அழகிய முல்லைப் பந்தல். வெள்ளை, சிவப்பு ரோஜாக்கள். தங்க அரளிச் செடிகள், மலர்களின் மனம் ரொம்ப ரம்மியமாக இருந்தது.
"இந்தத் தோட்டம் உங்களுக்குச் சொந்தமா?" பொன்னி கேட்க, 'உம்' என்று தலையசைத்தாள் ராணி. முன்னால் போய் கதவைத் தள்ளியவள், "அம்மா, நீ சொன்னியே பொன்னி, அவங்களை அழைச்சிட்டு வந்துருக்கேன்... டீ போடு. சீக்கிரம் போகணுமாம்!" என்று உரக்கக் கூறியவள், "உள்ளே போங்க, பூஜைக்கு நாலுபூ பறிச்சிட்டு வந்துடறேன்", என்று புன்னகைத்தாள்.
தாழ்வான நிலை. குனிந்து உள்ளே போனாள் பொன்னி. குறுக்கே தட்டி மறைப்புக்கு அந்தப்புரம் யாரோ நடமாடுவது தெரிந்தது. வெளிச்சத்திலிருந்து வந்த கண்கள் உள் இருட்டுக்குப் பழகவில்லை.
'தடார்' வாசற்கதவு சார்த்திக் கொண்டது. திகைத்தாள். ஓடிப் போய் கதவை இழுத்துப் பார்த்தாள். 'சிக்'கென்றிருந்தது. 'ராணி, ராணி' என்று கத்தினாள். காற்றில் மூடிக் கொண்டதோ எனக் கலங்கிய நேரம் இரு முரட்டுக் கரங்கள் அவளைப் பின்னாலிருந்து வளைத்தன.
"நீதான் இங்கே ராணி!"
திரும்பிப் பார்த்தாள். நாகலிங்கம்!
"அடப்பாவி... நீயா?"
"ஏன் வீணா அவஸ்தைப் படறே! அனுபவிச்சுடு... உன்னை மாதிரியே அந்தக் கதவு 'சிக்'குனு இருக்கு. சட்டம் பேசின வாய்க்கு ஒரு பரிசு கொடுக்கறேன். அன்னைக்கி சினிமாக் கொட்டகையிலே அரைகுறை. இப்போ முழுசு..."
"அட சண்டாளா! அதுவும் நீதானா? விடு...விடு..."
"இதானே வேண்டாங்கறது. பிராண்டறே... அடேயப்ப எதுக்கு இவ்வளவு நகம் வெச்சுருக்கறே? அப்பா... ஈரப்புடவையிலே என்னமாத்தான் இருக்கறே!"
"ஐயோ, ஓடி வாங்களேன்... யாராச்சும் வந்து காப்பாத்துங்களேன்..."
"நீ என்ன கத்தினாலும் காது கேட்காது; சுத்தி கண்ணாடிக் கதவு. ஆள் அதிகம் நடமாடாத இடம். போதாதற்கு வெளியே காவல். அவனுக்கு பொழுதுபோக டேப்ரிகார்டர் பாடிக்கிட்டிருக்கு. போதுமா? உன் தொண்டைத் தண்ணி வத்தறதுதான் மிச்சம்".
'அவ்வளவுதானா... அவ்வளவேதானா! தெய்வத்துக்கென்று அவள் போற்றி வந்த நிவேதனம் இந்தத் தெரு நாய்க்கு அர்ப்பணமா?'
ஈர உடைகள் அவன் துரோகத்துக்கு ஒத்தாசையாகப் போய்விட்டது. அவள் பிறந்த மேனியாக நின்றாள்.
"என்னை விட்டுடு, என் கூடப் பிறந்தவனா நினைச்சுக் கேட்கறேன்..." கையெடுத்துக் கும்பிட்டாள் பொன்னி.
"நீ கடிச்சுப் பிராண்டினதில் உடம்பெல்லாம் எரியுதடி... பழி தீர்க்காம விடமாட்டேன். கையை ஒடிச்ச பிறகும் உன் அத்தான் மேலே ஆசை போகலியா?"
"ஆசையும், அன்பும் உருவத்தைப் பார்த்து மட்டும் ஏற்படறதில்லே... என்னை விடு".
"உன்னை விட்டா பேசிக்கிட்டே இருப்பே..."
அவன் எதையோ அவள் வாயில் திணிக்க பொன்னி மெல்ல மெல்ல சுய நினைவை இழந்தாள்.
O
மறுபடி விழிப்பு வந்தபொழுது ஒரே தலைசுற்றலாக இருந்தது. மெல்ல எழுந்து தன்னைப் பார்த்தாள். ஏகப்பட்ட சேதம். வேதனை தீருமட்டும் அழுதாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். மெல்ல எழுந்து கொண்டாள். நடந்தாள். இரண்டாகத் தடுக்கப்பட்ட ஒரே ஒரு அறை. பின்வாசல் கிடையாது. கண்ணாடி அடைப்புகள். அவளது ஈர உடைகளையும் காணோம். தப்பி விடுவாளென்று மறைத்துவிட்டார்கள் பாவிகள். இதென்ன ஆதிவாசிக் கோலம்.
ப்ளைவுட் தடுப்பில் மேல் ஒரு லுங்கி. அதைத் தொடவே அருவருப்பாய் இருந்தாலும் இப்போதைய நிலைக்கு அதுவே மேல் என்று அதை எடுத்து சுற்றிக் கொண்டாள். முகத்தைப் பார்க்கலாம் என்றால் ஒரு துண்டுக் கண்ணாடியுமில்லை. மூலையில் ஒரு மண்பானையும், கண்ணாடிக் கிளாசும் இருந்தது.
ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் குடித்தாள். கொஞ்சம் தெம்பு வந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.
கதவு தானாகத் திறக்கும்வரை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்தது. பெண்ணுக்குப் பெண்ணெ எமன் என்று கொஞ்ச நேரம் மனம் போனபடி வாய்விட்டு அந்த ராணியைத் திட்டினாள்.
கதவு திறந்தது. ஆடிக் கொண்டே வந்தான் நாகலிங்கம். "எழுந்துட்டியா? அட, என் லுங்கியைச் சுத்திக்கிட்டு ஓடிடலாம்னு இருக்கியா! அடி என் கண்ணாட்டி... அயுசுக்கும் ஒன்னை வெச்சுக் காப்பாத்துவேண்டி". உளறிக் கொண்டே வந்து கட்டிலில் விழுந்தான்.
"சரி, கையைக் காலை அமுக்கு... புடிவாதம் பிடிக்காதடி!"
"எனக்கு வெளியே போகணும்!"
"அனுப்பறதுக்கா இத்தனை கஷ்டப்பட்டேன்! அதெல்லாம் முடியாது".
"சே, அதில்லை...", ஒரு விரலைக் காட்டினாள்.
"பெரமா..." பெரமன் ஓடி வந்தான்.
"இவளுக்கு ஒதுங்கணுமாம். கூடவே இருந்து கூட்டிட்டு வா..." பெரமன் முன்னால் நடக்க பின்னால் நடந்தாள் பொன்னி.
"சே, அந்த வாதாமரத்தடியிலே நில்லு...", பிரமன் வாதாமரத்தடிக்குப் போக, கீழே பார்த்தாள்.
ஒரு மண்வெட்டி. ஆடிக் கொண்டிருந்ததைச் செப்பனிட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். தொளதொளவென்றிருந்தது. இவள் இரும்பை உருவிவிட்டு கட்டையைத் தூக்கிக் கொண்டு பின்பக்கமாக வாதாமரத்தடிக்குப் போனாள்.
பிரமன் பீடி குடித்துக் கொண்டிருந்தான். 'பிடாரியம்மா, எனக்குத் துணை செய்'.
கட்டையை பலம் கொண்ட மட்டும் தூக்கினாள். பிரமன் சத்தமின்றிச் சாய்ந்தான்.
(தொடரும்)
|