முப்பாட்டனின் கண்கள் சிவந்து போய் விட்டிருந்ததை ரியர் வியூ கண்ணாடியில் கந்தசாமியால் பார்க்க முடிந்தது.
" ... 'ற'-ல வெளி வந்திருக்கிற அந்தக் கதைக்கு எவ்வளவு பணம் தருவாங்க? " என்ற மிகச் சாதாரணமான கேள்வியைத்தான் கேட்டான்.
" நிறுத்துடா பைக்கை... " என்று சீறி விட்டான் முப்பாட்டன். " இப்படி ஒரு கேவலமான கேள்வியைக் கேப்பேன்னு தெரிஞ்சிருந்தா உன் கூட நான் பைக்ல வந்திருக்க மாட்டேன். என்னை இங்கயே இறக்கி விட்டுட்டு நீ போயிடு. "
முப்பாட்டனின் உடம்பு ஏனோ நடுங்கிக் கொண்டிருந்ததையும், உஷ்ணம் அதிகரித்திருந்ததையும் தோள்ப்பட்டையைப் பிடித்திருந்த அவனது உள்ளங்கையின் மூலமாகக் கந்தசாமியால் உணர முடிந்தது.
அவன் கத்தினான் என்பதற்காக கந்தசாமி உடனடியாய் பைக்கை நிறுத்தி விடவும் இல்லை. ஆனால் கொஞ்சம் திகைத்துப் போயிருந்தான். பதிலுக்குக் கோபம் கொள்ளுவதைக் காட்டிலும், அந்த விநோதமான கோபத்துக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டான்.
" நான் ஏதாவது தப்பாக் கேட்டுட்டேனா முரளி? "
" பொருள் சார்ந்த உலகத்தில் வாழ்ந்துட்டிருக்கிற உன்னைச் சார்ந்து நான் புறப்பட்டேன் பாரு... அதான் தப்பு. லெளகீகத்தை நோக்கிப் போய்ட்டிருக்கிற நீ இதைத் தவிர வேறென்ன கேப்பே... "
காலேஜில் படிக்கிற வரைக்கும் இப்படிப்பட்ட கரடுமுரடான சில வாக்கியங்களை எப்போதாவதுதான் பயன்படுத்துவான் முரளி. ஆனால் இப்போதெல்லாம் பத்து நிமிஷத்தில் ஐந்து முறை அப்படிப் பேசுகிறான்.
இது குறித்தும் சொல்லத்தான் நினைத்தான். ஆனால் அவனுடைய இன்னொரு கோபத்துக்கு பயந்து பழைய விஷயத்தையே இன்னும் கொஞ்சம் விபரமாகக் கேட்டான்.
" எனக்கென்னடா தெரியும். நீதான் எழுத்து எனக்குத் தொழில்... அப்படி இப்படின்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீராவேசமா சொன்னே. கதை எழுதினா பணம் கிடைக்கும்ன்னுதான் நான் நினைச்சேன். "
" என்னைப் பொறுத்த வரைக்கும் பணம் ஒரு அற்பமான விஷயம் . நீ மதிப்புக் குடுத்தாத்தாண்டா அது பணம். இல்லைன்னா வெறும் காகிதம். அதுவும் இடத்துக்கு இடம் மாறக் கூடியது. அந்தக் காகிதத்தை வெச்சு இங்கே நீ அஞ்சு கிலோ உளுத்தம்பருப்பு வாங்குவே. இங்கிலாந்துல அதே காகிதத்தைக் காட்டி கடலை மிட்டாய் கூட வாங்க முடியாது. "
கந்தசாமிக்கு ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது. நிறையவே புரியாத மாதிரியும் இருந்தது. அவன் சொல்லியதில் அவனுக்கு விளங்காததைக் கேள்வியாய் மாற்றிக் கேட்பதற்குக் கூட தெரியாமல் போகவே, இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்தி விடுவது நல்லது என்று நினைத்து, " பிலிம் சேம்பர் ஹாலுக்கு லெப்ட்ல திரும்பணுமா, இல்லை ரைட்லயா? " என்றான்.
" பாலத்தை ஒட்டி லெப்ட்ல போயி மறுபடி லெப்ட்ல திரும்பணும். விழா ஆறு மணிக்கு ஆரம்பிச்சிருவாங்க. "
" என்ன விழா? "
" புத்தக வெளியீட்டு விழா. "
" என்ன புஸ்தகம்? "
" முன்னிரவில் தொலைந்த பனித்துளிகளும், முற்றத்துக் கட்டிலின் உடைந்த காலும், ஒரு தெருநாயும். "
" என்ன புஸ்தகம்? "
" அதான் சொன்னேனே? "
" புஸ்தகத்தோட பேரைக் கேட்டா உடைஞ்ச கால், தெரு நாய்ன்னு என்னவோ சொல்றே... "
" அதான் புத்தகத்தோட பேரு. "
" யாரு எழுதினது? "
" எட்டாம் புலிகேசி. "
" என்னடா முரளி, புக் பேரு எழுதினவர் பேரு எல்லாமே ஒரு மாதிரி எக்குத்தப்பா இருக்கு. எங்கடா இந்தப் பேரெல்லாம் புடிக்கறிங்க ? "
முப்பாட்டன் கந்தசாமியை லேசாய் முறைத்தான். " என்ன கிண்டலா? பொறுமையா பதில் சொன்னா நீ இதுவும் கேப்பே, இன்னமும் கேப்பே. எட்டாம் புலிகேசி மாந்த்ரீக யதார்த்தவாதத்தில் பின்னு பின்னுன்னு பின்னுவார். "
என்னது, மாந்த்ரீக யதார்த்தவாதமா ? என்று கந்தசாமி கேட்கும் முன்பாகவே முப்பாட்டன் சலிப்புடன் சொல்லி விட்டான்.
" ஹ்ம். இலக்கியம்ன்னா லிட்டர் என்ன விலைன்னு கேக்கற உன் கிட்டே போய் நான் இதையெல்லாம் பேசிட்டிருக்கேன் பாரு. "
பிலிம் சேம்பர் ஹாலின் முன்னால் பைக்கை நிறுத்தினான் கந்தசாமி. பேனர்கள் காற்றில் ஆடின. ஆங்காங்கே திட்டுத் திட்டாய் ஆண்களும், பெண்களுமாய் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
கந்தசாமிக்கு ஆச்சரியமாய் இருந்தது. விழா என்றால் கல்யாணம், காதுகுத்து மட்டும்தான் அவனுக்குத் தெரியும். இப்படி எல்லாம் கூட சில விழாக்கள் நடைபெறுகிறதா? அதற்கு மனிதர்கள் கூடுகிறார்களா? இது நடைபெறும் என்று எப்படி இவர்களுக்குத் தெரியும்?
" தாங்க்ஸ் கந்தசாமி. பஸ் பிடிச்சு வீட்டுக்கு வந்துடறேன். நான் இங்கதான் வந்திருக்கேன்னு யார் கிட்டேயும் மூச்சுக் காட்டாதே. " முப்பாட்டனின் குரல் கந்தசாமியின் யோசனையைக் கலைத்தது.
கந்தசாமி பைக்கை ஸ்டாண்ட் போட்டான். ஹாலை நோக்கி நடந்து செல்லும் முப்பாட்டனை அவசரமாய்க் கூப்பிட்டான்.
" முரளி, ஒரு நிமிஷம் நில்லு. நானும் உள்ளே வந்து புஸ்தக வெளியீட்டு விழாவைப் பார்க்கலாமா? "
(தொடரும்)
|