"என்ன பொன்னி, திடீர்னு ?"
சிவகாமிக்கும், பழனிக்கும் ரொம்ப ஆச்சரியம். அதோடு அதிர்ச்சி.
"நேத்தைக்கு சினிமா கொட்டகையிலே நடந்ததை நினைச்சு பயந்துட்டியா ?" என்றான் பழனி.
"இல்லே மாமா... நான் வந்தும் ஏழெட்டு மாசமாச்சு... அம்மாவும் சொல்லிவிட்டுக்கிட்டே இருக்காங்க. அதான்" பொன்னி பிடிவாதமாக இருந்தாள்.
"சின்ன பொண்ணுதானே! சரிம்மா... சிவகாமி, நீயே கொண்டு விட்டுட்டு வா..." பழனி எழுந்து கொண்டான்.
பொன்னி புளிப்பானையை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள். கொட்டை வேறு, கோது வேறு என்று கைகள் பிரித்தாலும் மனம் இரண்டு மாதமாய் நடந்த விஷயங்களை அசை போட்டது. ஆறுமாதம் முன்பு வரை தாமரைக்குளம் அமைதியாகவே இருந்தது. இரண்டு மாதமாகத்தான் ரகளை எல்லாம்.
நேற்று சினிமா கொட்டகையில் அப்பப்பா... அவள் உதடுகள் தீயாய் எரிந்தன.
ஒரு காதல் காட்சி. ஆய், ஊய் என்று சீட்டி ஒலிகள். திடீரென்று ஒருவன் பெண்கள் பக்கம் எகிறிக் குதித்துவிட்டான். அந்தப் பெண்ணின் அலறல். இதுதான் சாக்கு என்று வாலிபர்களின் அட்டகாசம். ஆண்டாளு அண்ணிகளிடம் ஒதுங்க, இவளும் ஒருவன் கையில் சிக்கி -- அவன் எவனென்று பார்க்குமுன்னரே உதட்டை தோலுரிய வைத்துப் போய்விட்டான்.
இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து என்பதை பொன்னி உணர்ந்துகொண்டாள். பண்ணையாரின் சதிவேலை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. பணபலம், ஆட்பலம் அவளால் என்ன செய்ய முடியும்?
அன்றைக்கு அம்மன் பூச்சொரிதலில் கூத்து நடந்தது. திரௌபதி மானபங்கம்; புடவையைச் சுற்றி முக்காடு போட்டுக் கொண்டு வயசுப் பெண்கள் நடுவில் ஆங்காங்கே விடலைப் பசங்கள் உட்கார்ந்து சில்விஷமம் செய்ய, ஒரே அமளி. தப்பித்தது தம்பிரான் புண்ணியமாகிவிட்டது.
செல்வத்துக்கும், சோமுவுக்கும் ·பாக்டரியில் வேலை கொடுத்துவிட்டார் பண்ணையார். அவள் போராட்டம் ஓரளவு வெற்றி பெற்றதே போதும். அவள் முடிவுக்கு வந்து விட்டாள்.
"ஏம்பா, பழனி பிள்ளைகளுக்கு ·பாக்டரியிலே வேலை கொடுத்திருக்கறீங்க? இதே போல ஒவ்வொருத்தனும் கேட்க மாட்டன்னு என்ன நிச்சயம்?"
"சும்மாயிருடா நாகு.. குலைக்கிற நாய்க்கு கவுச்சி போடாட்டா மேல விழுந்து பிடுங்கிடும்... ஒங்கப்பன் சுபாவம் நீ தெரிஞ்சுக்கலே. அந்தப் புள்ளைங்களை படிக்க அனுமதிச்சது முதல் குத்தம். ஓசிப் படிப்புதானேன்னு நினைச்சேன்..."
"தலையைச் சுத்தி மூக்கைத் தொடற மாதிரி துளியூண்டு தாவணி... அதை கலாட்டா பண்ணச் சொல்லி..."
"யானையைக் கொல்ல அதுங்காதுலே புகுந்த எறும்பு போதுண்டா... பெரிய வில்லாலே ஒண்ணும் அகாது. அம்பு முனையிலே வைக்கிற இரும்புத் துண்டுக்குத்தான் மதிப்பு. உனக்கு அனுபவம் பத்தாது !"
"நிஜமாகவே பொன்னி அல்வா கணக்கா இருக்கா..."
"டேய், நீ மூணு பிள்ளைக்குத் தகப்பன்..."
"ஆனாலும் அடங்கலியே..."
"பொறுமையா இரு... பொன்னி உனக்குத்தான் !" புலியின் வெறி நாகலிங்கத்தின் கண்களில் மின்னியது.
(தொடரும்)
|