" ஏய் யாரப்பா நீ ? "
கேள்வி எழுப்பிய முப்பாட்டனைப் பார்த்து மேடையிலிருந்த ஒருவர் ஆத்திரமாய்க் குரல் கொடுக்க முயல - ஏக்நாத்குமார் சட்டென மைக்கை பொத்தி விட்டதால் அந்தக் குரல் மேடையோடே அமுங்கி விட்டது.
அந்த கோபக்காரரை அமைதியாய் இருக்கும்படி சைகை செய்து விட்டு, நிதானமாய் முப்பாட்டனைப் பார்த்தார் ஏக்நாத்குமார்.
" என் கிட்டே என்னப்பா கேக்கணும் ? கேளு. "
" நீ ஒரு போலி எழுத்தாளன். தமிழ் எழுத்துலகுக்கு வந்த சாபக் கேடு. உன் கதைகளைப் படிக்கிறதாலதான் மக்களோட இலக்கியத்தரம் தாழ்ந்துக்கிட்டே போயிட்டிருக்கு. "
" தம்பி பெருங்கிழவனார்... "
" என் பேர் முப்பாட்டன். "
" ஓ ஐயாம் ஸாரி முப்பாட்டன். என்னோட எழுத்து மக்களுக்குப் பிடிச்சிருக்கு. படிக்கிறாங்க. ஏன் பொறாமைப்படறிங்க. "
" உன்னைப் பார்த்து நான் ஏன்யா பொறாமைப்படணும்? மக்களுக்குப் பிடிக்குதுன்னு கள்ளச் சாராயத்தை ஊத்தி ஊத்திக் குடுப்பியா? "
ஏக்நாத்குமார் கடைபிடித்த நிதானத்துக்கு முற்றிலும் எதிராக முப்பாட்டன் பயங்கர படபடப்போடு ஏகவசனத்தில் கத்தியதைப் பார்த்து மிரண்டு போனான் கந்தசாமி.
" ஏய் உக்காருடா. உக்காரு. என்ன கலாட்டா பண்ணலாம்ன்னு வந்திருக்கியா? "
பல திசைகளிலிருந்தும் குரல் கிளம்பி வர, கந்தசாமி முப்பாட்டனின் கையைப் பிடித்து உட்கார வைக்க முயன்றான். ஆனால் அவன் திமிறிக் கொண்டு நின்றான்.
ஏக்நாத்குமார் அப்போதும் பொறுமையாகவே பதிலளிக்க முயன்றார்.
" தம்பி முப்பாட்டன். இந்த மாதிரி விதண்டாவாதம் பண்ணிட்டிருந்திங்கன்னா கடைசி வரைக்கும் நீங்க அந்த கடைசி வரிசைலதான் உக்காந்திருக்கணும். நான் எழுதறது இலக்கியமோ இலக்கியம் இல்லையோ... நான் சொல்ல வந்த விஷயம் பளிச்ன்னு மக்களுக்குப் புரியும். நீங்க பெருசு பெருசா இலக்கியமே படைங்க. ஆனா மக்களுக்குப் புரியும்படியா எழுதுங்க. "
" யோவ், ஆப்ட்டரால் நீ ஒரு எழுத்து வியாபாரி. உன்னோட அறிவுரை எனக்குத் தேவையில்லை. உன்னோட புத்திசாலித்தனத்தை முட்டாள் வாசகர்கள் கிட்டே காட்டு. என்னை மாதிரி உலக இலக்கியத்தை கரைச்சுக் குடிச்சவங்க கிட்டேயும், எங்களோட எலிட் வாசகர்கள் கிட்டேயும் உன்னோட பம்மாத்து பலிக்காது. "
ஏக்நாத்குமார் இன்னமும் பொறுமையிழக்காமல் அவனுக்கு பதிலளிக்க முயன்ற போது, மேடையில் இருந்தவர்கள் கடும் பரபரப்புக்கு ஆளானார்கள்.
" ஸார், நீங்க அவன் கிட்டே பேச வேண்டாம். அந்த ஆளை நாங்க பார்த்துக்கறோம். "
எட்டாம் புலிகேசி தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
இதற்குள் தடித்தடியாய் இருந்த நாலைந்து பேர் முப்பாட்டனை சூழ்ந்தார்கள். அதில் ஒருவர் போலிஸ் க்ராப் வைத்திருந்தார்.
" மரியாதையா நீ வெளியே போறியா? இல்லேன்னா உள்ளே தள்ளுவோம். "
" என்ன மிரட்டறிங்களா? நான் இலக்கியவாதி. நமனையும் அஞ்சேன் ! நான் வெளியே போக மாட்டேன். என்ன செய்விங்க? "
முப்பாட்டனின் பிடரியில் கையை வைத்து ஒரு தள்ளுத் தள்ளினார் அந்த நபர்களில் ஒருவர்.
முப்பாட்டன் தடுமாறி விழப் போக, கந்தசாமி அவனைத் தாங்கிப் பிடித்தான்.
" ஸார், இவன் என் ஃப்ரெண்ட்தான். தெரியாம பேசிட்டான். அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். விட்டுருங்க. "
முப்பாட்டன் சீறினான். " நீ எதுக்குடா மன்னிப்புக் கேக்கற? "
போலிஸ் க்ராப், " அவனை மன்னிப்புக் கேக்கச் சொல்லு. " என்று சொல்லிக் கொண்டே ஆக்ரோஷமாய்க் கையை ஓங்க, கந்தசாமி அவர் கையை தடுத்துப் பிடித்தான்.
பிடரியைப் பிடித்து அவனை வெளியே தள்ள முடிவு செய்திருக்கிறார்கள் என்று கந்தசாமிக்குப் புரிந்தது. அப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தைத் தவிர்க்கும் முகமாய் அவனை அரவணைத்து நின்றான். " வேணாம் ஸார். வீணா அடிதடி வேணாம். நான் இவனை வெளியே கூட்டிட்டுப் போறேன். "
கந்தசாமியின் ஜிம் பாடிக்கு அவர்களும் கொஞ்சம் மரியாதை கொடுத்தார்கள். " கூட்டிட்டுப் போயிடுங்க. விழா ஸ்மூத்தா நடக்கணும். இல்லேன்னா ஏடாகூடமாயிடும். "
துள்ளுகிற முப்பாட்டனை கஷ்டப்பட்டு அடக்கி, தன் கட்டுப்பாட்டில் மெதுவாய் வெளியே நகர்த்திப் போனான் கந்தசாமி.
இருக்கைகளைக் கடந்த போது, சலசலப்பாய்க் குரல்கள் கேட்டன.
" தண்ணி அடிச்சிட்டு வந்திருப்பான் போலருக்கு. "
" அவரை சாதாரணமா நினைச்சுக்காதிங்க. இந்த வார 'ற'-ல கதை எழுதியிருக்காரு. " என்ற மாங்கனியின் குரலும் கேட்டது.
(தொடரும்)
|