்புறமாய் ஒன்னுக்கிருந்துகொண்டிருந்தான். மறுபடியும் ஏறி ஆட்டோ வில் உட்கார்ந்து கொண்டான்.
ஒரு ஐந்து நிமிடத்தில் ஆட்டோ இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.
ஆட்டோ நின்ற இடத்தின் எதிரில் ஊராட்சி ஒன்றியக் கட்டிடம் என்ற போர்டுடன் ஒரு சின்ன அறை இருந்தது. அதன் எதிரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி என்று ஒரு போர்டுடன் ஒரு திண்ணை இருந்தது. ஆட்டோ வுக்கு பணம் கொடுத்தனுப்பிவிட்டு நிமிர்ந்தான்.
ஒரு நீண்ட அறை மட்டுமே பள்ளியாக இருந்தது. பள்ளியறை என்பது அதுதானோ?! அந்த இடம்தான் தான் தேர்தல் பணி செய்யவேண்டிய இடமா என்று சந்தேகமாக இருந்தது. மேலே 29 என்ற எண்ணிருந்தது. ஆங், அதுதான். கொடுக்கப்பட்டிருந்த ஆணையில் அந்த எண்தான் போட்டிருந்தது. இடம் சரிதான். ஆனால் அங்கு யாரையும் காணவில்லை.
"தம்பி, போன ஒடனே உங்களுக்கு ப்ரொட்டக்ஷனுக்கு ஒரு போலீஸ் இருப்பான். தாசில்தார், விஏஓ யாராவது இருப்பாங்க. நூறுமீட்டருக்குள்ள எந்த கட்சிப் போஸ்டரோ, கொடியோ வேற விளம்பரமோ இருக்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுங்க" என்று சாஹிப் அண்ணன் முதல் நாள் சொன்னது ஞாபகம் வந்தது.
போஸ்டர்கள், கட்சிக்கொடிகள் மட்டுமல்ல மனிதர்கள் யாரையுமே அங்கு காணவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. 'பேக்'கை பள்ளியின் முன் இருந்த திண்ணையில் வைத்துவிட்டு உட்கார்ந்தான்.
பள்ளிக்குப் பக்கத்திலேயே ஒரு தொட்டி இருந்தது. 'குடிதண்ணிர்த் தொட்டி. கொள்ளளவு 1000 லிட்டர்' என்று எழுதியிருந்தது. அதைப்பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. அதில் இருந்த இரண்டு குழாய்களில் ஒன்றைத் திருகினான். தண்ணீர் வந்தது! குடித்துப் பார்த்தான். நல்ல தண்ணீர்தான்! அப்பாடா, தண்ணீர் இருக்கிறது!
எல்லாம் சரி, ஆனால் பெரிய பூட்டாகப் போட்டு தொடக்கப்பள்ளி பூட்டப்பட்டிருந்தது.
|