தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தபோது என் நாவல் போட்ட பதிப்பக அன்பர் அடுத்து நான் எழுதப் போகும் நாவல்கள் குறித்துப் பேச சென்னைக்கு வரச் சொன்னார்.
போனேன்.
அந்தக் காலகட்டத்தில் மாத நாவல் உலகம் டாப் கியரில் போய்க் கொண்டிருந்தது. இப்போது blogs போல ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவருக்கே அவருக்கான மாதப் புத்தகம் ஒன்று வெளிவரும். பதிப்பிப்பவர் தலையங்கம் மாதிரி ஓரிரு பக்கங்கள் எடுத்துக் கொண்டது போக, மற்றபடி அட்டை டு அட்டை அவர் மட்டுமே ராஜபாட்டை நடத்துவார். முன் அட்டையிலும், பின் அட்டையிலும் வாசகர்களோடு நெருக்கமாய் அளவளாவுவார். கேள்வி பதில் சொல்வார். பொது அறிவை வளர்க்க முயல்வார். போனால் போகிறதென்று ஏ காதலியே என்று துவங்கும் கவிதைகள் எழுத வாசகர்களுக்கும் கொஞ்சம் இடம் விட்டு வைப்பார். இத்தனைக்கும் நடுவில் ஒரு மர்ம நாவல்.
எனக்காக அப்படி ஒரு நாவல் கொண்டு வருவதுதான் அவர் திட்டம். என் முதல் கதை போட்டதும், சாவி போன்ற பெரிய பத்திரிகையிலிருந்து அவருக்கு போன் வந்து, " என் நாவல் எப்படிப் போயிட்டிருக்கு ? " என்று அவர் விசாரிக்கப்பட்டதில் சந்தோஷமாயிருந்தார்.
அடுத்தபடியாக, அப்போதெல்லாம் ஒரே வாரத்தில் கூட என்னுடைய கதை இரண்டு மூன்று பிரபல பத்திரிகைகளில் வெளி வந்திருக்கும்.
அதை விட, முதல் கதை கேட்ட போது என்னிடம் அவர் - " தம்பி, நாவல் ரொம்ப திகிலா இருக்கணும். ரொம்ப கொடூரமா அதில் ஒரு கொலை இருக்கணும். ஏன்னா படிக்கிறவங்க தங்களோட நிஜ வாழ்க்கையில் பண்ண முடியாததை பத்திரிகைல படிக்கிறதுக்கு விரும்புவாங்க. " என்றதும், அவர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற மாதிரி அந்தக் கதையில் ஒரு வாலிபனின் மண்டை மேல் பாறாங்கல்லைப் போட்டு நச் நச்சென்று அடித்து மூஞ்சியை உருத் தெரியாமல் சிதைத்து - அதே கல்லைக் கட்டி அவனின் பிரேதத்தை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டிருந்தேன். அவனுடைய செத்த உடம்பை போலிசார் வெளியே எடுத்தபோது - மீன்கள் அரித்துத் தின்றது போக மிச்சம் மட்டும் கொச கொசப்பாய் வெளியே வந்தது என்று நான் வர்ணித்தது அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டது.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல அடுத்து தரப் போகிற கதை குறித்துக் கேட்டதும் - " பிணம் பத்தும் செய்யும் " என்பது நாவலோட தலைப்பு. செத்துப் போன மனைவியை எரிக்காம புதைக்காம வீட்டுக்குள்ளேயே வெச்சிருந்து அவளுக்குத் திரும்ப உயிர் கொடுக்க முயற்சி பண்ற ஒரு டாக்டரோட கதை. நிறைய மெடிக்கல் சமாசாரம் நாவல்ல வரும் என்றெல்லாம் அவரை உசுப்பி விட்டதில் அவர், " நீங்க மாசா மாசம் எழுதறிங்க. " என்றார்.
ஏற்கெனவே மாத்தமேட்டிக்ஸ் அரியர் என் மண்டையைக் குடைந்து கொண்டிருந்ததால், " ஒரு நாள் டயம் குடுங்க. யோசிச்சு சொல்றேன். " என்றேன். அந்த ஒரு நாளில் மாதப் பத்திரிகைகள் இயங்கும் விதத்தைக் கூர்ந்து கவனித்தேன்.
- நிறைய அரசியல், போட்டி, பொறாமை அங்கே இருந்தன.
- ஒருவரை ஒருவர் புறங்கூறிக் கொள்ளும் செயல்களும் நடந்தன.
- அதையெல்லாம் விட என்னை இவனோட ஆள், அவனோட ஆள் என்று தாங்களாகவே கற்பனை பண்ணிக் கொண்டு நேரில் பார்க்கிற போது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் செயல்களும் நடந்தன.
இருபத்தியொரு வயதில் இப்படிப்பட்ட உலகத்தைப் பார்க்க எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒழுங்காய்ப் படித்து எஞ்சினீரிங்கை முடித்து வைப்போம். எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டால், பிரபல வார இதழ்களில் சிறுகதை எழுதி ஆசையைத் தீர்த்துக் கொள்வோம். இந்த மாத நாவல் பிசினசெல்லாம் நமக்கு வேண்டாம்.
அன்றைக்கு நான் எடுத்த இந்த முடிவு சரியா, தவறா என்று இப்பவும் எனக்குப் புரியவில்லை.
|